என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி தேவஸ்தானம்"

    • ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் திருமலையின் புனிதத்தன்மையை ஆழமாகக் காயப்படுத்தி சிதைத்துள்ளது.
    • தர்மத்தைப் பற்றி யாராலும் பெரிய உரைகளை வழங்க முடியும்.

    திருமலை திருப்பதியில் லட்டு பிரசாதத்தில் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை அம்மாநிலத்தில் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

    இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, சிறப்பு புலனாய்வுக் குழு இந்த மாதம் 13 ஆம் தேதி விசாரணைக்காக ஆஜராக ஜகன்மோகனின் ஒய்எஸ்ஆர் கட்சியின் மூத்த தலைவர் சுப்பாரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    சுப்பாரெட்டி தேவஸ்தான தலைவராக இருந்தபோது தான் இந்த கலப்பட நெய் விவகாரம் நடந்து வந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் தற்போது அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஜகன்மோகனின் ஒய்எஸ்ஆர் கட்சிக்கு தாவியவர் ஆவார். 

    இதற்கிடையே சனாதன தர்மம் இழிவுபடுத்தப்பட்டதாக கொந்தளித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின் மீது பழி சுமத்தினார்.

    இந்நிலையில், சனாதன தர்ம பரிபாலன வாரியம் என்ற அமைப்பை நிறுவி, திருமலை உள்ளிட்ட கோயில்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர பவன் கல்யாண் அழைப்பு விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "முந்தைய திருமலை தேவஸ்தான வாரியத்தின் மிகப் பெரிய நிர்வாகத் தோல்வி மற்றும் ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் திருமலையின் புனிதத்தன்மையை ஆழமாகக் காயப்படுத்தி சிதைத்துள்ளது. 

    இந்த கசப்பான நம்பிக்கை துரோகம், தற்போதைய திருமலை தேவஸ்தான வாரியத்திற்கு ஒரு ஆழமான பாடமாக அமைய வேண்டும். திருமலையின் புனிதத்தன்மையை மீட்டெடுக்கவும், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும் தொடர்ச்சியாக உழைக்க வேண்டும்.

    திருமலை தேவஸ்தானத்தை நிர்வகிக்கும் மற்றும் நடத்தும் வாரியம், அதிகாரிகள், செயல் அலுவலர், இணைச் செயல் அலுவலர் முதல் ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வரை அனைவருக்கும் கிடைத்துள்ளது வெறும் பதவி அல்ல, மாறாக கோடிக்கணக்கான சனாதனிகளுக்கு தெய்வீக சேவை செய்யக் கிடைத்த ஒரு புனிதமான வாய்ப்பு.

    நிதிநிலை அறிக்கைகள், தரக் கட்டுப்பாடு மற்றும் தணிக்கைகள் முதல் சொத்து மற்றும் நன்கொடைகளை நிர்வகிப்பது வரை அனைத்து நடவடிக்கைகளிலும் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு விவரத்தையும் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

    சனாதன தர்ம பரிபாலன வாரியத்தை நிறுவுவது எதிர்காலத்திற்கான ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், தர்மத்தைக் காக்க வேண்டிய மற்றும் அதற்காக நிற்க வேண்டியது ஒவ்வொரு சனாதனியின் பொறுப்பு. மேலும், என்றாவது ஒரு நாள் நாடு முழுவதும் உள்ள நமது அனைத்துக் கோயில்களும் நமது சமூகத்தால், அதாவது பக்தர்களால் நிர்வகிக்கப்படும் காலம் வரும் என்பதே எனது உண்மையான நம்பிக்கை. இது நமது கடமையாகும்," என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் முந்தைய தேவஸ்தான நிர்வாகம் குறித்து விமர்சித்த பவன் கல்யாணுக்கு, முந்தைய ஆட்சியாளரான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஆந்திர முன்னாள் அமைச்சர், நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ரோஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பவன் கல்யாண் காரு, நீங்கள் புனிதத்தன்மை மற்றும் தர்மத்தைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு முறையும், அது உங்கள் ஒரு தலைப்பட்சமான அக்கறையை மட்டுமே அம்பலப்படுத்துகிறது.

