search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அமாவாசைக்கு முந்தைய தினமும்...
    X

    அமாவாசைக்கு முந்தைய தினமும்...

    • அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது.
    • அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு...

    ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமாங்கல்யத்துடன்

    வாழ்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

    விரதம் சரி... அது என்ன கதை? எதற்காக அதைச் சொல்ல வேண்டும்?

    அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன், இளமைப்பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான்.

    மன அமைதிவேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடியபோது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.

    இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்.. அரற்றினாள்.. தவித்தாள்.. தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள்.

    இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை

    வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

    சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும். ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில்

    அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால், நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.

    உலக உயிர்களெல்லாம் இறைவனின் பிரதிநிதிகளான தேவர்களால் பாதுகாக்கப் படுகின்றனர். தேவர்களுக்கு ஆறுமாதம் இரவுக்காலம். ஆறுமாதம் பகல்காலம். பகல்காலம் என்பது தை முதல் ஆனி வரையிலும், இரவுக்காலம் என்பது ஆடி முதல் மார்கழி வரையிலும் இருக்கும். இந்த இரவுக்காலத்தில் தேவர்கள் உறங்கும் வேளையில் மக்களைக் காக்க ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தியே நம்

    முன்னோர்கள்.

    எனவே தான் தேவர்கள் உறங்கும் வேளையில் இறந்த நம் முன்னோர்கள் விழித்திருந்து நம்மை காக்க பூமிக்கு வருவதாக ஐதீகம். அந்த அடிப்படையில், ஆடி மாதம் வரும் பூரண அமாவாசையில் அவர்களை வரவேற்க நாம் தயாராகிறோம். மனிதன் இருக்கும் வரை தான் அவன் பாவ ஜென்மம். இறந்து போனால் அவன் புண்ணிய ஆத்மா. அவனுக்கு நம்மை நல்வழிப் படுத்துவதற்குரிய அனைத்து தகுதிகளும்

    உண்டு. எனவே இறந்து போன நம்மைச் சார்ந்த அனைவருமே, வயது வித்தியாசமின்றி நம்மை பாதுகாக்க வருகிறார்கள்.

    தமிழகத்தில் காவிரிக்கரைப் பகுதி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாமிரபரணி ஆற்றங்கரை, பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோயில் ஆகிய பகுதிகளுக்கு சென்றுவருவது மிகுந்த நன்மையை தரும். முடிந்தால் காசிக்கு சென்று வருவது மிக மிக சிறப்பானது.

    ஏனெனில், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், உலகமே இமயமலையில் கூடியது. அதனால் வடக்கு திசை தாழ்ந்த போது, தெற்கு நோக்கி அகத்தியர் அனுப்பப்பட்டார். அவர் தனது கமண்டலத்தில் கங்கையைக் கொண்டு வந்தார். அப்போது விநாயகர் காகம் உருவமெடுத்து கமண்டலத்தை தட்டி விட, காவிரி உருவானது.

    விழுந்த கமண்டலத்தை அகத்தியர் படாரென பாய்ந்து எடுத்து மீதி தண்ணீருடன் பொதிகை வந்தார். அந்த தண்ணீரை பொதிகையின் உச்சியில் ஊற்ற அது தாமிரபரணியாக உருவெடுத்தது. எனவே காவிரி, தாமிரபரணி ஆகிய இரண்டு மாபெரும் நதிகளும் ஆடியில், பிறந்ததாக கூறப்படுவதுண்டு. நதிகள் பிறந்த இந்த புண்ணிய மாதத்தில் வரும் ஆடி அமாவாசை நாளில், நீர் நிலைகளில் நீராடி,

    தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும் என கூறப்படுகிறது.

    கிராமக்கோயில்களில் இப்போது ஆடி அமாவாசை விழாவை, ஆடு வெட்டி கொண்டாடுகிறார்கள். இந்த பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. ஒரு முக்கியமான விஷயத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள். ஆடி அமாவாசை தினத்தில்தான் நமது பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த நாளில் ஆடு வெட்டுதல் போன்ற பலி வாங்கும் பாவ காரியங்களைச் செய்யாமல் முன்னோர்களை வணங்கி புண்ணியத்தை

    சேர்க்க வேண்டும்.

    Next Story
    ×