ஆன்மிக களஞ்சியம்

சீரடி துவாரகாமாயி

Published On 2023-11-27 12:36 GMT   |   Update On 2023-11-27 12:36 GMT
  • ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியன அத்தியாவசியத் தேவைகள்.
  • ஆனால் பாபா உணவை பிச்சை எடுத்து சாப்பிட்டார்.

சீரடி சாயி பாபா இரண்டாவது முறையாக இளைஞனாக சீரடி வந்தபோது மகல்சாபதிதான் அவரை வரவேற்றார்.

அவ்வூர் மக்களுக்கு அவர் ஒரு மஹான் என்பதோ பெரும் ஞானி என்பதோ சத்குரு என்பதோ தெரியவில்லை.

ஆகவே அவர் தங்க இடம் கேட்டபோது அவரை சிதிலம் அடைந்த மசூதிக்கு அனுப்பினார்கள்.

ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியன அத்தியாவசியத் தேவைகள்.

ஆனால் பாபா உணவை பிச்சை எடுத்து சாப்பிட்டார். கிழிந்து போன உடை, இடிந்து பாழாய்ப் போன ஒரு மசூதி.

இவற்றுக்காக ஏதும் முணுமுணுத்தாரா? அவருக்கு எல்லாம் சமம்தானே! நாளாவட்டத்தில் அந்த மசூதி கொஞ்சம் கொஞ்சமாக சீர்திருத்தப்பட்டது.

பாபாவும் அதற்கு துவாரகாமாயி எனப் பெயர் சூட்டினார்.

பாபாவைப் பொறுத்தவரை துவாரகமாயி அன்னையின் ஆலயம்.

அங்கே அமர்ந்தால் ஆபத்துக்கள் தடுக்கப்படும். கவலை ஓடிவிடும்.

கஷ்டங்கள் முடிந்து பேரானந்தம் வரும்.

எனவேதான் பாபா அங்கே அமர்ந்து தனது பக்தர்களுக்குத் தரிசனம் தந்தார்.

அவரை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அது திறந்த வெளி தர்பார்.

ஒளிவு மறைவு என்று ஏதுமில்லை, கெடுபிடியில்லை, எல்லோரும் வரலாம், எளிதாக தரிசனம் பெறலாம்.

Tags:    

Similar News