மேஷம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
null

குருபெயர்ச்சி பலன்கள் 2023

Published On 2023-04-15 11:09 GMT   |   Update On 2023-04-15 13:35 GMT

வீரமான மேஷ ராசியினரே மேஷ ராசிக்கு குருபகவான் பாக்கியாதிபதி மற்றும் விரயாதிபதி. இதுவரை 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் ராசிக்குள் அடியெடுத்து வைக்கிறார். அக்டோபர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

ஜென்ம குருவின் பலன்கள் :

பாக்கியாதிபதியான குரு ராசியில் சஞ்சாரம் செய்வது சிறப்பு. அதுவும் 10, 11ம் அதிபதி சனியின் பார்வை பெறுவது தர்ம கர்மாதிபதியோகம். விரயாதிபதி குரு ராசியில் உள்ள ராகுவுடன் சேருவதால் செப்டம்பர் 30 வரைத் சுபத் தன்மை சற்று மட்டுப்படும். அதன் பிறகு பொறுமையும், திறமையும் மிளிரும். மனத் தடுமாற்றம் நீங்கும். விவேகத்துடன் செயல்படுவீர்கள்.

நிதானம், தைரியம், தெம்பு குடிபுகும்.வெளியில் சொல்ல முடியாமல் தவித்த பல பிரச்சனைகள் குறையத் துவங்கும். கடந்த கால கசப்பான அனுபவங்கள், நிகழ்வுகளில் இருந்து விடுபடுவீர்கள். வங்கிகள், நிதி நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் நடத்துபவர்களுக்கு தொழில் வளர்ச்சி இரட்டிப்பாகும்.இதில் பணிபுரிபவர்களுக்கு தனித் திறமை வெளிப்பட்டு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

தந்தைவழி ஆதாயமும் அனுகூலமும், பூர்வீகச் சொத்தும், முன்னோர்களின் நல்லாசியும் நிரம்ப பெறுவீர்கள்.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.கோவில் கட்டுதல், கும்பாபிசேகம் செய்தல், கல்வி நிறுவனம் துவங்குதல், தான தர்மம் செய்தல் போன்ற பாக்கிய காரியங்கள் செய்யும் ஆர்வம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கையில் விருப்பம் அதிகரிக்கும். இதுவரை சட்டத்திற்கு புறம்பாக வாழ்ந்தவர்கள் உண்மையையும், நேர்மையையும், சத்தியத்தையும் கடைப்பிடிப்பார்கள். மன சஞ்சலம் தீய எண்ணங்கள் குறைந்து நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்:

குருவின் 5ம் பார்வை ராசிக்கு 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது. இந்த இடத்திற்கு சனிப் பார்வையும் இருப்பதால் அதிர்ஷ்டத்தாலும், யோகத்தாலும், சுயமுயற்சியாலும் முன்னேற்றம் உண்டாகும். குலதெய்வ அனுகிரகம் உண்டு. குடும்ப பெரியோர்களின் வாழ்த்தும், ஆசிர்வாதமும் கிடைக்கும்.சாதாரண குடும்பமாக இருந்தாலும் இதுவரை எந்த வளர்ச்சியும் இல்லாதவர்களுக்கும் பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். பெரும் வாழ்வியல் மாற்றம் ஏற்படப்போகிறது. இதுவரை குழந்தையே பிறக்காது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கும் குழந்தைப் பேறு உண்டாகும். குல கவுரவமும் சமுதாய அந்தஸ்தும் உயரும். பிள்ளைகளால் ஏற்பட்ட கெளரவ குறைச்சல் நீங்கும். பிள்ளைகளுக்கு முன்னேற்றமான வாழ்க்கை கிடைக்கும். தடைபட்ட சுப நிகழ்வுகள் ஒவ்வொன்றாக நடக்கத் துவங்கும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:

