search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு சிறுமி பரபரப்பான சாலையில் சக்கர நாற்காலியில் ஒருவரை தள்ளிக் கொண்டு சாலையை கடக்கும் காட்சிகள் உள்ளது.
    • சிறுமியின் இந்த கண்ணியமான செயலை பாராட்டி உள்ள ஆனந்த் மஹிந்திரா, ஏன் முழு உலகமும் இப்படி இருக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

    பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். இவரது பதிவுகள் பலருக்கு உந்துதலாக இருக்கும். அந்த வகையில் ஒரு சிறுமியின் கண்ணியமான செயல் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், ஒரு சிறுமி பரபரப்பான சாலையில் சக்கர நாற்காலியில் ஒருவரை தள்ளிக் கொண்டு சாலையை கடக்கும் காட்சிகள் உள்ளது. அப்போது வாகனங்கள் அனைத்தும் சாலையையொட்டி நிற்கும் நிலையில் சக்கர நாற்காலியில் முதியோரை தள்ளிக் கொண்டு செல்லும் சிறுமி ஒவ்வொரு 3 அடிகளிலும் போக்குவரத்து சிக்னலில் வாகனங்களில் காத்து நிற்கும் கார் டிரைவர்கள் முன்பு பணிந்து நின்று அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் காட்சிகள் உள்ளது.

    சிறுமியின் இந்த கண்ணியமான செயலை பாராட்டி உள்ள ஆனந்த் மஹிந்திரா, ஏன் முழு உலகமும் இப்படி இருக்க முடியாது என பதிவிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ வைரலாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்தது. இதுவரை 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை குவித்த நிலையில் சிறுமியின் செயலை பாராட்டி பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • இறுதியில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள அடிவார முகாமை 7 நாட்களில் சென்றடைந்தார்.
    • 6 வயதில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் அடிவார முகாமை அடைந்த சிறுவன் இவானுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    துபாய்:

    துபாயில் வசிக்கும் ரஷிய நாட்டை சேர்ந்தவர் டிமிட்ரி. இவரது மனைவி அல்லா கிராசியுகோவ். இந்த தம்பதிக்கு இவான் என்ற 6 வயது மகன் உள்ளார். துபாயில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் சிறுவன் இவான் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் தடகளம், அக்ரோபாட்டிக்ஸ், நீச்சல் மற்றும் நடனம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். பெற்றோரின் ஊக்கத்துடன் மலையேறும் பயிற்சியில் மிகுந்த ஈடுபாடு வந்ததும் அதற்கான பயிற்சியையும் சிறுவன் இவான் எடுத்துக்கொண்டார். இந்த நிலையில் தானும் எவரெஸ்ட் மலை மீது ஏறி சாதனை புரிய வேண்டும் என மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.

    இதற்காக கடந்த மாதம் ரம்ஜான் பண்டிகை விடுமுறையில் பெற்றோருடன் சிறுவன் இவான் நேபாளத்துக்கு விமானம் மூலம் சென்றார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு கடுமையான குளிரில் சிறப்பு மலையேற்ற குச்சியை ஊன்றி மலையேற தொடங்கினார். இறுதியில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள அடிவார முகாமை 7 நாட்களில் சென்றடைந்தார். இதன் உயரம் 17 ஆயிரத்து 598 அடியாகும் (5,364 மீட்டர்). இந்த சாதனை குறித்து துபாயில் சிறுவன் இவான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பேஸ் கேம்ப்பை அடைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அங்கு சென்ற உடன் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. ஏனென்றால் எனது பயணம் முடிவுக்கு வந்து விட்டது. மீண்டும் நான் துபாய்க்கு விமானத்தில் வர வேண்டி இருந்தது. அங்குள்ள கும்பு பனிப்பாறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அழகாக இருந்தது. எனக்கு குளிர்காற்று மிகவும் சவாலாக இருந்தது.

    அந்த காற்றினால் கைகள் உறைந்து விட்டன. எனது பயணத்தில் நீண்ட முடியுடைய யாக், எருதுகள், கழுதைகள் மற்றும் குதிரைகள் போன்ற விலங்குகளை பார்த்து மகிழ்ந்தேன். எதிர்காலத்தில் தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ, ரஷியாவில் உள்ள எல்பரஸ் ஆகிய மலைகளில் ஏற ஆசையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    6 வயதில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் அடிவார முகாமை அடைந்த சிறுவன் இவானுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    • வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
    • ஆனால் அதை மீறி வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் டிரம்ப் விமர்சித்து வந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். நடப்பு ஆண்டு இறுதியில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிபர் பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் டிரம்புக்கு மக்களிடையே ஆதரவு பெருகி காணப்படுகிறது.

