search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    புரட்டாசி மாத சனிக்கிழமை விரத மகத்துவம்
    X

    புரட்டாசி மாத சனிக்கிழமை விரத மகத்துவம்

    • நாமக்கட்டிக்கும் தனித்துவம் தரும் மாதம் இது.
    • புரட்டாசி மாதத்தில் தான் திருவேங்கட முடையானுக்கு பிரமோத்சவமும் நடைபெறுகிறது.

    புரட்டாசி மாதம் என்றாலே கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி பாடல் பரவச ஒலி தான் பெருமாள் பக்தர்களின் வீடெங்கிலும் தேவகானமாக பரவும்.

    சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் ஆடை உடுத்தி, திருநாமம் தரித்துக்கொண்டு பெருமாளை மனதிலே நினைத்து வழிபடுவார்கள்.

    நாமக்கட்டிக்கும் தனித்துவம் தரும் மாதம் இது.

    சிலர் தான் நினைக்கும் காரியம் நல்லபடியாக நிறைவேறி விட்டால் திருப்பதிக்கு வருகிறேன் என்றும், இன்னும் சிலர் திருப்பதிக்கு வந்து மொட்டை போடுகிறேன் என்றும் அவர்களால் இயன்ற வேண்டுதல்களை நினைத்து காசை மஞ்சள் துணியில் முடிந்து வைப்பர்.

    சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

    புரட்டாசி மாதத்தில் தான் திருவேங்கட முடையானுக்கு பிரமோத்சவமும் நடைபெறுகிறது.

    மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில்.

    ஆனால் ஸ்ரீபாலாஜியோ, எனக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம் தான் என்கிறார்.

    அதிலும், சனிக்கிழமை தான் தனக்கு உகந்த நாள் என்கிறார் தம் பக்தன் ஒருவனுக்கு அருள் புரிந்த கதையின் மூலமாக இது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

    அந்த நிகழ்வு வருமாறு:

    மன்னன் தொண்டைமானுக்கு மலையப்பன் மீது மாசிலா காதல்.

    எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன் மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான்.

    அதன்படியே பூஜையும் செய்து வந்தான்.

    இவ்விதம் பூஜை செய்து வரும் வேளையில் ஒரு நாள் பொன்மலர்களுக்கு இடையே மண் மலர்களும் வந்து விழுவதை கண்டான்.

    திடுக்கிட்ட அவன், அவை மண் மலர்கள் தானா என கூர்ந்து நோக்கினான்.

    அவை மண் மலர்களால் தான் என்பதை மீண்டும், மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன.

    கதவுகள் அனைத்தும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையை தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது.

    மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது.

    தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.

    குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.

    பிறவிலேயே அவனுக்கு கால் ஊனம்.

    தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் கடவுள் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான்.

    வேங்கடவனும், அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார்.

    பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம்.

    பீமய்யாவும், தனக்கு கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் மாலவனின் உருவத்தை வடித்து மலர்கள் தூவி வழிபட்டு வந்தான்.

    பிரதி வாரம் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யா, பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான்.

    இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும்போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான்.

    அச்சமயங்களில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களிமண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான்.

    காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகிவிட்டது.

    இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டை மான் ஒரு நாள் அபூர்வ கனவொன்றை கண்டான்.

    அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, தமது பக்தன் பீமய்யா செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்த பூஜையை நீயும் சென்று பார், அப்போது உண்மை விளங்கும் என்று கூறி மறைந்தார்.

    தொண்டை மானும், திருமால் குறிப்பிட்டஇடத்துக்கு சென்று பீமய்யா செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனிக்கலானான்.

    அனுதினமும் செய்வது போலவே பீமய்யா தான் வடிவமைத் திருந்த வேங்கடவனின் சிலையருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களை தூவி இறைவனை வழிபடுவதை கண்டான் தொண்டை மன்னன்.

    உடன் பீமய்யாவை சென்று கட்டித்தழுவிய தொண்டைமான் அவனிடம் உன் பக்தி உயர்வான பக்தி, உனது வழிபாட்டை திருமால் ஏற்றுக்கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றான்.

    இதற்கிடையில் அந்த பரந்தாமன் பீமய்யாவின் கனவில் தோன்றி உன் பக்தியின் பெருமையை என்று பிறர் கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்து கொள்வேன் என கூறியிருந்தார்.

    அதன்படியே தொண்டை மான், பீமய்யாவின் பக்தியை பாராட்டியதை கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது.

    புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது.

    Next Story
    ×