    திருமலையில் பக்தர்கள் இறந்தபோதோ அல்லது கடுமையான தோல்விகள் அமைப்பை உலுக்கியபோதோ நீங்கள் ஒருபோதும் வாய் திறக்கவில்லை. ஆனால், சந்திரபாபுவுக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்படும் தருணத்தில், நீங்கள் திடீரென்று உபதேசங்களைக் கொடுக்கத் தொடங்குகிறீர்கள். அது பக்தி அல்ல. அது அப்பட்டமான அரசியல் நாடகம்.

    நீங்கள் நேர்மையைப் பற்றிப் பேசுகிறீர்கள், ஆனால் நேர்மை என்பது அசௌகரியமாக இருந்தாலும் உண்மைக்காக நிற்பதைக் குறிக்கிறது. நீங்கள் ஒருபோதும் அதைச் செய்ததில்லை.

    நீங்கள் எளிதான இலக்குகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பக்கம் இருப்பவர்கள் தவறு செய்யும்போது மௌனமாக இருக்கிறீர்கள். அதனால்தான் உங்கள் பிரசங்கங்கள் வெற்றுத்தனமாக உள்ளன.

    தர்மத்தைப் பற்றி யாராலும் பெரிய உரைகளை வழங்க முடியும். உண்மையான கேள்வி என்னவென்றால், தேவைப்படும்போது அதற்காகப் போராடும் தைரியம் யாருக்கு இருக்கிறது என்பதில் தான் உண்மையான தர்மம் உள்ளது. நீங்கள் ஒவ்வொரு முறையும் அந்த சோதனையில் தோல்வியடைந்துள்ளீர்கள்.

    ஒரு வாரியமோ அல்லது குழுவோ திருமலையைச் சரிசெய்யாது. அர்ப்பணிப்பும் நேர்மையும் மட்டுமே சரிசெய்யும், மேலும் இவை இரண்டும் உங்கள் அரசியலில் இல்லை.

    மற்றவர்களுக்குப் போதிக்கும் முன், முதலில் நீங்கள் நிலையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். திருமலைக்கு நேர்மை தேவை, பொய்யான சீற்றம் அல்ல." என்று தெரிவித்துள்ளார். 

    • திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் சுமார் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.
    • திருப்பதி மலையில் விபத்துகளில் இறப்பவர்களுக்கு தேவஸ்தானம் ரூ.3 லட்சம் வரை வழங்கி வருகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் சுமார் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். 2 மலை சாலைகள் அலிபிரி ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகள் மற்றும் பிற இடங்களில் அவ்வப்போது ஏற்படும் விபத்துகள் திடீர் நோய் காரணமாக இறப்பு, நடைபாதையில் காட்டு விலங்குகள் தாக்குதல்கள் ஏற்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    விபத்துகள் திடீர் மாரடைப்பு மற்றும் சிறுத்தை உள்ளிட்ட விலங்கு தாக்குதல்களில் இறப்பவர்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்து திருப்பதி தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது.

    தற்போது திருப்பதி மலையில் விபத்துகளில் இறப்பவர்களுக்கு தேவஸ்தானம் ரூ.3 லட்சம் வரை வழங்கி வருகிறது.

    இப்போது பக்தர்கள் அலிபிரிக்கு திருமலைக்கும். திருமலையில் இருந்து அலிபிரிக்கு வரும் வரை காப்பீடு வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.

    அதிக எண்ணிக்கையில் வரும் பக்தர்களுக்கு காப்பீடு வழங்கும் காப்பீட்டு நிறுவனங்கள் அவர்கள் வசூலிக்கும் பிரீமியம் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்பு போன்ற பிரச்சனைகள் குறித்து சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

    • கார் டிரைவர் தொழுகை செய்யும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
    • விசாரணையில் தரிசனத்துக்கு சென்னையிலிருந்து வந்தவர்களின் கார் ஓட்டி வந்ததாக தெரிவித்தார்.

    திருப்பதி மலையில் வேற்று மத பிரசாரம், தொழுகை, போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் வாடகைக்கு எடுத்து திருப்பதி வந்தனர்.

    நேற்று காலை திருப்பதிக்கு வந்த குடும்பத்தினர் தரிசனத்திற்கு சென்றனர்.

    அப்போது கார் டிரைவர் பாப விநாசம் சாலையில் உள்ள மண்டபத்தில் திடீரென தொழுகை செய்தார்.

