search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "diet"

    • உடற்பயிற்சி செய்வதற்கான சிறந்த நேரம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடலாம்.
    • கல்லீரல் உள்ளிட்ட உடல் உள்ளுறுப்புகளை சுற்றியுள்ள வயிற்றுப்பகுதி கொழுப்புகள் ஆபத்தானது என்பதால் இது மிகவும் முக்கியமானது.

    எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தாலும் அது நல்லதுதான். ஆனால், உடற்பயிற்சியால் உண்டாகும் சிறந்த பலனை அடைவதற்கு நேரம் முக்கியம். அதிலும் உடற்பயிற்சி செய்வதற்கான சிறந்த நேரம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடலாம்.

    பெண்கள் காலையில் உடற்பயிற்சி செய்யும்போது உடலில் உள்ள அதிக கொழுப்பு கரைவதாகவும், இதுவே ஆண்கள் மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது நிகழ்வதாக தெரியவந்துள்ளது.


    ஒவ்வொரு பாலினத்திற்கும் வேறுபடும் ஹார்மோன்கள் மற்றும் உறங்கும் நேரம், விழித்திருக்கும் நேரம், உணவு உண்ணும் நேரம் என அனைத்து உடல் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் நம் 'உடல் கடிகாரம்' ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

    நல்ல ஆரோக்கியமான, சுறுசுறுப்பான 30 ஆண்கள் மற்றும் 26 பெண்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவரும் 25 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். 12 வாரங்கள் அவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்ட்ரெச்சிங், ஓட்டம், ரெசிஸ்டன்ட் எனப்படும் எதிர்ப்பு பயிற்சி, தசையை வலுவாக்கும் பயிற்சிகள் என, பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் கண்காணிக்கப்பட்டன.


    ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களுள் ஒரு குழுவினர் காலை 8:30 மணிக்கு முன்னதாக உடற்பயிற்சி செய்தனர். மற்றொரு குழுவினர் அதே உடற்பயிற்சிகளை மாலை 6 மணி முதல் 8 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மேற்கொண்டனர். அனைத்து பங்கேற்பாளர்களும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட உணவுமுறையைக் கடைபிடித்தனர்.

    பங்கேற்பாளர்களின் ரத்த அழுத்தம் மற்றும் உடல் கொழுப்பின் அளவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகாலத்தில் பரிசோதித்து வந்தனர். மேலும், இந்த காலகட்டத்தில் அவர்களின் உடல் நெகிழ்வு தன்மை, பலம், ஏரோபிக் ஆற்றல் ஆகியவையும் பரிசோதிக்கப்பட்டது.

    இந்த ஆய்வில் பங்கேற்ற அனைவரும் எந்த நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தாலும் அவர்களுடைய ஒட்டுமொத்த உடல்நலனும் மேம்பட்டுள்ளது.


    "ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு நேரம் சிறந்தது"

    "உங்களால் எந்த நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியுமோ, அந்த நேரம்தான் உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரமாகும். உங்களின் நேரத்திற்கு ஏற்ப உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

    வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்பும் மற்றும் தங்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்க முயலும் பெண்கள் காலையில் உடற்பயிற்சி செய்வதை இலக்காக வைக்க வேண்டும்.

    கல்லீரல் உள்ளிட்ட உடல் உள்ளுறுப்புகளை சுற்றியுள்ள வயிற்றுப்பகுதி கொழுப்புகள் ஆபத்தானது என்பதால் இது மிகவும் முக்கியமானது.

    எனினும், உடலின் மேல்பகுதியில் தசை பலத்தை அதிகரிக்க முயற்சிக்கும் பெண்கள் மற்றும் தங்களின் மனநிலை, உட்கொள்ளும் உணவை மேம்படுத்த விரும்பும் பெண்களும் மாலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.


    ஆண்கள் காலை, மாலை என எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தாலும் அவர்களின் உடல்பலம் அதிகரிக்கும்.

    ஆனால், "தங்களின் இதயநலன், வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) மற்றும் மனநலனை மேம்படுத்த விரும்பும் ஆண்களுக்கு மாலை நேர உடற்பயிற்சி சிறந்ததாக உள்ளது.

    மாலை நேர உடற்பயிற்சி வளர்சிதை மாற்ற நலனை மேம்படுத்துவதுடன், உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான ஆபத்துகளையும் குறைக்கிறது.

    பெண்களுக்கு அதிகளவில் வயிற்றுப்பகுதியில் கொழுப்புகள் இருப்பதால், அவர்கள் காலையில் அதிகளவிலான கொழுப்பை எரிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே கூறப்பட்டதுபோல உடல் கடிகாரமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

    • குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பது நல்லது.
    • குழந்தைகளுக்கு நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.

    பள்ளி விடுமுறை நாட்கள் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான நாட்களாகும். இந்த விடுமுறையில் குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பது பெற்றோருக்கு ஒரு சவால். குழந்தைகள் அதிக வெயிலில் விளையாடுவதால் வியர்வை வெளியேறுகிறது. அத்துடன் நீர், உப்புச் சத்தும் குறைகிறது. குழந்தைகளுக்கு தண்ணீர், மோர், பழச்சாறு போன்று அதிக நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.

