search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஏழைகளின் தெய்வம் முண்டகக்கண்ணி அம்மன்
    X

    ஏழைகளின் தெய்வம் முண்டகக்கண்ணி அம்மன்

    • கண் கொடுத்த தெய்வம் முண்டகக்கண்ணி அம்மன்.
    • வேப்பிலை, மஞ்சள் இரண்டையும் அரைத்து தடவி வர அம்மை தழும்புகள் மறையும்.

    ''பெரிய பணக்காரர்கள்தான் இவளுடைய பக்தர்கள் என்று சொல்வதைவிட, இவள் ஏழைகளுக்குத்தான் கண்கண்ட தெய்வம், என்று சொல்லலாம். நரஹரி ராவ் என்று ஒரு பக்தர். மிகமிகக் குறைந்த சம்பளம்தான் அவருக்கு.

    வேலை கிடைக்காமல் அவதிப்பட்டபோது நான் வேலைக்குப்போனால், என்னால் குறைந்த பட்சம் எவ்வளவு அனுப்ப முடியுமோ அவ்வளவு அனுப்பி வைக்கிறேன். என் சக்தி உயரும்போது உனக்கும் உயரும் என்றார்.

    முதல் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு சம்பளத்தையும் வாங்கிய உடனே உனக்கு என்னால் முடிந்ததை அனுப்பி வைக்கிறேன் என்று வேண்டிக் கொண்டார்.

    அவருக்கு வேலை கிடைத்தது. அன்றில் இருந்து இன்று வரை ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கியவுடன்பணம் அனுப்பி வைத்து விடுகிறார்.

    கண் கொடுத்த தெய்வம்

    ஓர் அன்பர், கண் பார்வையற்றவர் ஒருநாள் இங்கே வந்தார். ''எத்தனையோ தலங்களில் எவ்வளவோ நாளாக வேண்டினேன். ஆனால் இதுவரை கண் பார்வை எனக்குக் கிடைக்கவில்லை. டாக்டர்கள் இனிமேல் பார்வை கிடையாது என்று கைவிரித்து விட்டார்கள். கடைசியாக யாரோ ஒருவர், 'மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்திற்கு 108 நாள் வந்து சுற்றுகிறேன்' என்று வேண்டிக்கொள், பார்வை கிடைத்துவிடும் என்றார்.''

    'அதன்படியே தட்டுத்தடுமாறி இங்கே வந்து சேர்ந்து விட்டேன். கண் நிச்சயமாகக் கிடைக்குமா? என்றார்.'

    'அம்பாளை மனமுருக வேண்டிக்கொள். நிச்சயம் அவள் கண் கொடுப்பாள். அவளே தாமரைக் கண்ணாள், தன் மகனுக்குக் கண் இல்லை என்று சொல்வாளா? என்றார்.'

    அன்று முதல் அந்த அன்பர் மனமுருகி அம்பாளை வலம் வந்தார். இத்தனைதான் சுற்றுவது என்று நியதி வைத்திருக்கவில்லை. தோன்றிய எண்ணிக்கை சுற்றுவார். ஒவ்வோர் நாளும் அம்பாளின் கிணற்றில் நீராடி சுற்ற ஆரம்பிப்பார். முடிவில் தீர்த்தப் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வீடு போய் சேருவார்.

    இப்படி நம்பிக்கையுடன் அவர் சுற்ற ஆரம்பித்து 108 நாட்களும் ஓடி விட்டன. ஆனால் அம்பிகை மட்டும் என்ன காரணத்தினாலோ மனம் இரங்காமல் அவரை சோதனைப்படுத்தியே வந்தாள்.

    ஒரு நாள் அம்பிகையின் சன்னதியிலே முண்டகக்கண்ணியை தாறுமாறாக, அவர் பேச தொடங்கினார். அங்கிருந்தவர்கள் அத்தனை பெரும் கலங்கினர்.

    என்ன ஆச்சரியம்?

    அன்னையை திட்டிக் கொண்டிருந்தவர் திடீரென மகிழ்ச்சியில் பெச ஆரம்பித்தார்.

    'அம்மா எனக்கு கண் கிடைத்து விட்டது. தாயே பராசக்தி! பூரணி! நாரணி! ஆனந்தி! எனக்கு கண் கொடுத்துவிட்டாய் தாயே! கண் கொடுத்துவிட்டாய்! செத்தாலும் உன்னை மறவேன் இனி.'

    என்ன நடந்தது? எப்படிக் கிடைத்தது இந்த விழிகள்? பூபதிசுவாமிகள் கேட்டார். 'நான் திட்டிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று மூலஸ்தானத்தில் இருந்து ஒரு சுடர் தோன்றுவதை கண்டேன். அது வரவர பெரிதாகி திடீர் என்று மறைந்துவிட்டது. அப்போது நான் பார்க்கும் சக்தி பெற்றேன் என்றார்.

    நடிகையின் குறை தீர்த்தாள்

    1979-ம் வருஷத்தில் ஒரு முன்னணி நடிகைக்கு நிறைய படங்கள் இருந்த நேரம். இரவும் பகலும் தொடர்ந்து நடித்ததால் அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டது.

