மேஷம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
New Delhi

2022 குருப்பெயர்ச்சி பலன்கள் : வீரமான மேஷராசியினரே.. இதுவரை ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்த குருபகவான் இனி

Published On 2022-03-16 12:39 GMT   |   Update On 2022-03-16 12:40 GMT

வீரமான மேஷராசியினரே.. இதுவரை ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்த குருபகவான் இனி பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்குச் செல்கிறார். சனி பகவான் பத்தாம் இடத்தில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். இரண்டாமிடத்தில் ராகுவும் எட்டாமிடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

மேஷ ராசிக்கு குரு ஒன்பது மற்றும் பனிரென்டாம் அதிபதி. அதாவது பாக்கியாதிபதி, விரயாதிபதி. லாப ஸ்தானத்தில் குரு சஞ்சாரம் செய்வது சுபித்துச் சொல்லக்கடிய பலன். ஆனால் விரையாதிபதியாகி லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பது சுபம் அல்ல. மேலும் லாப ஸ்தானமே பாதகஸ்தானமாக இருப்பதால் சாதகமும், பாதகமும் கலந்த பலனே உண்டு. குரு நின்ற இடத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் மத்திமப்பட்டாலும் பார்வை பதியும் இடங்களான மூன்று, ஐந்து, ஏழாம் இடங்கள் மூலம் ஏற்றமான பலன்கள் உண்டு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

லாப குருவின் பலன்கள்: பாக்கியாதிபதி உப ஜெய ஸ்தானத்தில் அமர்வதால் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் அனைத்துவிதமான அதிர்ஷ்டங்களும் தேடி வரும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். மனக் குழப்பம் விலகி நிம்மதியும் மகிழ்சியும் அதிகரிக்கும். மனதை வாட்டிய அனைத்துப் பிரச்சனைகளும் ஒவ்வொன்றாக தீரும். நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

தந்தையின் ஆசியும், ஆஸ்தியும் கிடைக்கும். தந்தை எழுதும் உயில் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். தடையாக இருந்த மூத்த சகோதரர் விட்டுக் கொடுப்பார். உடன் பிறந்த சகோதர, சகோதரி வகையில் ஒத்துழைப்பும் சகாயமும் உண்டாகும். வயது முதிர்ந்தவர்களுக்கு பேரன், பேத்தி கிடைக்கும்.

வேலை பளு அதிகம் இருந்தாலும் உழைத்த வருமானத்தைத் பார்த்த உடன் தெம்பு வரும். நிரந்தர வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். கொரோனாவால் வேலை இழந்த வர்களுக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை மகிழ்விக்கும் விதமாகவே இருக்கும். சிலருக்கு கம்பெனியின் மூலம் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைக்கும். உடன் வேலை பார்ப்பவர்களிடையே நல்லிணக்கம் நீடிக்கும். அரசாங்க வேலையில் மெமோ வாங்கியவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும்.

தொழிலில் சாதனை செய்யக் கூடிய புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதி ஏற்படும். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.

தொழிலதிபர்களுக்கு அரசின் மானியம் மற்றும் உதவி கிடைக்கும்.அதன் மூலம் அதிர்ஷ்ட வருமானம் கிடைக்கும். தொழில், பங்குச் சந்தை என வருமானம் வரும் வழியை கணக்கிட முடியாது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். பழைய கூட்டாளிகளிடமிருந்த மனக்கசப்பு மாறும்.

நல்ல பணப்புழக்கம் ஏற்படும். பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். கடன் தொல்லை குறைய ஆரம்பிக்கும். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் திணறியவர்களுக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் மகிழ்ச்சி தரும்.

குறுகிய காலத்தில் எதிர்பார்க்காத பல மாற்றமும், முன்னேற்றமும் தேடி வரும். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆடம்பர வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி வீட்டை விருப்பம் போல் அழகுபடுத்துவீர்கள்.