    குழந்தைகளிடம் வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். மண்பானை தண்ணீருடன் வெட்டிவேர், நன்னாரி வேர், சப்ஜா விதைகளை சேர்த்தால் நீரின் சுவை, மணம் கூடும். இது இயற்கையான முறை தான். தண்ணீர் குளிர்ந்து இருப்பதால் குழந்தைகள் விரும்பி அருந்துவர். இதன் மூலம் உடல்உஷ்ணத்தை தவிர்க்கலாம்.

    உணவில் நீர்சத்து அதிகம் உள்ள சவ்சவ், பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம். வெயில் மதியம் 1 முதல் மாலை 4 மணிவரை அதிக பாதிப்பை தரும். இந்த நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பினால், சூரிய ஒளியுடன் யு.வி., கதிர்கள் கலந்து உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே நிழலில் விளையாடும் கேரம் போர்டு, தாயம், பல்லாங்குழி, டேபிள் டென்னிஸ், செஸ் இவைகளை விளையாடலாம்.

    குழந்தைகள் கோடையில் பருத்தி ஆடைகள் உடுத்துவது நல்லது. தினமும் காலை, மாலை இரு வேளையும் குளிக்கச்செய்ய வேண்டும். ஆண் குழந்தைகள் வாரம் இரு முறையும், பெண் குழந்தைகள் 2 நாட்களுக்கு ஒரு முறையும் தலைக்கு குளித்து வந்தால், உடல் உஷ்ணத்தை தவிர்க்கலாம். குளிக்கும் நீரில் தேவையான அளவு வெந்தயம், வெட்டிவேர் ஊற வைத்து 15 நிமிடம் கழித்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

    • பி.சி.ஒ.எஸ் இருப்பவர்கள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை எடுக்க வேண்டும்.
    • ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    நீர்க்கட்டி பிரச்சனை என்னும் பாலிசிஸ்டிக் ஓவரியன் இருக்கும் பெண்களுக்கு இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டு செய்கிறது என்கிறது ஆய்வுகள். பி.சி.ஒ.எஸ் பிரச்சனை கொண்டு இருப்பவர்கள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் சில கார்போஹைட்ரேட்டுகள் போன்ற உணவுகளை விட இன்சுலின் அளவு அதிகமாகவோ அல்லது விரைவாகவோ இவை உண்டாக்காது.

    குறைந்த கிளைசெமிக் உணவுகளில் உள்ள முழு தானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள், பழங்கள், மாவுச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்படாத குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் அடங்கும்.

    அழற்சி எதிர்ப்பு உணவு பெர்ரி, கொழுப்பு நிறைந்த மீன், இலைகள் கொண்ட காய்கறிகள், கீரைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்பு உணவுகள் எடுத்துகொள்ளலாம்.

    இதய நோய்களின் ஆபத்து அல்லது தாக்கத்தை குறைக்க உயர் ரத்த அழுத்த உணவை தவிர்த்து உணவு முறைகளை மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். இவையும் பி.சி.ஓ.எஸ் அறிகுறிகளை நிர்வகிக்க உதவுதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

    மீன், கோழி, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றூம் குறைந்த கொழுப்புள்ள பால் பொருள்கள் கொண்ட டயட்டை 8 வாரங்கள் தொடர்ந்து பின்பற்றியவர்கள் மற்றவர்களை காட்டிலும் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் தொப்பை கொழுப்பு குறைவதை கண்டதாக 2015-ம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    ஆரோக்கியமான பி.சி.ஓ.எஸ் உணவில் இயற்கை உணவுகள், பதப்படுத்தப்படாத உணவுகள், உயர் நார்ச்சத்து கொண்ட உணவுகள், சால்மன், டுனா, மத்தி மற்றும் கானாங்கெளுத்தி உள்ளிட்ட கொழுப்பு மீன்கள், காலே, கீரைகள், அடர்ந்த பச்சை நிற காய்கறிகள், சிவப்பு திராட்சை, பெர்ரி பழங்கள், கருப்பட்டை, அடர் சிவப்பு பழங்கள், காய்களில் ப்ரக்கோலி, காலிஃப்ளவர், உலர்ந்த பீன்ஸ் வகைகள், பயறு வகைகள், ஆலிவ் எண்ணெய், அவகேடோ மற்றும் தேங்காயெண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள், பைன் கொட்டைகள், அக்ரூட் பருப்புகள், பாதாம் மற்றும் பிஸ்தா உள்ளிட்ட கொட்டைகள், கருப்பு சாக்லேட், மசாலாவில் இலவங்கப்பட்டை போன்றவை ஆரோக்கியமான உணவு முறையில் பின்பற்ற வேண்டியவை.

    கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ரீபைண்ட் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள், வெள்ளை ரொட்டி, சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வறுத்த உணவுகள், சோடாக்கள் மற்றும் எனர்ஜி பானங்கள் போன்ற சர்க்கரை பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், திடமான கொழுப்புகள், அதிகப்படியான சிவப்பு இறைச்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    • முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
    • மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும்.

    அழகாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை தான். இதனால் பலரும் சந்தையில் விற்கப்படும் கிரீம்களை முகத்தில் அப்ளை செய்துவருகிறார்கள். சிலர் இயற்கை முறையில் தங்களை அழகு படுத்திக் கொள்கின்றனர். இருந்தாலும் பல நபர்களுக்கு இளம் வயதிலேயே தோல் சுருக்கங்கள் ஏற்படுகிறது. அதிலும் வயதானால் தோல் சுருக்கம் ஏற்படுவது இயல்பு தான். அதுவே இளம் வயதிலேயே தோல் சுருங்குகிறது என்றால் வருத்தமாக தான் இருக்கும். இதற்கு காரணம் நாம் எடுத்து கொள்ளும் உணவு முறை, பழக்க வழக்கம் போன்றவை தான் இளமையிலே முதுமை தோற்றம் வருவதற்கு காரணமாக இருக்கிறது.

    புற ஊதா கதிர்கள் தான் தோல் சுருங்குவதற்கு காரணமாக அமைகின்றன. இந்த புற ஊதாக்கதிர்கள் தோலில் உள்ள கொலாஜன் உற்பத்தியை குறைத்து தோலினை சுருங்கச்செய்கிறது.

    நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்று வந்தாலும் சரி, வெயிலில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள உடல் முழுவதையும் ஆடைகளால் மறைத்துக்கொள்வது நல்லது.

    இளமையை தக்கவைத்துக்கொள்வதற்கு புகைப்பழக்கம் மற்றும் மது குடிப்பது போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது. இது ரத்த ஓட்டத்தை குறைத்துவிடும். இதனால் தோல்கள் பலம் இல்லாமல் தொங்க ஆரம்பித்துவிடும்.

    ஒரு மனிதன் மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனாலேயும் தோல் சுருக்கம் ஏற்படும். எப்பொழுதாவது மன அழுத்தம் ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. இதனால் மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் உங்களுக்கு பிடித்தவற்றை செய்து மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கூட தோல் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.

    சரியாக தூங்காமல் இருந்தாலும் பிஎச் அளவு மற்றும் ஈரப்பதம் இவை இரண்டும் குறைந்து தோலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியையும் குறைத்துவிடுகிறது. அதனால் சரியான தூக்கம் என்பது மிகவும் அவசியம்.

    உடலில் சத்துக்கள் குறைந்தாலும் தோல் சுருக்கம் மற்றும் தோல் வியாதிகள் ஏற்படும். இதனால் தினமும் ஜூஸ் அல்லது ஏ.பி.சி. ஜூஸ் குடித்து வரும் போது தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து தோற்றம் பொலிவுபெறும்.

    • மனமும், உடலும் அமைதி பெற ஒரு நல்ல விஷயம் உண்டு என்றால் அது யோகாசனம்.
    • மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம்.

    எந்திரம் போல ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் மனமும், உடலும் ஒருசேர அமைதி பெற ஒரு நல்ல விஷயம் உண்டு என்றால் அது யோகாசனம் தான். கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் தோன்றியது தியான முறை யோகக் கலை.

    யோகாசனம் என்பது உடற்பயிற்சி மற்றும் ஆசனங்களைக் குறிப்பது. அனுதினமும் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பயிற்சி செய்தாலே வெகு விரைவிலேயே நல்ல பலனை அடைய முடியும்.

    தியானம் நம்மை நாமே உணரச் செய்கிறது. மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம். சாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடுமின்றி மனதோடு உடலை இணைத்து பயிற்சி செய்வதே யோகா.

    தியானத்தின் மூலம் பூரண மன அமைதி பெற முடியும். இதயத்தின் படபடப்பு குறைவதோடு, நினைவாற்றலும் அதிகரிக்கும். அமைதியான, ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துவதால் வேலை செய்யும் ஆற்றல் அதிகரிக்கும். ரத்த அழுத்தம், ஆத்துமா போன்ற அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடிவதோடு ஆயுளும் கூடும். எனவே ஏற்கனவே உள்ள நோயின் உபாதைகளை படிப்படியாகக் குறைத்து, அதனை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியமும் கூடும்.

    நரம்பு, ரத்த ஓட்டம், ஜீரணம் போன்ற உடலின் மண்டலங்கள் அனைத்தும் சீரடையும் வாய்ப்பு அதிகரிக்கும். இளமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.

    உடற்பயிற்சி

    தினமும் 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்தால், உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும். ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீச்சல், சைக்கிளிங், ஜூம்பா, கார்டியோஸ், யோகா போன்றவற்றில் உங்களுக்கு பிடித்ததை செய்யலாம்.

    தூக்கம்

    தினமும் 7 முதல் 8 மணி நேர தூக்கம் மிக மிக அவசியம். சரியாக தூங்கவில்லையென்றால், எந்த விஷயத்தில் கவனம் செலுத்த முடியாது. அன்றாட வாழ்வில் தெளிவான முடிவையும் எடுக்க முடியாது. தினமும் நன்றாக தூங்கி எழுந்துக்கொள்வதை உறுதி செய்யுங்கள்.

     டயட் உணவு:

    கார்போஹைட்ரேட்ஸ், புரதம், வைட்டமின், மினரல்ஸ் என அனைத்து வகையான சத்துக்களை கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

    சமூகத்துடன் இணைந்து இருங்கள்:

    எப்போதும் தனியாக இருக்காமல், குடும்பம், நண்பர்கள், பக்கத்து வீட்டினர் என அனைவருடன் நல்லுறவை பாராட்டுங்கள். உங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு உதவுங்கள். இப்படி செய்தால் மனதிற்கு ஒருவிதமான நிம்மதி கிடைக்கும்.