    இதனை அந்த வழியாக சென்ற பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கார் டிரைவர் தொழுகை செய்யும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

    இது குறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் புகார் செய்தனர். தேவஸ்தான அதிகாரிகள் தொழுகையில் ஈடுபட்ட டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தரிசனத்துக்கு சென்னையிலிருந்து வந்தவர்களின் கார் ஓட்டி வந்ததாக தெரிவித்தார்.

    திருப்பதி மலையில் தொழுகை செய்ய தடை உள்ளது தனக்கு தெரியாது. இதனால் தொழுகை நடத்தியதாக கார் டிரைவர் தெரிவித்தார்.

    இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து டிரைவரை அனுப்பி வைத்தனர். டிராவல்ஸ் உரிமையாளர்கள் திருப்பதிக்கு கார் ஓட்டி வரும் டிரைவர்கள் தொழுகை செய்யக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்ப வேண்டும் என தெரிவித்தனர்.

    • பக்தர்கள் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் ஏ.ஐ. தொழில் நுட்ப கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்.
    • பக்தர்களின் முகங்களைப் பதிவு செய்ய ஏற்கனவே சோதனை ரீதியாக முக அங்கீகாரம் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதியில் பக்தர்கள் ஏழுமலையானை விரைவாக தரிசனம் செய்ய ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் ஏ.ஐ. தொழில் நுட்ப கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்.

    இதன் மூலம் நாள் முழுவதும் தரிசனம் செய்ய வரிசையில் நுழையும் பக்தர்கள் மற்றும் சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் வரிசையில் தரிசனத்திற்கு நிற்பவர்கள் விவரங்கள் மதிப்பீடு செய்யப்படும்.

    இதனால் பக்தர்கள் தரிசன நேரத்தை சரியாக அறிந்து கொள்வார்கள்.

    தற்போது ஒரு மணி நேரத்திற்கு எத்தனை பேர் கோவிலுக்கு வருகிறார்கள் என்பது குறித்த அறிவியல் தகவல்கள் தேவஸ்தானத்திலும் இல்லை.

    பக்தர்களின் முகங்களைப் பதிவு செய்ய ஏற்கனவே சோதனை ரீதியாக முக அங்கீகாரம் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஏ.ஐ. தொழில் நுட்பம் முழுமையாக பயன்படுத்தப்பட்டால் பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்ய முடியும். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 77,579 பேர் தரிசனம் செய்தனர். 34, 064 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.74 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • திருப்பதி கோவிலில் இன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
    • அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்களைக் கட்டுவோம்.

    திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

    திருப்பதி கோவிலில் இன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

    திருமலை கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது வேலை செய்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள்.

     

    பக்தர்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் இறைவனைக் காணும் வாய்ப்பைப் பெறும் வகையில், அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்களைக் கட்டுவோம்.

    திருமலையின் புனித மலைகளைச் சுற்றி எந்த வணிக நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது. இங்கு சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

     

    • தேவஸ்தானம் சார்பில், 10 இலவச பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது.
    • பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி மலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், இலவச பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி மலையில் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக, தேவஸ்தானம் சார்பில், 10 இலவச பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி, திருப்பதி மலையில் இயங்கி கொண்டிருக்கும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு பேருந்தில் தேவஸ்தான போக்குவரத்து அதிகாரிகள் நேற்று பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.

    • ஆன்லைனில் வெளியிடப்படும் தரிசன டிக்கெட் உடனடியாக முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது.
    • பக்தர்கள் யாரும் தரிசன டிக்கெட்டுகள் கேட்டு புரோக்கர்களை நாடி செல்ல வேண்டாம் என தேவஸ்தானம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக பல்வேறு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. இதேபோல் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் டைம் ஸ்லாட் முறையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ 300 டிக்கெட்டுகளும், ஸ்ரீவாணி அறக்கட்டளை ஆயிரம் டிக்கெட்டுகளும், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்காரம், சுப்ரபாதம் சேவை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.

    ஆன்லைனில் வெளியிடப்படும் தரிசன டிக்கெட் உடனடியாக முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாததால் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய சிரமம் அடைகின்றனர். இதனால் குறுக்கு வழியில் தரிசன டிக்கெட்டுகளை பெற திருப்பதியில் உள்ள புரோக்கர்களை நாடி செல்கின்றனர்.