விரயாதிபதியாகி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் 2.3.2022 முதல் 13.4.2021 வரை சிந்தித்து நிதானத்துடன் செயல்பட வேண்டும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கிடைத்த ஆதாயம், சலுகைகள், முன்னேற்றம் தடைபடும். எதிர்பாராத இழப்புகள் துயரத்தில் ஆழ்த்தும். அண்டை அயலாருடன் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மன சஞ்சலத்தை மிகுதிப்படுத்தும். தந்தை வெளிநாடு செல்வார்.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு மதம் மாறும் எண்ணம் மேலோங்கும். சுய ஜாதகத்தில் எட்டு, பனிரென்டாம் இடத்துடன் சம்பந்தம் பெறும் தசை, புத்தி அசுபத் தன்மையுடன் நடப்பவர்களுக்கு சிறை தண்டனை கிடைக்கலாம். கைகால், மூட்டு வலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் இருக்கும். கண் பார்வைக் குறைபாடு, புறை வளர்தல் போன்ற பாதிப்புகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரிடும்.

கோட்சாரத்தில் எட்டாமிடத்தில் சனியின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் கேதுவால் எதிர்பாராத புதிய கோர்ட், கேஸ் வம்பு வழக்கு உருவாகலாம். வயோதிகர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம் பற்றிய சிந்தனை பய உணர்வு இருக்கும்.

வெகு சிலருக்கு விபரீத ராஜ யோகமாக திடீர் தனலாபம், உயில் சொத்து கிடைக்கும். லாப ஸ்தானத்தில் நின்று குரு கொடுக்கும் பலன்களை எட்டாமிட கேது தட்டிப் பறிக்க முயன்றாலும் வெற்றி உங்களுக்கே என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஐந்தாம் பார்வை பலன்கள்: உப ஜெய ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு குருவின் ஐந்தாம் பார்வை இருப்பதால் சிறிய முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும். புகழ், அந்தஸ்தை, உயர்த்தக்கூடிய கவுரவப் பதவிகள் தேடிவரும். இதுவரை திருமணம் பற்றிய சிந்தனை இல்லாதவர்களுக்கும் திருமண ஆசை வரும். மேஷ ராசி குழந்தைகளுக்கு இளைய சகோதரம் பிறக்கும். நிலையான வேலையில்லாத இளைய சகோதரத்திற்கு நிரந்தர வேலை கிடைக்கும், திருமணம் நடக்கும்.

தகவல் தொடர்பு, பத்திரிக்கை மற்றும் ஐடி துறையில் உள்ளவர்களுக்கு ஏற்றம் உண்டு. அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும்.வெகு சிலருக்கு மாமனார் மூலம் தொழில் விருத்தி திடீர் அதிர்ஷ்டம் உண்டு. ஞாபக சக்தி அதிகரிக்கும். சொத்துப் பத்திரம், உயில் பத்திரம், ஜாமீன் பிரச்சனை, போன்றவற்றில் இருந்த சர்ச்சைகள் அகலும்.கண் மறைவாக இருந்த தொலைந்த ஆவணங்கள் கிடைக்கும்.

அடகு வைத்த நகைகள் மீண்டு வரும். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் பழைய வீட்டை நவீன வசதிகளுடன் மாற்றி கட்டுவீர்கள். காது, மூக்கு தொண்டையில் இருந்த குறைபாடுகள் வைத்தியத்தில் கட்டுப்படும். வெகு நாட்களாக இழுபறியாக இருந்த நீதிமன்ற வழக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக முடியும்.

ஏழாம் பார்வை பலன்: குருவின் ஏழாம் பார்வை ஐந்தாம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை பெறும். உடலுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்வு கிடைக்கும்.

இதுவரை ஆழ்மனதில் இருந்த நிறைவேறாத நியாயமான ஆசைகள் நிறைவேறும். திட்டங்கள் வெற்றியடையும். வீட்டில் பிள்ளைகளுக்கு திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற சுப காரியங்கள் நடக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமை அடைவீர்கள். இளம் தம்பதிகளுக்கு புத்திர பிராப்த்தி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு அரசியலில் மிகப் பெரிய பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். பதவியுடன் பெரும் பணமும் கிடைக்கும். தேர்தல் காலத்தில் கொடுத்த நிறைவேற்ற முடியாத வாக்குறுதியால் பொதுமக்களின் அதிருப்தியையும் வம்பு வழக்கையும் சந்திக்க நேரும்.

பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். குல, இஷ்ட தெய்வப் பிரார்த்தனை நிறைவேறும். சிலருக்கு மத போதனையில் ஆர்வம் பிறக்கும். வெகு சிலர் நல்ல மடத்தில் போய் சந்தியாசியாக செட்டில் ஆகிவிடுவார்கள். ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் ஏற்படும். மாணவ மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்ணையும் பாராட்டையும் பெறுவீர்கள்.பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவும் ஆலோசனையும் புத்துணர்வு தரும் விதமாக இருக்கும்.வேற்று மொழியை பிரதானமாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

கல்லூரி மற்றும் முதுகலை பட்டப் படிப்பு, ஆராய்ச்சி கல்வி படிப்பவர்களுக்கு சாதகமான காலம். கலைத்துறையினருக்கு விரும்பிய வாய்ப்புகள் தேடி வரும்.

ஒன்பதாம் பார்வை பலன்கள்: குருவின் ஒன்பதாம் பார்வை ஏழாம் இடத்தில் பதிகிறது. சனியின் பார்வையும் ஏழாம் இடத்திற்கு இருப்பதையும் மறக்க கூடாது. 2ல் ராகு 8ல் கேது இருப்பதால் திருமணத் தடை ஏற்படும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். வேற்று மொழி பேசும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

குடும்பத்தை விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். உறவினர்கள், சம்பந்திகள் வகையில் சந்தோஷமும், சகாயமும் ஏற்படும். கமிஷன் ஏஜென்சி, டிராவல்ஸ், ஷேர் டிரேட், வெளிநாட்டு வேலை வாங்கித் தரும் நிறுவனங்கள், வங்கிகள் ஏற்றம் பெறும்.

இல் வாழ்க்கை இனிமையாகும். தம்பதிகளிடையே நிலவிய கருத்து வேறுபாடு குறையும். வேலை இல்லாமல் இருந்த வாழ்க்கை துணைக்கு விரும்பிய வேலை கிடைக்கும். தொழில் உத்தியோகம் காரணமாக வெளிநாடு அல்லது வெளி மாநிலம் செல்ல நேரும். தந்தையின் ஆரோக்கியம் சீராகும். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடு குறையும். பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டில் காரிய சித்தி கிடைக்கும். பல தலைமுறையாக தீர்க்கப்படாத பித்ருக்கள் தோஷத்தை சுய ஜாதக வலிமை பார்த்து தில ஹோமம் செய்து சரி செய்ய ஏற்ற நேரமாகும்.

பெண்கள்: பிறந்த மற்றும் புகுந்த வீட்டின் ஆதரவு மகிழ்சியை தரும். நீண்ட நாள் சுய தொழில் கனவு பலிதாமாகும்.எதிர்பார்த்த பிறந்த வீட்டு சொத்து வந்து சேரும். காணாமல் போன பொருட்கள் கிடைக்கும். அடமானப் பொருட்கள் மீண்டு வரும். கணவர் தங்க ஆபரணங்கள் மற்றும் அழகு ஆடம்பர பொருட்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்விப்பார்.

கணவரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆக இந்த குருப்பெயர்ச்சியில் மேஷ ராசியினரின் வயதிற்கும், தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ப அபரிமிதமான சுபபலன்கள் உண்டு.

பரிகாரம்: வீடு மற்றும் தொழில் நிறுவனத்தில் குல தெய்வத்தின் படம் வைத்து வழிபட வெற்றி வாய்ப்பு மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வியாழக்கிழமை பகல் 12 &- 1 வரையான சனி ஒரையில் சிவனடியார்களுக்கு இயன்ற உணவு தானம் செய்து வரவும். அதே நேரத்தில் அந்தணர்களுக்கு தானியங்கள் மற்றும் வஸ்திர தானம் தர மேன்மை உண்டாகும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News