    எந்தவொரு வேலை செய்தாலும், முழுமனதுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். ஏதோ நினைத்துக்கொண்டு எதையோ செய்யக்கூடாது.

    கவுன்ஸ்லிங்:

    உங்களால் தாங்க முடியாத பிரச்சினைகள் இருந்தால் மருத்துவர் அல்லது மனநல நிபுணரின் உதவியை பெற்றுக்கொண்டு தீர்வு காணலாம்.

    • ஆரோக்கியமான கொழுப்புகள் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
    • முழு தானியங்களை உட்கொள்வது உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்குகிறது.

    தொப்பை கொழுப்பைக் குறைப்பது ஒரு முழுமையான அணுகுமுறையை உள்ளடக்கியது, இதில் சீரான உணவுப்பழக்கம், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை அடங்கும்.

    நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அதிகப்படியான வயிற்று கொழுப்பைக் குறைக்க உதவும்.

    கீரை மற்றும் காலே போன்ற இலை கீரைகள், ப்ரோக்கோலி மற்றும் பிரஸ்சல்ஸ் முளைகள் போன்ற க்ரூசிஃபெரஸ் காய்கறிகளுடன் சேர்த்து உண்பது, மனநிறைவை மேம்படுத்தவும், எடை இழப்புக்கும் உதவும்.

    கூடுதலாக, கோழியின் மார்பக இறைச்சி, மீன் மற்றும் டோஃபு போன்ற புரதத்தில் குறைவானகலோரிகள் உள்ளதால் இது தசை வளர்ச்சியை பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும். வெண்ணெய், நட்ஸ் மற்றும் விதைகளில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு வகைகளை கொடுக்கின்றன.

    மேலும், குயினோவா, ஓட்ஸ் மற்றும் பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்களை உட்கொள்வது உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்குகிறது மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

    சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை தின்பண்டங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுப்பத்தினால் ஒல்லியான இடுப்பை அடைவதற்கும், அவற்றை பராமரிப்பதற்கும் உதவும்.

    வழக்கமான உடல் செயல்பாடு, நிறைய தண்ணீர் குடித்தல் மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை ஆரோக்கியமான உணவு ஆகியவை எடை மேலாண்மையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வைக்கின்றன.

    • கார்போஹைட்ரேட்டை முற்றிலுமாக தவிர்க்கவும் கூடாது.
    • சிக்ஸ் பேக் வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நிச்சயம் இந்த கொழுப்புகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    டீன் ஏஜ் வயதினர் அனைவருக்குமே, ஒரு ஆசை, ஒரு கனவு, ஒரு லட்சியம் இருக்கிறது. அது என்ன தெரியுமா..? சிக்ஸ் பேக் வைப்பது.

    இது சிலருக்கு, எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல், இயற்கையாகவே அமைந்துவிடும். ஆனால் பலருக்கு, அது வெறும் கனவாகவே இருக்கும்.

    சிக்ஸ் பேக் ஆசையில், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால்மட்டும் போதாது. சிக்ஸ் பேக் வைக்க, பிரத்யேக உணவு பழக்கமும் அவசியம். அந்த உணவு பழக்கத்தை தெரிந்து கொள்வோமா..?


    * கார்போஹைட்ரேட் அளவு

    பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது, அதற்காக கார்போஹைட்ரேட்டை முற்றிலுமாக தவிர்க்கவும் கூடாது. ஏனெனில், உங்களின் தசைகள் தொடர்ந்து சீராக இயங்க அவற்றிற்கு தொடர்ச்சியான ஆற்றல் தேவை. அவை கார்போஹைட்ரேட்டிலிருந்து கிடைக்கிறது.

    * அதிக புரோட்டின்

    உங்கள் தசைகளை வலிமையாக்குவதில் மற்ற ஊட்டச்சத்துக்களை விட புரோட்டின்கள்தான் அதிக பலனளிக்க கூடியவை. உடலில் இருக்கும் கலோரிகளை எரிப்பதில் புரோட்டினின் பங்கு மிகவும் முக்கியமானது.

    * ஆரோக்கியமான கொழுப்புகள்

    உங்கள் உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்கு வலுசேர்க்கும் நிறைவுறா கொழுப்புகள் அவகேடா, ஆலிவ் எண்ணெய், மீன் போன்ற பொருட்களில் உள்ளது. இந்த பொருட்களில் இருந்து கிடைக்கும் கொழுப்புகள் உங்கள் உடலில் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கும். வயிறை தட்டையாக வைத்திருக்க வேண்டும். சிக்ஸ் பேக் வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் நிச்சயம் இந்த கொழுப்புகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.


    * அடிக்கடி சாப்பிட வேண்டும்

    பெரும்பாலும் அனைவரும் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த உணவு முறையை பின்பற்றுவது எடை குறைப்பிற்கும், சிக்ஸ் பேக் வைக்கவும் எந்த வகையிலும் உதவாது. கெட்ட கொழுப்புகள் மற்றும் இனிப்பு தவிர்த்து ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்களின் ஈரல் மற்றும் தசைகளை வலிமையாக்க உதவும்.