    அங்குள்ள புரோக்கர்கள் போலி இணைய தளத்தை உருவாக்கி தரிசன டிக்கெட்களை போலியாக தயார் செய்து பக்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

    இந்த நிலையில் போலி இணையதளத்தை உருவாக்கிய நபர் ஒருவர் ஸ்ரீ வாணி அறக்கட்டளை மற்றும் பிரேக் தரிசன டிக்கெட் ரூ 10 ஆயிரத்து 500க்கு கிடைக்கும் என அவரது செல்போன் என்னுடன் வாட்ஸ் அப் குழுக்களில் பதிவு செய்தார். தேவஸ்தான அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிய வந்தது.இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் போலி இணையதளத்தை முடக்கினர். மேலும் வாட்ஸ் அப்பில் தரிசன டிக்கெட் கிடைக்கும் என பதிவு செய்த நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பக்தர்கள் யாரும் தரிசன டிக்கெட்டுகள் கேட்டு புரோக்கர்களை நாடி செல்ல வேண்டாம் என தேவஸ்தானம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது.

    இருப்பினும் சில பக்தர்கள் புரோக்கர்களை நாடி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். போலி தரிசன டிக்கெட் விற்பனை செய்ததாக பல புரோக்கர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 77,522 பேர் தரிசனம் செய்தனர்.32,390 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • திருப்பதி தேவஸ்தானம் லைசென்ஸ் புதுப்பித்தலில் கவனம் செலுத்தவில்லை.
    • மத்திய உள்துறையின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்துறை 2019-ல் கண்டுபிடித்தது.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக உள்நாட்டு பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வாழும் பக்தர்களும் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.

    தரிசனத்திற்கு வரும் வெளிநாட்டு பக்தர்கள் உண்டியலில் நகை, அந்தந்த நாட்டு கரன்சி நோட்டுகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். நேரடியாக தரிசனத்திற்கு வர முடியாத பக்தர்கள் தங்களது நாட்டு கரன்சி நோட்டுகளை ஆன்லைனில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    இவ்வாறு வெளிநாட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறுவதற்காக வெளிநாட்டு பங்களிப்பு கட்டுப்பாடு சட்டத்தின் (எஃப்சிஆர்ஏ) கீழ் பெற்ற உரிமத்தை திருப்பதி தேவஸ்தானம் புதுப்பிக்காத காரணத்தால், மத்திய உள்துறை அமைச்சகம் ரூ. 3.19 கோடியை அபராதமாக விதித்துள்ளது.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷின் ட்வீட் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. உரிமம் புதுப்பிக்கப்படாததால் இந்திய ரிசர்வ் வங்கி வெளிநாடுகளில் இருந்து வந்த கரன்சி நோட்டு பரிமாற்றத்திற்கு உடன்படவில்லை.

    ஏழுமலையான் கோவில் உண்டியலில் பணம் அல்லது விலைமதிப்பற்ற தங்கம், வைரம் மற்றும் பிற பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவதை கணக்கு காட்ட வேண்டியதில்லை. பெரும்பாலும் பெயர் தெரியாத பக்தர்களால் அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது.

    அதே சமயம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருமலைக்கு வந்து தரிசனத்திற்குப் பிறகு உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர்.

    அவற்றில் அந்தந்த நாடுகளின் கரன்சியும் அடங்கும். முன்னதாக அந்த வெளிநாட்டு பணம் ரிசர்வ் வங்கி மூலம் தேவஸ்தானத்திற்கு நமது நாட்டு பணமாக மாற்றப்பட்டது. 2018-க்குப் பிறகு இதுபோன்ற பண மாற்றத்தை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை. தவிர, தேவஸ்தான கணக்கில் வெளிநாட்டு கரன்சிகளை டெபாசிட் செய்ய எஸ்.பி.ஐ வங்கி ஒப்புக்கொள்ளவில்லை.

    இதனால் 2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் ரூ.30 கோடி வெளிநாட்டுப் பணம் தேவஸ்தான கணக்கில் டெபாசிட் செய்யப்படாமல், எஸ்பிஐ வங்கியில் கிடக்கிறது.

    வெளிநாட்டு பக்தர்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்க மத்திய உள்துறையிடம் இருந்து வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தேவஸ்தானம் உரிமம் பெற்றுள்ளது.