    தொழிலதிபரான டிரம்ப் 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, தன்னுடனான பாலியல் உறவுகளை மூடி மறைக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு ரூ.1 கோடி கொடுத்தது தொடர்பாக அவருக்கு எதிராக கோர்ட்டில் விசாரணை நடந்துவருகிறது.

    இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என டிரம்புக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அவர் அதை மீறி வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

    இந்நிலையில், கோர்ட்டை அவமதித்ததாகக் கூறி டிரம்ப் நேற்று கோர்ட்டில் ஆஜா்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவருக்கு 9,000 டாலர் (சுமார் ரூ.7.5 லட்சம்) அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். கோர்ட்டு உத்தரவை மீண்டும் மீறினால் சிறையில் அடைக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

    • பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீன கடலோர காவல்படை தண்ணீர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
    • சீனாவின் அனுமதியின்றி இக்கடல் பகுதியில் எந்த கப்பலும் செல்ல கூடாது என மிரட்டி வருகிறது

    தென் சீனக் கடலில் உள்ள பல சிறிய தீவுகளை மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. இதனால் அடிக்கடி தென் சீனக் கடலில் மோதல் நடக்கிறது.

    பிலிப்பைன்சுக்கும் சீனாவுக்கும் இடையில் தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது.இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.



    இந்நிலையில் தற்போது தென் சீனக் கடலில் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல் மீது சீன கடலோர காவல்படையின் கப்பல் தண்ணீர் பீரங்கிகள் மூலம் தண்ணீரை பீச்சியடித்து தாக்குதல் நடத்தியது. இதனால் தென் சீனக் கடலில் இன்று பதட்டம் ஏற்பட்டது.

    இது குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரி ஒருவர் கூறியதாவது :-

    சீனாவின் கடலோரக் காவல்படை தென் சீன கடலில் சென்று கொண்டிருந்த எங்களது பிலிப்பைன்ஸ் கப்பலை இன்று காலையில் நீர் பீரங்கிகளால் 8 முறை சுட்டது. கப்பலின் உபகரணங்கள் சேதமாகி உள்ளது.



    சீனாவின் அனுமதியின்றி இக்கடல் பகுதியில் எந்த கப்பலும் செல்ல கூடாது என சீன கடலோர காவல் படை மிரட்டி வருகிறது. சீன கடலோரக் காவல்படையின் துன்புறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்க தக்கது என தெரிவித்தார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில், ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும்.

    லண்டன்:

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்தன. இதில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின.

    இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. இதற்கிடையே அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதேபோல் 51 வழக்குகள் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்டன. இவ்வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கோர்ட்டில் அளித்த ஆவணத்தில், கோவிட் தடுப்பூசி ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக தி டெலிகிராப் ஊடகம் தெரிவித்துள்ளது.

    கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில், ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு (டி.டி.எஸ்.) வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும். ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும். எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

    • குறிப்பிட்ட வீட்டை போலீசார் நெருங்கும்போது தேடப்படும் சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டார்.
    • மோதலுக்குப் பிறகு அந்த வீட்டில் ஒரு பெண்ணும் 17 வயது ஆணும் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லோட் நகரில் உள்ள ஒரு வீட்டில் தேடப்படும் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்றனர்.

    அப்போது அந்த வீட்டில் இருந்த 2 வாலிபர்கள், போலீசார் மீது திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். உடனே போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

    மூன்று மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 4 போலீசார் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய ஒரு நபர் உயிரிழந்தார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

    அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதுகுறித்து காவல்துறைத் தலைவர் ஜானி ஜென்னிங்ஸ் கூறும் போது, நமது சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சித்த சில ஹீரோக்களை இன்று நாம் இழந்து விட்டோம். குறிப்பிட்ட வீட்டை போலீசார் நெருங்கும்போது தேடப்படும் சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டார். அவர் வீட்டு வாசலில் கொல்லப்பட்டார்.

    அவர் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றவாளியாகத் தேடப்படுபவர். மோதலுக்குப் பிறகு அந்த வீட்டில் ஒரு பெண்ணும் 17 வயது ஆணும் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    • தனது காதலியை தேடிய இவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சீட்வாட்டர் பகுதியில் 20 அடியில் விளம்பர பலகை வைத்துள்ளார்.
    • எனக்கு ஓய்வூதிய வருமானம் இருக்கிறது. நான் என் வயதை பார்க்கவில்லை என்றார்.