    * உடலுக்கான எரிபொருள்

    உடற்பயிற்சிக்கு முன்பும், பின்பும் நீர்ச்சத்துக்களை உடலில் சேர்த்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய தொடங்குவதற்கு முன் பெர்ரி, தயிர் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். இது உங்களுக்கு அதிக உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றலை வழங்கும். அதேபோல உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு சிக்கன், காய்கறிகள், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றை சாப்பிடுங்கள்.

    * சாப்பிடும் பழக்கம்

    உங்கள் நாளை எப்பொழுதும் சிறந்த உணவுகளான தொடங்குங்கள். நார்ச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு தேவையில்லாமல் பசி ஏற்படுவதை தடுக்கும். நாளின் கடைசி உணவானது நிச்சயமாக கார்போஹைட்ரேட் இல்லாமல் புரோட்டின் அதிகம் உள்ள உணவாக இருக்க வேண்டும்.

    • உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது
    • இந்த வீகன் உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

    உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. வீகன் டயட் முறையை பின்பற்றுபவர்கள் இறைச்சி உணவுகள் மட்டுமில்லாமல், கால்நடைகளின் மூலம் கிடைக்கும் பால், தயிர், முட்டை போன்ற உணவுப் பொருட்களையும் உட்கொள்ள மாட்டார்கள்.

    முழுக்க முழுக்க காய்கறி, பழங்களை மட்டுமே மையப்படுத்திய இந்த உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் உலகம் முழுவதும் பலர் இந்த உணவு முறையை பின்பற்றுகின்றனர்.

    இந்நிலையில் ரஷ்ய நாட்டில் வீகன் டயட் முறையை பின்பற்றுவதாக கூறி, உணவு, தண்ணீர், தாய்ப்பால் என எதுவும் கொடுக்காததால் பிறந்த குழந்தை ஒன்று 1 வயது நிறைவடைவதற்குள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

    வீகன் டயட் முறையை தீவிரமாக பின்பற்றும் 44 வயதான மாக்சிம் லியுட்டி, ஒரு வயதுக்கும் குறைவான மற்றும் 1.5 கிலோ எடையுள்ள தனது குழந்தைக்கு சூரிய ஒளியில் இருந்து ஊட்டச்சத்து கிடைக்கும் என்று பட்டினி போட்டுள்ளார்.

    குழந்தையின் தாயான ஒக்ஸானா மிரோனோவா (34) தனது குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்க கூடாது என மாக்சிம் லியுட்டி தடுத்துள்ளார்.

    மேலும் தனது குழந்தையை வைத்து பரிசோதனை செய்த அவர், குழந்தைக்கு சூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மற்றவர்களுக்கு எடுத்து கூறியுள்ளார்.

    உணவு, தண்ணீர், தாய்ப்பால் கொடுக்கப்படாததால் உடல் மெலிந்த குழந்தை நிமோனியா நோயால் உயிரிழந்துள்ளது என்று மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தனது மகனை பட்டினி போட்டு கொலை செய்த குற்றத்தில் மாக்சிம் லியுட்டிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் கடந்தாண்டு தீவிர வீகன் டயட் உரையை பின்பற்றிய 39 வயது பெண்மணி ஸன்னா சம்சனோவா பரிதாபமாக மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    ரஷ்யாவை சேர்ந்த அவர், உணவு தண்ணீர் எடுக்காமல் தீவிரமாக வீகன் டயர் முறையை பின்பற்றினார். இதனால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து வந்த அவர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உயிரிழந்தார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீகனாக இருந்து வரும் இவர் பலருக்கும் வீகன் டயட் முறையை பின்பற்றுவது குறித்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போன்றவற்றை தயார் செய்து பலருக்கும் முன்னுதாரணமாகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்ப்பகாலத்தில் ப்ரீக்ளாம்சியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
    • உணவு முறையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

    கர்ப்ப கால மன அழுத்தம் என்பது, ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளாகலாம். இதில் கவலை அல்லது மன அழுத்தமும் ஒன்று. இது சாதாரணமானது.

    பொதுவான காரணங்கள்:

    * கர்ப்ப இழப்பு

    * கர்ப்பம் குறித்த பயம்

    * பிரசவ பயம்

    * குமட்டல்

    * சோர்வு

    * மனநிலை மாற்றங்கள்

    * தாங்கமுடியாத முதுகுவலி

    * குழந்தையை நல்லபடியாக வளர்க்க முடியுமா என்னும் பயம் போன்றவை பொதுவான காரணங்களாக சொல்லப்படுகிறது.

    கர்ப்பகாலத்தில் மன அழுத்தம் உடலில் தலைவலி, தூங்குவதில் சிக்கல் அல்லது அதிகப்படியான உணவை எடுத்துகொள்ளும் நிலையை உண்டாக்க கூடும். இது வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்கும். இதனால் ப்ரீக்ளாம்சியா அதுகுறித்த பயம் இன்னும் மன அழுத்தத்தை உண்டாக்கும். குறிப்பாக கர்ப்பிணிக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் இருந்தால், கர்ப்பகாலத்தில் ப்ரீக்ளாம்சியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    கர்ப்பிணி பெண்களை குடும்பத்தில் இருப்பவர்களும் நட்பு வட்டமும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அதை ஏற்றுகொள்ளும் விதமாக கர்ப்பிணி பெண்களும் ஒத்துழைக்க வேண்டும். உணவு முறையில் சீரான சத்தான உணவுகளை எடுத்துகொள்ளுங்கள். கர்ப்ப காலத்தில் என்ன மாதிரியான உணவுகளை எடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். இது குறித்து டயட்டீஷியனிடம் ஆலோசனை மேற்கொள்ளலாம்.

