search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Students Day"

    • ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களுக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசு வழங்கி உள்ளது.
    • யாதும் ஊரே யாவரும் கேளிர்! என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பதிவிட்டு தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தை எடுத்துரைத்தவர் அப்துல் கலாம்.

    ராமேஸ்வரத்தில் பிறந்து, ராக்கெட்டுகளை வடிவமைத்த ரட்சகன் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக 2010-ம் ஆண்டு அவரது பிறந்தநாளான அக்டோபர் மாதம் 15-ம் தேதியை உலக மாணவர் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. இவர் இந்தியாவின் ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு துறை பொறியாளராகவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ)தலைவராகவும் பணியாற்றினார்.

    ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் என்னும் இயற்பெயர் உடைய இவர் மாணவர்களின் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். வருங்கால தலைமுறையினரால் இந்திய தேசம் வல்லரசாகும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் மாணவர்களை சந்திக்கும் போதும் கனவு காணுங்கள்! அதற்கான முழு முயற்சியுடன் அர்ப்பணிப்போடு செயலாற்றுகள்! வெற்றி உங்களை வந்தடையும்! என்ற உற்சாகமூட்டும் வார்த்தைகளை மாணவர்களிடையே ஊட்டிவிட்டு ‌அவர்களின் எதிர்கால வாழ்க்கை நோக்கிய பயணத்தை ஊக்குவித்தார்.

    பாதுகாப்பு துறையில் நமது நாட்டை வலிமைபடுத்த பொக்ரான்-2 எனும் அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகள் அனைத்தையும் இந்தியா நோக்கி திரும்ப வைத்த பெருமைக்குரியவர். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நம் நாட்டின் அணு ஆயுதங்களை வலுப்படுத்த பெரும்பங்காற்றிய வான்துறை பொறியாளரான இவர் ராக்கெட்டுகளை வடிவமைப்பதிலும் திறம்பட செயல்பட்டார். இவரது முயற்சியால் உருவாக்கப்பட்ட எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் முதன்முதலாக ரோகிணி செயற்கைக்கோள் விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி சாதனை படைக்கப்பட்டது. வெற்றி பெற்றால் உன்னோடு இருப்பவர்களை கை காட்டு! தோல்வி அடைந்ததால் நீயே பொறுப்பேற்றுக் கொள்! என்ற உன்னத வார்த்தைகளை வெளிப்படுத்தி தலைமை பண்பிற்கான அடித்தளத்தை உறுதிப்படுத்தினார்.

    யாதும் ஊரே யாவரும் கேளிர்! என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பதிவிட்டு தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தை எடுத்துரைத்தவர். போற்றாத மனிதர் இல்லை! அவரது பொதுமை வார்த்தைகளை கேட்காத குழந்தை இல்லை. இளைஞர்களே நாட்டின் எதிர்காலம் என்று இதயமொழி கூறிய இந்தியாவின் ஏவுகணை நாயகன். அணு ஆயுதங்கள், ராக்கெட்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான எடை குறைந்த செயற்கை கால்கள் மற்றும் இதய நோயாளிகளுக்கான ஸ்டெண்ட் கருவியையும் கண்டுபிடித்துள்ளார்.

    பல்வேறு துறைகளில் சிறப்புற செயலாற்றிய இவர் அக்னி சிறகுகள் எனும் தமது சுயசரிதை புத்தகத்தில் " உனது எல்லா நாட்களிலும் தயாராக இரு! எவரையும் சம உணர்வோடு சந்தி! நீ பட்டறை கல்லானால் அடி தாங்கு! சுத்தியலானால் அடி! " என்ற உணர்ச்சி மிக்க வரிகளில் எதுவானாலும் எதிர்கொள்! நீ எந்த சூழ்நிலையில் இருக்கிறாயோ அதற்கேற்ப சிந்தித்து செயலாற்று என்று எடுத்து கூறியுள்ளார்.

    மேலும் "என் மீது நீங்கள் கொலைப்பழி சுமத்தலாம் அல்லது எனக்கு புத்தியில்லை என்று சொல்லலாம்! ஆனால் போலி நடிப்பு மட்டும் என் குற்றங்களில் ஒன்றல்ல! எனும் வார்த்தைகளால், நீங்கள் என்மீது எந்த பழி சுமத்தினாலும் நான் ஏற்றுகொள்வேன் ஆனால் போலி நடிப்பினால்‌ ஒருவரை ஏமாற்றினேன் என்று கூறினால் அதை மட்டும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று தனது சுயசரிதை புத்தகத்தில் சுயமான அடையாளத்தை வெளிப்படுத்தி சமானியனாக அனைவரும் உள்ளத்திலும் நீங்காத இடம்பெற்ற ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களுக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. வறுமைப்படிகளை தாண்டி வரலாறு படைத்த அவரது நினைவை இந்நாளில் போற்றுவோம். அவரது வழியில் மாணவர்கள் நலனுக்காக நாமும் உழைத்திட உறுதி ஏற்போம்.

    ×