search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆகாயமே சாமி, ஆகாச வீரன்
    X

    ஆகாயமே சாமி, ஆகாச வீரன்

    • பூஜைக்கு இன்றும் கைக்குத்தல் அரிசியே பயன்படுத்தப்படுகிறது.
    • ஆகாச வீரனுக்கு எவ்வித அடையாளமும் பூமியில் இல்லை.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் மணிமுத்தாறு, வெள்ளாறு ஆகிய இரு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் மருங்கூர். அங்கு வாழும் வன்னிய இன மக்களில் காளிங்கராயர் என்ற பட்டப் பெயருடைய பங்காளிகள்.

    தங்கள் குலதெய்வமாக ஆகாச வீரனை வழிபட்டு வருகின்றனர். இவ்வழிபாட்டு முறை முற்றிலும் மாறுபட்டதாகவும் பண்பாட்டு தொன்மை உடையதாகவும் விளங்குகிறது. சிறு தெய்வம் என நிறுவன சமயத்தினரால் குறிப்படப்படும் வழிபாட்டு இடங்களில் வேல், சிலை, மரம் என ஏதேனும் ஒரு அடையாளம் காணப்படும்.

    ஆனால் ஆகாச வீரனுக்கு எவ்வித அடையாளமும் பூமியில் இல்லை. ஆகாசம் எனப்படும் வானத்தில் அவர்களின் வீரன் இருப்பதாக நம்புகின்றனர் என்பதைக் கடவுளின் பெயரே உணர்த்திடும்.

    பங்காளிக் குழுவில் உள்ள ஒரு குடும்பத்தினர் வேண்டிக் கொண்டு ஆகாச வீரனுக்குப் பூஜை செய்வது வழக்கம். ஆடு, பன்றி ஆகிய உயிர்களை வீரனுக்கு வேண்டி விட்டு அவற்றைப் பலியிடுவர். இவ்வாறு உயிர் பலி கொடுத்து நடத்தப்படும் பூஜை, பிலி பூஜை எனக் குறிப்பிடப்படுகின்றன. உயிர் பலியின்றி, பொங்கல் மட்டும் பொங்கி செய்யப்படும் பூஜை.

    பூஜைக்கு இன்றும் கைக்குத்தல் அரிசியே பயன்படுத்தப்படுகிறது. மண் பானை, சட்டி, அகப்பை ஆகியவற்றை மட்டுமே சமைக்கப் பயன்படுத்துகின்றனர். மஞ்சள், மிளகு ஆகியவற்றைத் தவிர உப்பு, புளி, மிளகாய் என எதையும் பயன்படுத்துவதில்லை. நெல்லை குற்றுவது, சமைப்பது, மஞ்சள் அரைப்பது என அனைத்து பணிகளையும் ஆண்களே செய்ய வேண்டும்.

    பூஜைக்கு பொருட்களை கொண்டு செல்லும் போதும், மஞ்சள் அரைத்து எடுத்துச் செல்லும் போதும் எதிரில் யாரும் வராமல் இருக்கும்படி அறிவிப்பு செய்து அதன் பிறகே எடுத்துச் செல்வர். சமைத்த உணவு வகைகளை படைப்பதற்கு வாழை இலையை பயன்படுத்துவது இல்லை. பூவரச மர இலையை ஒன்றுடன் ஒன்று இணைத்து சீவாங்குச்சியால் தைத்துத் தையல் இலையாக்கிப் பயன்படுத்துகின்றனர். இன்றும் இம்முறையே பின்பற்றப்படுகின்றது.

    காட்டு மல்லிப் பூவைத்தான் பூஜைக்கும் பயன்படுத்துகின்றனர். படைக்கும் போது படையல் செய்பவர் வாயைக் கட்டிக் கொண்டு தான் படைக்க வேண்டும்.

    மேலும் பூஜைக்கு சூடம், சாம்பிராணி தவிர வேறு பொருட்களை பயன்படுத்துவதில்லை. ஒவ்வொரு இலைக்கும் முன்பாக சூடத்தை கொளுத்தி எரியச் செய்வர்.

    பூஜையில் கலந்து கொள்ளும் ஆண், பெண் சிறுவர்கள் அனைவரும் வெள்ளை உடையில் தான் வர வேண்டும். கறுப்பு நிற நாடாவோ, அரைஞான் கயிறோ அணியக் கூடாது. ஆகாச வீரனுக்குக் கறுப்பு ஆகாது என்பதால் அக்குடும்பத்தினர் எப்போதும் கறுப்புநிற அரைஞான்கயிறு அணிவதில்லை.

    பூஜை முடிந்ததும் முதல் உணவை ஆகாயத்தை நோக்கி விசுவது மரபு. ஆகாச வீரன் பெற்றுக் கொள்வார் என்று நம்புகின்றனர்.

    இந்த பூஜையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நீத்தார் நினைவுச்சடங்கு போலவே அமைந்துள்ளன. பூஜை அன்று பெண்கள் தலையில் பூச்சூடுவதில்லை. அன்று தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்பதில்லை. (வாங்க என்று அழைப்பதில்லை)

    உப்பின்றி சமைப்பது பூஜை பொருட்களை கூடையில் வைத்து எடுத்துச் செல்வது அப்போது யாரும் எதிரில் வராமல் இருப்பது, பெண்கள் வெள்ளை உடை அணிவது ஆகிய அனைத்தும் இறப்புச் சடங்கோடு தொடர்புடையவை. எனவே தங்கள் நிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போரில் இறந்த வீரனையே இவர்கள் தெய்வமாக வழிபடுவதாகக் கருத முடிகிறது. இன்றும் இந்த குலதெய்வ வழிபாடு தொடர்கிறது.

    முதல் மாதம் குலதெய்வ வழிபாடு

    கர்ப்ப காலத்தில் பெண்கள் விரதங்களை கடைப்பிடிக்காமல் தவிர்ப்பது நல்லது. அந்த காலக்கட்டத்தில் இறைவழிபாடு மேற்கொள்வதன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு சிறப்பு சேர்க்க முடியும் என்றே சங்க கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, ஒரு பெண் கருவுற்ற முதல் மாதத்தில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளலாம். இரண்டாவது மாதத்தில் சூரியன் வழிபாடும், 3-வது மாதத்தில் சந்திரன் வழிபாடும், 4-வது மாதத்தில் செவ்வாய், 5-வது மாதத்தில் புதன், 6-வது மாதத்தில் குரு, 7-வது மாதத்தில் சுக்கிரன், 8-வது மாதத்தில் சனி வழிபாடும் மேற்கொள்ள வேண்டும்.

    இதேபோல் ஒன்பதாவது மாதத்தில் மீண்டும் குலதெய்வ வழிபாட்டுடன், இஷ்ட தெய்வ வழிபாட்டையும் செய்யலாம். இதில் சூரியன் என்பது சிவனுடைய அம்சமாக கருதப்படுகிறது. எனவே சிவ வழிபாடு மேற்கொள்ளலாம். அதற்கான ஆன்மிகப் பாடல்கள், மந்திரங்களை ஜபிக்கலாம்.

    எனவே, கர்ப்ப காலத்தில் விரதம் இருப்பதைத் தவிர்த்து விட்டு, இறை வழிபாட்டை மேற்கொண்டாலே சிறப்பான எதிர்காலம் உள்ள குழந்தைகளை பெண்களால் பெற முடியும்.

    Next Story
    ×