    நாவிற்கு சுவை அளிக்கும் ஜங்க் ஃபுட் உணவுகளை தவிருங்கள். கார்பனேட்டட் பானங்கள் தவிர்த்து பழச்சாறுகள், திரவங்கள் அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும். உணவை பகுதி பகுதியாக பிரித்து உண்ணுங்கள். உடலை சுகாதாரமாக வைத்துகொள்ளுங்கள். தினமும் இரண்டு வேளை வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.

    மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள். புத்தகம் படியுங்கள். துணையுடன் நேரம் செலவிடுங்கள். வயிற்றில் குழந்தையுடன் பேசுங்கள். வேகமான உடற்பயிற்சி இல்லாவிட்டாலும் மிதமான நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். யோகா, தியானம் போன்றவை மன அழுத்தத்தை குறைக்க கூடுதலான பலன் அளிக்கும்.

    • பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் உடல் எடை அதிகரிக்க கூடும்.
    • முழு நேரமும் ஓய்வில் இருப்பதால் கூட எடை அதிகரிக்கலாம்.

    பிரசவத்துக்கு பிறகு இளம் தாய்மார்களின் உடல் எடை அதிகரிக்க கூடும். கொஞ்சம் கவனமெடுத்தால் பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையை எளிதாக கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும்.

    கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு போஷாக்கான உணவு தேவை என்பதால் எடுத்துகொள்ளும் அதிகப்படியான உணவுகள் கர்ப்பகாலத்தில் அதிக எடையை உண்டாக்குகிறது. ஆனால் பிரசவத்துக்கு பிறகும் எடை கூட வாய்ப்புண்டு என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். அதற்கு காரணமாக உடல் சோர்வு, மனசோர்வு குழந்தையை கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்பு போன்றவையே காரணமாக சொல்லப்படுகிறது. இவை தவிர பிரசவக்காலத்துக்கு பிறகு முழு நேரமும் ஓய்வில் இருப்பதாலும் கூட சமயத்தில் எடை அதிகரித்துவிடுகிறது.

     உடற்பயிற்சி செய்யுங்கள்

    பிரசவம் சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சையாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரையோடு உடற்பயிற்சி செய்யலாம். சுகப்பிரசம் ஆன பெண்கள் 7 நாட்களுக்கு பிறகு மிதமான உடற்பயிற்சி செய்யலாம்.

    நடைபயிற்சி, வயிறு, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைப்பகுதியை இறுகச் செய்யும் பயிற்சிகள் செய்யலாம். அறுவை சிகிச்சை செய்தவர்கள் மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை செய்து இரண்டு மாதங்களில் உடல்நிலையை பொறுத்து பயிற்சி செய்யலாம்.

    படிப்படியாக சில மாதங்களுக்கு பிறகு ஏரோபிக் பயிற்சியான ஜாகிங், ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங் போன்றவற்றை செய்யலாம். இவை பின்னாளில் கர்ப்பப்பை இறக்கம், சிறுநீர் தானாக வெளியேறும் பிரச்சனை போன்றவற்றை உண்டாக்காது.

    தாய்ப்பால் கொடுக்க தவிர்க்க வேண்டாம்

    பிரசவத்துக்கு பிறகு உடல் எடை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமெனில் அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது நாள் ஒன்றுக்கு 2000 முதல் 2500 கலோரிகள் வரை உட்கொள்ள வேண்டும். அப்பொதுதான் தாய்ப்பால் குறைவில்லாமல் கிடைக்கும். அதே போன்று தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கலோரிகள் எரிக்க முடியும். அதனால் குழந்தைக்கு தாய்ப்பால் நிறைவாக தந்தாலே உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

    உணவில் கவனம்

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று அதிகமாக உணவின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றில்லை. பிரசவம் முடிந்த கையோடு ஒரு டயட்டீஷியனை தொடர்பு கொண்டு ஆலோசித்து குழந்தைக்கு வேண்டிய சத்தான உணவு வகைகளை பட்டியலிடுங்கள். தாய்மார்கள் சத்தான உணவை எடுத்துகொள்வதன் மூலம் அந்த சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைக்கும் செல்லும்.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், உலர் பருப்புகள், கீரைகள் நிச்சயம் ஆரோக்கியம் காக்கும். உடல் எடை குறைப்பிலும் உதவக்கூடும். ஏனெனில் உடல் எடையை குறைக்கும் போது உணவுகள் மீது அதிக கவனம் இருக்க வேண்டும்.

    திரவ ஆகாரங்கள் அவசியம்

    திரவ ஆகாரங்கள் உடலுக்கு நீர்ச்சத்து தரக்கூடியவை மட்டுமே அல்ல. இவை உடலுக்கு வேண்டிய சத்துகளையும் கொடுக்க கூடியவை. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும் உணவை தாய்மார்கள் எடுத்துகொள்ள வேண்டும். அதே நேரம் அந்த உணவுகள் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான சாய்ஸ் திரவ ஆகாரங்கள் தான்.

    தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது கூட முதலில் ஒரு டம்ளர் நீர் குடித்தபிறகு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் தாய்ப்பால் சுரப்பு வேகம் கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    பிரசவத்துக்கு பிறகு உடல் எடை குறையவும், கட்டுக்குள் வைக்கவும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் என பலவிதமான திரவ ஆகாரங்கள் உண்டு. இவை எல்லாமே பக்கவிளைவுகளையும் உண்டாக்காது என்பதால் இதை முயற்சி செய்யலாம்.

    உதாரணத்துக்கு வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, தேன், சீரகம், மிளகுத்தூள், புதினா, கறிவேப்பிலை சேர்த்த பானம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்பதோடு இவை உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்தும் வெளியேற்றும். கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலைத் தவிர்க்க சிறந்த வழிகள் மற்றும் பிரச்சனையும் அதிகரிக்காது.

    தவிர்க்க வேண்டியது

    கர்ப்பகாலத்தில் அதிக எண்ணெய் பொருள்கள், கொழுப்பு பொருள்கள், துரித உணவுகள், பேக்கரி உணவுகள், நொறுக்கு தீனிகள், பாக்கெட் உணவுகள், உடனடி தயாரிப்பு உணவுகள், உப்பு நிறைந்த உணவுகள், செயற்கை குளிர்பானங்கள் என எதையெல்லாம் தவிர்த்தொமோ அதை இப்போது முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை எல்லாமே கொழுப்பு நிறைந்தவை உடலில் கொழுப்பை அதிகரிக்க கூடியவை.

    • குழந்தைகளின் அழுகைக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன.
    • குழந்தைகளுக்கு வாய்வு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    பொதுவாகவே குழந்தைகள் அழுவதற்கு முதன்மையான காரணமாக கூறப்படுவது பசி தான். இது பெரும்பாலும் சரியாக இருந்தாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இது உண்மையாக இருக்காது. குழந்தைகள் அழுவதற்கு உளவில் ரீதியாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றது.

    பசிக்கு அடுத்தபடியாக குழந்தைகள் பெற்றோரை அழைக்கவே அதிகமான சந்தர்ப்பங்களில் அழுகின்றன. குழந்தைகளால் தனக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல முடியாது. குழந்தைகளுக்கு ஏற்படும் எல்லா அசௌகரியங்களுக்கும் ஒரே விளக்கம் அழுகையாக தான் இருக்கும். இதனை சாதாரணமாக நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் குழந்தைகளின் உளவியல் பற்றிய அடிப்படை அம்சங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். பொதுவாகவே குழந்தைகள் அழுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    குழந்தைகளின் அழுகைக்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாகவும் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க குழந்தைகளின் உளவியல் குறித்து பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

    பொதுவாக பசியை தவிர்த்து குழந்தைகள் அழுவதற்கு பல நேரங்களில் குழந்தைகள் இறுக்கமான ஆடைகளை அணிந்திருப்பதால் அழ ஆரம்பிக்கிறார்கள். அதுமட்டுமன்றி, அவர்கள் இதனை சங்கடமாகவும் உணர்கிறார்கள். எனவே, குழந்தைகளுக்கு எப்போதுமே தளர்வான பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது அவர்களை சவுகரியமாக வைத்திருக்க துணைப்புரியும்.

    தாய் எதை சாப்பிட்டாலும், குழந்தைக்கு பால் கொடுப்பதன் மூலம் அது குழந்தைகளின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது.

    மேலும் வறுத்த மற்றும் காரமான உணவுகளை தாய் அதிகமாக சாப்பிட்டால் அதன் தாக்கம் குழந்தைகளை பெரிதும் பாதிக்கும். இதனால் தான் குழந்தைகள் அழ தொடங்குகிறார்கள். உதாரணமாக, வயிற்று வலி அல்லது வாயு பிரச்சனை போன்றவை ஏற்படும்.

    பல நேரங்களில், தெரிந்தோ தெரியாமலோ, தாய் குழந்தைக்கு அதிக பால் கொடுப்பதுண்டு. அதேசமயம், சில சமயங்களில் அவசர அவசரமாக குழந்தைகளுக்கு உணவளிப்பதும் அதிகப்படியான உணவுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு வாய்வு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் குழந்தைகள் அழுவதுண்டு.

    மேலும் சிறு குழந்தைகளின் எலும்புகள் மிகவும் மென்மையானதாக இருக்கும். குழந்தைகளை பெற்றோர்கள் கையாளும் போது ஏற்படும் கவனக்குறைவால் அவர்களின் எலும்புகள் பாதிப்படையும் அபாயம் உள்ளது.

    ஒரு குழந்தையின் எலும்பு அதன் இடத்தில் இருந்து நழுவினால், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும். அதனால் குழந்தைகளை கையாளும் போது கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

    ஒரு குழந்தை தினமும் மாலையில் ஒரே நேரத்தில் அழுதால், அவர் கோலிக் நோயால் பாதிக்கப் பட்டிருக்கலாம். இந்த நோயினால் குழந்தைகளுக்கு வயிற்றுப் பிடிப்பு மற்றும் வலியை அனுபவிக்கிறார்கள்.