    அப்புறம் உடல் முழுவதும் அம்மை போட்டு விட்டது. ஒரே நாளிலேயே கிடுகிடுவென்று அம்பிகை நிறை பாரமாகப் போட்டுத் தள்ளிவிட்டாள்.

    அந்த நடிகையிடம் ஒருவர், 'முண்டகக் கண்ணி அம்பாளை வேண்டிக் கொள்ளுங்கள். அவள் ஒருத்திதான் உடனடியாக இதை தீர்த்து வைக்க முடியும்' என்று கூறினார். அதே போல வேண்டிக் கொண்டு நேரே கோவில் வந்தார். அம்பிகையின் தீர்த்தப் பிரசாதம் கொடுத்தனர்.

    என்ன ஆனாலும் சரிதான். எல்லாமே அம்பிகையின் அருள் என்று நினைத்து, அம்பிகையின் கிணற்றில் குளித்துவிட்டு, கால் அயரும் வரை பிரகாரத்தைச் சுற்றியே வந்தார் அந்த நடிகை. போட்டிருந்த முத்துக்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

    இத்தனை சுற்றுதான் என்று கணக்கு இல்லை. பக்தியால் கண்ணீர் பெருக்கெடுக்க, உடனடியாக ஷீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் தலையெடுக்க, அம்பிகையே கதி என்று எண்ணி, தலை சுற்றிக் கீழே சாயும் வரை சுற்றிவிட்டு அந்த நடிகை வீட்டிற்கு போனார்.

    அந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் எல்லா முத்துகளும் கொட்டிவிட்டன. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் கோவிலுக்கு வந்து முழுமையாக குணமடைந்தவுடன் ''அம்பிகையிடம் நான் கோவில் நிர்வாகம் கேட்கும் எதையும் செய்து முடிக்கிறேன் என்று பிரார்த்தனை செய்திருந்தேன் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்று அந்த நடிகை கேட்டார்.''

    ''கோயில் ராஜ கோபுரத்திற்கு கலசம் ஒன்று வைக்க வேண்டும். முடிந்தால் செய்யுங்கள்'' என்று கோவில் நிர்வாகிகள் கூறினார்கள். எவ்வளவு ஆகும்? என்று கேட்டார். சுமார் பத்தாயிரம் ரூபாய் ஆகலாம் என்றனர். அதே போல ஐந்து கலசங்கள் செய்து தன் அன்பை வெளிப்படுத்திக் கொண்டார் அந்த நட்சத்திரம். அந்த ஐந்து கலசங்கள் ராஜகோபுரத்தில் இன்றும் அழகுக்கு அழகூட்டுவதாக அமைந்துள்ளன.

    வேண்டிக் கொள்வது எப்படி?

    அம்பிகையிடம் அம்மைக்காக நேர்ந்து கொள்ளுபவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

    சாதாரணமாக அம்மை தோன்றியவுடனே அம்பிகையிடம் பிரார்த்தனை செய்து கொள்வது நல்லது. முகத்தில்தான் அம்மை முதலில் தோன்றுவாள். அவற்றை கொண்டே நாட்களைக் கணக்கிட வேண்டும். இரண்டு மூன்று தினங்களுக்குள் நிரபாரமாகிவிடும் அம்பிகை, இரண்டே நாட்களில் இறங்கிவிடுவாள்.

    மூன்றாம் நாள், ஐந்தாம் நாள், ஏழாம் நாள் கணக்கில் அம்மை இறங்கிய பிறகு தலைக்குத் தண்ணீர் விட வேண்டும். அரிப்பு எடுத்தால் தடவிக் கொள்ள வேப்பிலையைத்தான் உபயோகிக்க வேண்டும். அம்மை கண்டவர்களிடம் வேப்பிலையைப் போட்டு வைத்தால் நோயின் கடுமை அண்டாது.

    அம்மை இறங்கி தண்ணீர் விடும்போது வேப்பிலையையும் மஞ்சளையும் ஒன்றாக்கி அரைத்துத் தடவிவிட்டு, அதன் பிறகு தலைக்கு ஊற்றினால் அம்மைத் தழும்புகள் உடனே மறைந்து போகும்.

    வேப்பிலையை நன்றாகக் கருக்கி வறுத்துக் கஷாயம் செய்து அம்மை கொப்புளங்களைக் கழுவிவந்தால் அந்த புண்கள் ஆறிவிடும்.

    அம்மை போட்டிருக்கும் போதே தாங்க முடியாத சளி கட்டியிருந்தாலோ, கபம் சேர்ந்திருந்தாலோ, அதிமதுர சூரணத்தோடு வேப்பிலைக் கொழுந்தை சேர்த்துக் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் சளி கரைந்துவிடும்.

    அம்மை நோய் வருவதற்கு முன் தும்மல், ஜலதோஷம், தொண்டைக் கட்டு ஆகிய வியாதிகள் வரும். இன்னும் சொல்லப்போனால் அம்மை நோயின் முன்னறிவிப்பே அவை. அப்போது பேயன் பழம், நீர், மோர், இளநீர் ஆகியவற்றை ஆகாரமாகக் கொள்ள வேண்டும்.

    Next Story
    ×