ஆன்மிக களஞ்சியம்

பூரம் விரத மகிமை

Published On 2023-07-07 15:54 IST   |   Update On 2023-07-07 15:54:00 IST
  • திருமணம் ஆகாத பெண்கள் திருப்பாவையில் தினமும் ஒரு பாடலை பாடி வரவேண்டும்.
  • பூரம் விரதம் போலவே திருவோணம் விரதமும் மகிமை வாய்ந்தது.

ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவள். எனவே ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும்.

திருமணம் ஆகாத பெண்கள் திருப்பாவையில் தினமும் ஒரு பாடலை பாடி வரவேண்டும். பூரத்தன்று ஆண்டாளுக்கு மாலை சார்த்தி வழிபட்டால், உடனே திருமணம் கை கூடும். வாரணம் ஆயிரம் பாடி வந்தால் பெண்கள் விரும்பிய கணவர் கிடைப்பார்.

பூரம் விரதம் போலவே திருவோணம் விரதமும் மகிமை வாய்ந்தது. 12 திருவோணம் நாட்களில் விரதம் இருந்தால் வாழ்வில் செழிப்பின் உச்சத்துக்கே போய் விடுவீர்கள். இது பலரும் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை.

ஒவ்வொரு கோவிலிலும் தல வரலாறுக்கு ஏற்ப கடவுளை வணங்கினால் உரிய பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தலத்தில் ஆண்டாளை வணங்க செவ்வாய்க்கிழமையே ஏற்ற தினமாகும். 8-ம் நூற்றாண்டில் துளசி வனத்தில் ஆண்டாள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டதால் அன்று முதல் செவ்வாய்க்கிழமை வழிபாடு சிறப்பானதாக கருதப்படுகிறது.

ஸ்ரீஆண்டாளுக்கு அரக்கு கலர் புடவை, கற்கண்டு சாதம், தாமரை மலர் ஆகிய மூன்றும் மிகவும் பிடித்தமானவையாகும். ஆண்டாளை வழிபாடு செய்யும்போது இந்த மூன்றையும் கொடுத்து வழிபாடு செய்யலாம். அரக்கு கலர் புடவை 9 கெஜம் இருக்க வேண்டும். மூன்றையும் படைக்க இயலாதவர்கள் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்து ஆண்டாளை வணங்கலாம். அவளது ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை ஆண்டாளை வணங்க இயலாத பட்சத்தில் வெள்ளிக்கிழமை சென்று தரிசிக்கலாம்.

பெரிய பெருமாள் கோவிலுக்கும், ஆண்டாள் கோவிலுக்கும் மத்தியில் துளசி நந்தவனம் உள்ளது. அங்கு ஆண்டாள் தனியே நிற்கும் சன்னதி உள்ளது. இதை ஆடிப்பூரம் தினத்தன்று 108 தடவை சுற்றினால் நினைத்தது நடக்கும்.

மலர்கள் நிறைந்த இந்த சன்னதி மிக மிக அமைதி தரும் சன்னதியாகும். அங்கு சிறிது நேரம் அமர்ந்து சென்றால் மனம் குளுமை ஆவதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

Tags:    

Similar News