    அதனால் குழந்தைகள் தொடர்ச்சியாக அழுது கொண்டிருக் கின்றார்கள். பெரும்பாலும் குழந்தைகள் மூன்று மாதங்களுக்கு இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயில், குழந்தைகள் பல மணி நேரம் அழுவார்கள். அதனை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

    • எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்துவிடாது.
    • உடற்பயிற்சி செய்வது நல்லது.

    ஒரு பெண்ணுடைய சராசரி எடையை காட்டிலும் கர்ப்ப காலத்தில் 10 முதல் 12 கிலோ வரை எடை அதிகரிப்பது இயல்புதான். ஆனால், குழந்தை பிறந்த பிறகு ஆறு முதல் ஏழு கிலோ வரை உடல் எடை குறைவது இயல்பாக நடக்கும் விஷயம். மீதம் உள்ள எடையைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறைக்க வேண்டும்.

    நம் ஊரில், 'தாய்ப்பால் கொடுக்கப்போகிறாய், இரண்டு பேருக்கும் சேர்த்து சாப்பிடு' என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதனால், அளவுக்கு அதிகமான உணவையும், கொழுப்பு நிறைந்த உணவுகளையும் இளம்தாய்மார்கள் சாப்பிடுகிறார்கள். உடல் எடை குறையாமல் இருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம்.

    அதேபோல பூண்டு நல்லதுதான். ஆனால், பூண்டை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், உடல் எடை கூடிவிடும். சுகப் பிரசவம் ஆனவர்களாக இருந்தாலும் சரி, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்களும் சரி... மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு, எளிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் சாப்பாட்டை மட்டும் அதிகரித்தால், எடை குறையாது. மாறாக எடை கூடிவிடும்.

    தைராய்டு சுரப்புகளில் குறைபாடு, ஹார்மோன் சமன்பாட்டில் பாதிப்பு, கர்ப்பகாலச் சர்க்கரை நோய் போன்ற சில காரணங்களாலும் உடல் பருமன் ஏற்படலாம்.

    'ஆரோக்கிய உணவு, மிதமான உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவற்றின் மூலம் கர்ப்பக் காலத்தில் அதிகரித்த கூடுதல் உடல் எடையை இரண்டே மாதங்களில் குறைத்துவிட முடியும்.

    ''கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரித்த எல்லோரும் உடனடியாக உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு அளிக்கும் முதல் அட்வைஸ், 'பொறுமை' என்பதுதான். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்து விடவில்லை.

    எடை அதிகரிக்க ஒன்பது மாதங்கள் ஆனது. அதனால், உடல் எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்துவிடாது. மற்ற பெண்களுடனோ, சினிமா பிரபலங்களுடனோ தங்களை ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்பதுதான் முக்கிய அறிவுரை.

     எடை குறைப்பதற்கான வழிகள்:

    சாப்பாடு

    குழந்தைப் பேறு என்பது மனதளவில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த நிலையில் நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டோடு இருந்தால், அது மேலும் மன இறுக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, உணவுக் கட்டுப்பாடோ அல்லது சாப்பிடாமல் இருப்பதோ வேண்டாம். பசிக்கும்போது சாப்பிடுங்கள். நொறுக்குத் தீனிக்குப் பதிலாக, பழங்கள், கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை சாப்பிடுங்கள். இவை உங்கள் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், உங்கள் தினசரி உணவில் 300 கலோரி கூடுதலாகச் சேர்த்தால் போதும். நீங்கள் சாப்பிடும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் கொழுப்பு குறைந்ததாகவும் இருக்கட்டும். அதிக சர்க்கரை, க்ரீம், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

    தண்ணீர் குடியுங்கள்

    உடலின் நீர் பற்றாக்குறையைத் தீர்க்க, நாளன்றுக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கவும் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டவும் உதவும். மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் போக வேண்டும். இது சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்கும்.

    கை கால்களுக்கும் வேலை கொடுங்கள்

    உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி என்பது உடல் எடையை குறைக்க உதவுவதுடன், மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். இதற்காக ஜிம்முக்குச் சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை.

    தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதும். யோகா செய்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் தீவிர உடற்பயிற்சி கூடாது. அது பாலில் லாக்டிக் அமிலத்தின் அளவை அதிகரித்துப் புளிப்புத் தன்மையைக் கூட்டிவிடும்.

    தூக்கம்

    இரவு நேரத்தில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் பசித்தால் காய்கறி மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிடலாம். குழந்தை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுங்கள். சரியாகத் தூங்காமல் இருப்பதும் தேவைக்கு அதிக நேரம் தூங்குவதும் உடல் எடையை அதிகரித்துவிடும். தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது நல்லது.

    பெரும்பாலும் இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகுதான் பெண்களுக்கு எடை கூடுகிறது. வயது அதிகரிப்பது மற்றும் இரண்டு குழந்தைகளை பராமரிப்பதால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவையே இதற்கு காரணம். முன் எச்சரிக்கையுடன் இருந்தால், உடல் எடையை கட்டுப்படுத்த முடியும். இவ்வளவையும் மீறி உடல் எடை கூடினால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவதே நல்லது.

    ×