குருவின் 7ம் பார்வை ராசிக்கு ஏழாமிடத்தில் பதிகிறது. ஏழாமிடம் களத்திரம், நண்பர்கள், தொழில் பங்குதாரர் மற்றும் சம்பந்திகள் பற்றிக் கூறுமிடம். இதுவரை மகன், மகளுக்கு நல்ல வரன் அமையவில்லை என்று வருந்தியவர்களுக்கு பிள்ளைகளுக்கு திருமணம் நடத்திப் பார்க்கும் பாக்கியம் கிட்டும். உங்களை வேதனைப்படுத்திய சம்பந்தி இணக்கமாக பழகுவார்கள். சிலருக்கு சமுதாய அந்தஸ்து நிறைந்த நல்ல நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் அல்லது தொழில் கிளைகள் துவங்கும் சந்தர்ப்பம் உருவாகும். கூட்டுத் தொழிலில் நிலவிய மனக்கசப்புகள் விலகி உற்சாகமும், நம்பிக்கையும் துளிர் விடும். நல்ல தகுதியும், திறமையும் நிறைந்த புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.தொழில், உத்தியோகத்திற்காக அல்லது கருத்து வேறுபாடு காரணமாக வெவ்வேறு இடங்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகள் இப்போது சேர்ந்து வாழத் துவங்குவார்கள். மனக்குழப்பங்கள் விலகி வாழ்க்கைப் பயணம் சுமூகமாகும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:

குருவின் 9ம் பார்வை ராசிக்கு ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிவதால் நடை, உடை, பாவனைகளில் கம்பீரம் உண்டாகும். தந்தையின் முழு ஆசிர்வாதமும், ஆதரவும் கிடைக்கும்.இதுவரை சொந்த வீடு, சொத்து இல்லாதவர்களுக்கு, வசதி இல்லாத வீட்டில் வசித்தவர்களுக்கு மன நிறைவான சொத்துக்கள் கிடைக்கும். வாகன வசதி மேம்படும். வயோதிகர்களுக்கு பேரன், பேத்தி பிறப்பார்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் சந்தர்ப்பம் கிடைக்கும்.பெற்றவர்கள், உடன் பிறந்தவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்து பிறவிப்பயன் அடைவீர்கள். பூர்வீகச் சொத்துக்களை அனுபவிக்கும் பாக்கியம் கிட்டும். புனிதயாத்திரை, புனித நீராடல் மனதிற்கு ஆன்மாவிற்கும் புத்துணர்வு கொடுக்கும்.

அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.4.2023 முதல் 21.6.2023 வரை

கோட்சாரத்தில் ராசிக்கு ஏழில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் புதிய ஒப்பந்தங்கள் செயலாக்கம் பெறும். சமூக அந்தஸ்து அதிகமாகும். ஈடுபடும் காரியம் மனதிற்கு உத்வேகம் கொடுக்கும்.அடிவயிறு தொடர்பான உடல் உபாதைகள் சிகிச்சையில் பூரண குணமாகும். பகைவர்கள் விலகுவர்கள். வம்பு, வழக்குகளில் வெற்றி உண்டாகும். ஏழாமிட கேதுவால் விவகாரத்து வரை சென்ற தம்பதிகள் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். புதிய கடன்களைத் தவிர்ப்பது நல்லது.

பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.6.2023 முதல் 17.4.2024 வரை

மேஷ ராசிக்கு 2,7ம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் போராட்டமே அன்றாட வாழ்க்கையாக இருந்த நிலை மாறி மனதில் குதூகலம் கூடும். உற்றார், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் நிலவிய கருத்து வேற்றுமை விலகி ஒற்றுமை மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு ஆதரவு மன மகிழ்ச்சியை தரும்.குடும்பத்தில் அமைதி நிலவும். ஆனந்தம் உண்டாகும். பணவரவில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும். குடும்பத்திற்கு தேவையான ஆடை, ஆபரணங்கள் பொன், பொருள் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். ராசியில் உள்ள ராகுவால் ஏற்பட்ட உடல் உபத்திரங்கள் நீங்கும்.

கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை

மேஷத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பட்டது பூக்கும். தொட்டது துளிர் விடும். பங்குச்சந்தை, இன்சூரன்ஸ், தொழில் மூலம் அதிர்ஷ்ட வருமானம் கிடைக்கும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும்.கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.முக்கிய விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் இருந்து வந்த தயக்கம் நீங்கி தீர்க்கமான முடிவு எடுக்கும் மன உறுதி அதிகரிக்கும். சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணையை சந்திப்பார்கள்.

குருவின் வக்ர பலன்கள்:

4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் சுய ஜாதகத்தில் ஒன்பதாமிடம் அசுப பலம் பெற்றால் பாரம்பரியத்தை கடைபிடிக்க தவறுவார்கள். முன்னோர்களின் நல்லாசி குறைவுபடும். தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களுடன் சண்டை சச்சரவு மிகுதியாக இருக்கும்.

திருமணம் :

திருமணமாகாதவர்களுக்கு திருமண நாள் நெருங்கி விட்டது. ராசிக்கு ஏழாம் இடத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால் கோட்சார ராகு, கேதுவால் ஏற்பட்ட திருமணத் தடை அகலும். பெற்றோர்கள், பெரியோர்கள் ஆசிர்வாதத்தால் குரு பலத்தாலும் திருமணம் நல்ல முறையில் நடக்கும். சிலருக்கு மறு திருமணமும் நடக்கும்.

பெண்கள்:

பெண்களுக்கு குடும்ப பொறுப்புகளால் வேலைப் பளு அதிகரிக்கும். உறவுகளுக்கு உங்கள் மேல் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சில பெண்களுக்கு மாதர் சங்கங்களில் கவுரவப் பதவி கிடைக்கும். எங்கும், எதிலும் முன்னிலை வகிப்பீர்கள். உடல் எடை அதிகரிக்கும். வசீகரம் கூடும்.கணவன், மனைவி உறவில் நெருக்கம் கூடும். நீண்டகால ஆசைகள் நிறைவேறும்.

மாணவர்கள்:

போட்டி, பந்தயங்களில் ஜெயம் உண்டாகும். கல்வியில் அபாரமான முன்னேற்றமும், ஆர்வமும், திறமையும் அதிகரிக்கும். படிப்பிற்கு பெற்றோர்கள், ஆசிரியர்களின் உதவியும், ஆதரவும் திடைக்கும். 5,9மிடத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால் தடைபட்ட உயர் கல்வி முயற்சி இப்போது வெற்றி தரும்.

உத்தியோகஸ்தர்கள் :

உத்தியோகத்தில் உயர்வு கொடுப்பார். நிலையான வேலை, இல்லாதவர்களுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கும். அரசாங்க உத்தியோகம், அரச பதவி கிடைக்கும். எதிர்பாராத சலுகைகளும், கம்பெனி வாகன வசதியும், சம்பள உயர்வும் உண்டு. சக ஊழியர்களின் குற்றம் குறைகளை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது.

ராகு/கேது பெயர்ச்சி :

அக்டோபர் 30, 2023ல் ராகு 12ம் மிடத்திற்கும் கேது 6ம்மிடத்திற்கும் செல்கிறார்கள்.இந்த காலகட்டத்தில் வெளியூர், வெளிநாட்டிலிருந்து வேலை வாய்ப்புகள் வந்து சேரும். தேவையில்லாத வீண் விரயங்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகளுக்காக கடன் பெற வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சிலர் குடும்பத்தை விட்டு குறுகிய காலம் பிரிந்து வாழ்வார்கள்.

பரிகாரம் : அனுபவ அறிவையும் தன்னைத்தானே உணரும் சக்தியையும் ஜென்ம குரு வழங்கப் போகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானமும், பாக்கிய ஸ்தானமும் ஒருங்கே பலம் பெறுவதால் அதிர்ஷ்டம் மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும்.மாதம் ஒரு முறை ஜென்ம நட்சத்திர நாளில் இயன்ற அன்னதானம் அல்லது அன்ன தானத்திற்கு சிறிய காணிக்கையை வழங்கவும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அவல், வெல்லம் படைத்து மனதார வழிபட சகல பீடைகளும் அகலும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News