    டேட்டிங் கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், காதலியை கண்டுபிடிக்க ஆன்லைன் தளங்களில் விண்ணப்பிக்கும் நிலையில், 70 வயது முதியவர் ஒருவர் தனது காதலியை கண்டுபிடிக்க வாரம் தோறும் ரூ.33 ஆயிரம் செலவிடுகிறார்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் அல் கில்பெர்டி. கடந்த 2015-ம் ஆண்டு முதல் தனிமையில் வசித்து வரும் இவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக தனது காதலியை தேடிய இவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சீட்வாட்டர் பகுதியில் 20 அடியில் விளம்பர பலகை வைத்துள்ளார். இதற்காக வாரத்திற்கு 400 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.33 ஆயிரம்) கட்டணம் செலுத்துகிறாராம்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு விசுவாசமான ஒருவர் வேண்டும். அவர் உண்மையானவராகவும், எனது நலனில் அக்கறை கொண்டவராகவும் இருக்க வேண்டும். சரியான நபரை சந்திக்க நான் ஐரோப்பா வரை செல்வதற்கும் தயாராக இருக்கிறேன். எனக்கு ஓய்வூதிய வருமானம் இருக்கிறது. நான் என் வயதை பார்க்கவில்லை என்றார். அவர் வைத்துள்ள விளம்பர பலகையை பார்த்து 400-க்கும் மேற்பட்ட அழைப்புகள், 50-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்துள்ளது. எனினும் அதில் பெரும்பாலும் பணம் கேட்டு வரும் நபர்களாகவே இருப்பதாகவும், சரியான காதலியை தேடிக்கொண்டிருப்பதாகவும் கில்பெர்டி கூறினார்.

    • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி ஒருவர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
    • நினைவு பரிசு ஒன்றை பெறவேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்த சிறுமியை டெய்லர் ஷிப்ட் கண்டுகொண்டார்.

    பிரபல பாடகியான டெய்லர் ஷிப்ட் பாப் பாடல்கள் பாடுவதில் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர். தனித்துவமான இசை ஆல்பங்களை வெளியிட்டு வரும் இவர் நாடு முழுவதும் பயணித்து மேடை அமைத்து பாடல்களையும் பாடி வருகிறார். பல கோடி ரசிகர்களை கொண்ட இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிட்னி நகரில் மேடை கச்சேரியில் பாடல்கள் பாடினார்.

    அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி ஒருவர் அந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அவரிடம் நினைவு பரிசு ஒன்றை பெறவேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்த சிறுமியை டெய்லர் ஷிப்ட் கண்டுகொண்டார். பின்னர் அவருக்கு இசைநிகழ்ச்சிகளில் அணிந்து கொண்ட தொப்பி ஒன்றை பரிசாக கொடுத்தார்.

    இந்த நிகழ்வு அப்போது வலைத்தளங்களில் வேகமாக பரவி பேசுப்பொருளானது. இந்தநிலையில் டெய்லர் ஷிப்டிடம் நினைவு பரிசு பெற்ற 9 வயது சிறுமி நோய் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளவாசிகள் இணையத்தில் பரவ செய்து வைரலாக்கி வருகின்றனர்.

    • எகிப்து நாட்டின் எல்லையோரம் உள்ள ரஃபா ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாக திகழ்வதாக இஸ்ரேல் கூறி வருகிறது.
    • ரஃபா நகரில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள்.

    காசாவின் தெற்கு பகுதியான ரஃபா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஆறு பெண்கள், ஐந்து குழந்தைகள் அடங்குவார்கள். ஒரு குழந்தை பிறந்து ஐந்தே நாட்கள் ஆன நிலையில் உயிரிழந்துள்ளது.

    எகிப்து நாட்டின் எல்லையோரம் உள்ள ரஃபா ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாக திகழ்வதாக இஸ்ரேல் கூறி வருகிறது. இதனால் ரஃபா மீது தரை தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறது. ரஃபா நகரில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள்.

    காசா முனையில் உள்ள பெரும்பாலான மக்கள் ரஃபா நகருக்கு குடிபெயர்ந்து முகாம்களில் வசித்து வருகின்றனர். மனிதாபிமான பேரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் ரஃபா மீது தரைவழி தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் சவுதி அரேபியா சென்றுள்ளனர். இவர் இஸ்ரேல் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. காசாவிற்கு மேலும் உதவிப் பொருட்கள் சென்றடைய இஸ்ரேல் வழிவகை செய்ய வேண்டும். இருந்தபோதுிலும், மனிதாபிமான நெருக்கடியை தணிக்க இரு தரப்பிலும் போர் நிறுத்தம் செய்து கொள்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

    • கென்யாவில் 2 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பள்ளிக்கூடங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிரேட் ரிஃப்l; பள்ளத்தாக்கு மாகாணத்தில் அமைந்தள்ள பகுதி மாய் மஹியு. இங்கு ஒல்டு கிஜாப் என்ற அணை உள்ளது. இந்த அணி திடீரென்று உடைந்தது வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மரங்களை வேறோடு சாய்த்து இழுத்துச் சென்றது. கார்கள் அடித்து செல்லப்பட்டன.

