என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

லலிதா சகஸ்ரநாமம் பிறந்த வரலாறு ஒரு பார்வை
- உபதேசம் செய்தவரும் சாதாரணமானவர் அல்ல.
- உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல.
அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்.
இதை உபதேசித்தவர்-கயக்ரீவர். உபதேசம் பெற்றவர்- அகஸ்திய முனிவர்.
உபதேசம் செய்தவரும் சாதாரணமானவர் அல்ல.
உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல.
பிரம்மதேவரிவம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு
ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். ஞானத்தின் வடிவமே கயக்ரீவர்.
அப்படிப்பட்டவர், லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார்.
உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது, அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள்.
அதன் காரணமாக, வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்தது.
அப்போது சிவபெருமான் அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்ப, பூமி சமநிலை பெற்றது.
இந்தக் கதை அனைவருக்குமே தெரிந்தது தான்.
ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான் முதல் தேவர்கள் வரை அனைவரும் ஒரு பக்கம் இருக்க அகஸ்தியர் மட்டும் தென்திசை போனார்.
அதனால் பூமி சமநிலை ஆனது என்றால் என்ன பொருள்? அந்தப் பக்கம் இருந்த அவ்வளவு பேருக்கும் சமமானவர் அகஸ்தியர் என்பதுதானே இதன் பொருள்?
அதாவது, அனைத்து தெய்வங்களுக்கும் சமமானவர் அகத்தியர்.
அப்படிப்பட்ட மகாபுருஷர் லலிதா சகஸ்ர நாமத்தை உபதேசம் பெற்றிருக்கிறார்.
ஞானத்தின் வடிவமான கயக்ரீவர் உபதேசிக்க, அதை அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகஸ்தியர்
கேட்டிருக்கிறார் என்றால், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக மேன்மையானதாக இருக்க வேண்டும்.
பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், சரிதமும் கூறப் படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா சகஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த ஸ்தோத்திரம் உள்ளது.
கயக்ரீவர் என்ற மகரிஷி (விஷ்ணு அவதாரமாகக் கூறப் படுவதும் உண்டு) அகஸ்திய மகரிஷிக்கு உபதேசம்
செய்வதாக 183 சுலோகங்கள் அடங்கிய இந்த நூல் அமைக்கப் பட்டுள்ளது. அகத்தியரும், அவரது மனைவி
லோபாமுத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப் படுபவர்கள்.






