search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன்"

    • பூசாரிகள் பக்திப் பாடல்கள் பாடியவுடன் அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி ஐப்பசி மாதத்துக்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம் பஞ்சாமிர்தம், இளநீர், தேன், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

    இரவு 11 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்கள் பாடியவுடன் அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி, தாசில்தார் முகமது அலி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, காஞ்சிபுரம் வேலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில் குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.

    ×