    அணையில் இருந்து வெளியேறிய வெள்ளத்தால் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதம் மத்தியில் இருந்து கென்யாவில் கனமழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்திருந்தது, கனமழை காரணமாக அணை நிரம்பியிருந்தது.

    கடந்த சனிக்கிழமை கென்யாவின் முக்கியமான விமான நிலையம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. ரன்வே மூழ்கியதால் பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கென்யாவில் 2 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பள்ளிக்கூடங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிய முகாம் அமைக்க கென்ய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

    கிழக்க ஆப்பிரிக்க நாடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. தான்சானியாவில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு 155 பேர் உயிரிழந்தனர். புருண்டியில் 2 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோல்பி ட்ரிக்கிள் தெரிவித்தார். போலீசாரும் இது தற்கொலை தான் என வழக்கை முடித்துவிட்டனர்.
    • போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கிறிஸ்டின் டரிக்கிள் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் கோல்பி டிரிக்கிளிடம் விசாரித்த போது உண்மை வெளிவந்தது.

    கன்சாஸ்:

    அமெரிக்கா கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் கோல்பி ட்ரிக்கிள் (வயது 30). இவரது மனைவி கிறிஸ்டன் டிரிக்கிள் (26) கடந்த 2019-ம் ஆண்டு இவர் ஹோஸ்ட் கன்சாவில் உள்ள வீட்டில் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோல்பி ட்ரிக்கிள் தெரிவித்தார். போலீசாரும் இது தற்கொலை தான் என வழக்கை முடித்துவிட்டனர்.

    மனைவி பெயரில் 2 ஆயுள் காப்பீடுகள் இருந்தது. அதன் மூலம் கோல்பிக்கு 1.20 லட்சம் டாலர் ( சுமார் ரூ.1 கோடி ) இன்சூரன்சு தொகை கிடைத்தது. அதனை அவர் ஜாலியாக செலவழித்தார்.

    வீடியோ கேம்களுக்காக ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவழித்தார். கடன்களை அடைத்தார். தான் பெரிய இசை கலைஞராக வேண்டும் என்ற ஆசையில் இசைக்கருவி–கள் வாங்கி குவித்தார். இதோடு மட்டும் நின்று விடாமல் ரூ1.66 லட்சம் மதிப்பிலான செக்ஸ் பொம்மை வாங்கினார்.

    இது தனக்கு ஆறுதலாகவும், அரவணைப்பாகவும் உள்ளதாக அவர் கருதினார். இது தொடர்பாக அவரது தாயார் கூறும் போது தனது மகன், மனைவி இறந்த பிறகு சரியாக தூங்குவது இல்லை. இதனால் செக்ஸ் பொம்மையினை வாங்கினார். ஆனால் அதனுடன் செக்ஸ் உறவு எதுவும் வைக்கவில்லை என்று கூறினார்.

    இந்த சூழ்நிலையில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கிறிஸ்டின் டரிக்கிள் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் கோல்பி டிரிக்கிளிடம் விசாரித்த போது உண்மை வெளிவந்தது.

    மனைவியை கொன்று தற்கொலை செய்ததாக நாடகமாடி இன்சூரன்சு மூலம் கிடைத்த பணத்தில் செக்ஸ் பொம்மை உள்ளிட்ட பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கில் போலீசார் கோல்பி டிரிக்கிளை கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிர்ஷ்டவசமாக தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • மொத்தம் ரூ.11.5 லட்சம் அளவுக்கு பொருட்கள் எரிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4-ந்தேதி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது வீட்டில் இருந்த மின்சார குக்கரை வீட்டு உரிமையாளர் அணைத்து வைத்திருந்த நிலையில், வீட்டில் அவர் செல்லமாக வளர்த்த பூனை அந்த மின்சார குக்கரை 'ஆன்' செய்ததும், அதனால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்ததும் தெரிய வந்தது.

    அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதில் மொத்தம் ரூ.11.5 லட்சம் அளவுக்கு பொருட்கள் எரிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பயனர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

    ×