    அதன் காரணமாக 2018-ம் ஆண்டு வரை அந்நியச் செலாவணி மாற்றத்தை ரிசர்வ் வங்கி அனுமதித்தது. தேவஸ்தான கணக்கில் வெளிநாட்டு பணத்தை டெபாசிட் செய்வதையும் எஸ்பிஐ பயன்படுத்தியது. உரிமம் 2018-ல் காலாவதியானது.

    திருப்பதி தேவஸ்தானம் லைசென்ஸ் புதுப்பித்தலில் கவனம் செலுத்தவில்லை. மத்திய உள்துறையின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்துறை இதை 2019-ல் கண்டுபிடித்தது.

    உரிமம் இல்லாமல் வெளிநாட்டு நன்கொடை வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து தேவஸ்தானத்திற்கு ரூ.1.14 கோடி அபராதம் விதித்துள்ளது.

    2020-ல் வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, வெளிநாட்டு நன்கொடைகளில் கிடைக்கும் வட்டியை அந்தந்த நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது.

    இதனால் திருப்பதி தேவஸ்தானம் வட்டியை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. வருமான விவரங்களை சரியானபடி வழங்காததற்காக தேவஸ்தானத்திற்கு ரூ.3.19 கோடி அபராதம் விதித்தது.

    இதன் மூலம் அபராதத் தொகை ரூ.4.33 கோடியை எட்டியுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு அபராதம் விதித்துள்ளதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்து தர்மத்தைப் பாதுகாப்பதற்காகப் பிரசாரம் செய்யும் இந்து அறநிலைய அமைப்பான தேவஸ்தானத்திற்கு அபராதம் விதித்ததற்காக மத்திய பாஜக அரசை அவர் குற்றம் சாட்டினார்.

    இது அரசியல் சர்ச்சையாக மாறி வருகிறது. தேவஸ்தானம் ஏன் சரியான நேரத்தில் புதுப்பிக்கவில்லை? அதாவது தற்போதைய அதிகாரிகளோ, அதிகார வர்க்கமோ சரியான பதில் சொல்வதில்லை.

    உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியதைத் தவிர, மீடியாக்கள் மூலம் பக்தர்களுக்கு விவரம் தெரிவிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படாததால், பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகிறது.

    வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளை தேவஸ்தானம் பின்பற்றாதது மற்றும் மத்திய உள்துறையின் வழிகாட்டுதலின்படி வருமான விவரங்களை சரியானபடி சமர்ப்பிக்காதது தான் அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணம் என்பது தெளிவாகிறது.

    கடந்த 5 ஆண்டுகளில் உண்டியல் மூலம் சுமார் ரூ.30 கோடி அந்நியச் செலாவணி கிடைத்துள்ளது.

    • திருப்பதி தேவஸ்தானம் ஏராளமான புதிய கோவில்களை கட்டி வருகிறது.
    • புதுவையில் உள்ள இடிந்த கோவிலை மட்டும் ஏன் புதிதாக கட்டவில்லை என்று மக்கள் ஆதங்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில் கட்டப்பட்டிருந்தது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.

    இந்த கோவில் 12 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த திருப்பதி தேவஸ்தான கோவிலை மீண்டும்

    கட்டக்கோரி, புதுவை மக்கள் தேவஸ்தானத்திடம் பலமுறை புகார் செய்தனர். இதுவரையில் புதிதாக கோவில் கட்டப்படவில்லை.

    புதிய கோவில் கட்ட வலியுறுத்தி புதுவை ஆன்மீக சபைகள், பாகவதர்கள், பொதுமக்கள், திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி ஆகியவை சார்பில் தேவஸ்தான சேர்மன், நிர்வாக அதிகாரிகள், புதுவை முதலமைச்சர், ஆந்திர கவர்னர் மற்றும் ஆந்திர அரசிடமும் கோரிக்கை மனு வழங்கினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    திருப்பதி தேவஸ்தானம் ஏராளமான புதிய கோவில்களை கட்டி வருகிறது. பழைய கோவில்களை புதுப்பித்து வருகிறது. ஆனால் புதுவையில் உள்ள இடிந்த கோவிலை மட்டும் ஏன் புதிதாக கட்டவில்லை என்று மக்கள் ஆதங்கப்பட்டனர்.

    இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர அரசை கண்டித்து புதுவை ராஜா தியேட்டர் சந்திப்பில் புதுவை திருக்கோவில் பாதுகாப்பு கமிட்டியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில் திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டியின் பொதுச்செயலாளர் தட்சிணாமூர்த்தி, செயலாளர் பாலாஜி பாகவதர்கள், ஆன்மீக மன்றங்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கோப்பைக்கு பூஜை செய்யப்பட்டது.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். சீசனின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

    சென்னை அணியின் வெற்றிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து வெற்றிக்கோப்பையுடன் சென்னை அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் நேற்று மதியம் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்த வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், சிஇஓ காசி விஸ்வநாதன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களோடு ஐ.பி.எல். வெற்றிக்கோப்பையும் எடுத்து வரப்பட்டது.

    இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு சி.எஸ்.கே அணி வென்ற ஐ.பி.எல். கோப்பை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    • 62 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்கியது.
    • ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    திருப்பதிக்கு தொலைதூரத்தில் இருந்து வர முடியாத பக்தர்களுக்காக நாட்டின் முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது.

    இதுவரை ஆந்திராவுக்கு வெளியே சென்னை, டெல்லி, ஐதராபாத், புவனேஸ்வர் கன்னியாகுமரி, ஜம்மு ஆகிய நகரங்களில் 6 கோவில்களை தேவஸ்தான நிர்வாகம் கட்டியுள்ளது.

    ஜம்மு பகுதி மஜின் கிராமத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டது.

    இதற்கு தேவையான 62 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்கியது.

    இங்கு ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்தார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 9.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று மாலை இந்த கோவிலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் 7-வது ஏழுமலையான் கோவில் கட்ட நேற்று காலை பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நவிமும்பையில் கோவில் கட்டுவதற்காக ரூ.500 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக மகாராஷ்டிரா அரசு வழங்கியுள்ளது. 

    • திருப்பதி கோசாலையில் உயர் ரகத்தை சேர்ந்த 200 நாட்டு பசு உள்ளன.
    • வாடகைத்தாய் முறையில் சாகிவால் நாட்டு இனத்தைச் சேர்ந்த கன்றை ஈன்றுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையானுக்கு நடத்தப்படும் தூப தீப நெய்வேத்திய சமர்ப்பணங்களுக்கு நாட்டு பசுக்கள் மூலம் பெறப்பட்ட பால் தயிர் வெண்ணெய் ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

    இதற்கு 500 நாட்டுப் பசுக்கள் தேவையாக உள்ளது. தற்போது திருப்பதி கோசாலையில் உயர் ரகத்தை சேர்ந்த 200 நாட்டு பசு உள்ளன.

    மேலும் 300 உயர் ரக நாட்டுப் பசுக்களை நன்கொடையாக வழங்க பக்தர்கள் தயாராக உள்ளனர்.

    இந்நிலையில் பால் உற்பத்திக்காக தேவஸ்தான கோசாலையில் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

    அதிக பால் உற்பத்தி கொடுக்கும் உயர்ரக நாட்டு பசுக்களை வாடகைத்தாய் போன்ற முறையில் கலப்பினங்களாக உற்பத்தி செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானமும் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

    வட மாநிலங்களில் உள்ள உயர்ரக நாட்டு பசுக்களின் கருமுட்டைகளை சேகரித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வேறு வகையான உயர் ரக நாட்டு காளைகளின் விந்தணு மூலம் அவை கருத்தரிக்க செய்யப்பட்டன.

    அந்த கருக்களை ஓங்கோல் போன்ற தென்னிந்திய உயரக நாட்டு பசுக்களின் கர்ப்பப்பையில் செலுத்தி கோசாலையில் வளர்த்து வருகின்றனர் .

    நாட்டிலேயே முதல்முறையாக திருப்பதி தேவஸ்தான கோசாலையில் வளர்க்கப்படும் பசு வாடகைத்தாய் முறையில் சாகிவால் நாட்டு இனத்தைச் சேர்ந்த கன்றை ஈன்றுள்ளது.

    இந்த கன்று குட்டிக்கு பத்மாவதி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    அடுத்த 5 ஆண்டுகளில் 324 உயர் ரக சாகிவால் கன்றுகளை கோசாலையில் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×