search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry Priest"

    • 50-க்கும் மேற்பட்ட பக்தர்களிடம் அர்ச்சகர் லட்சகணக்கில் பணம்- நகை பெற்றுள்ளார். ரூ.10 ஆயிரம் முதல் 10 பவுன் நகை வரை அவர் பெண் பக்தர்களிடம் பெற்றுள்ளார்.
    • அர்ச்சகரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த பெண் பக்தர்கள், தனியாக போலீசாரிடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை சின்னையாபுரம் அக்கா சுவாமிகள் மட வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்.

    இவர் உருளையன்பேட்டையில் உள்ள அம்மன் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். 2020-ம் ஆண்டு கிருஷ்ணனுக்கு, சென்னையை சேர்ந்த ரமா என்ற மகாலட்சுமி(55), அவரின் மகன் சபரி ஆகியோர் அறிமுகமாகினர். அவர்கள் தமிழக குடிசை மாற்றுவாரியத்தில் பணியாற்றுவதாகவும், கிருஷ்ணனுக்கு வீடுகட்ட ரூ.1.50 கோடி கடன் பெற்றுத்தருவதாகவும் கூறியுள்ளனர்.

    மேலும் இந்த கடனை 6 மாதத்தில் தள்ளுபடி செய்து தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பிய கிருஷ்ணன் பல்வேறு தவணைகளாக ரூ.2.50 கோடி கொடுத்துள்ளார். ஆனால் கடன் வாங்கித்தரவில்லை.

    இதனால் பணத்தை திருப்பிக்கேட்டபோது இழுத்தடித்து வந்தனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிருஷ்ணன், புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, தாய், மகன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

    கோவிலில் அர்ச்சகராக சொற்ப சம்பளத்தில் பணியாற்றுபவர் ரூ.2.50 கோடி அளித்தது எப்படி? என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மன் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களிடம் அர்ச்சகர், பணம் திரட்டியுள்ளது தெரியவந்துள்ளது. தனித்தனியாக ஒவ்வொரு பெண் பக்தர்களிடம் வீடு கட்டி வருவதாகவும், கடனாக அளித்தால், அதை திருப்பித்தருவதாகவும் கூறி பணம் பெற்றுள்ளார்.

    50-க்கும் மேற்பட்ட பக்தர்களிடம் அவர் லட்சகணக்கில் பணம்- நகை பெற்றுள்ளார். ரூ.10 ஆயிரம் முதல் 10 பவுன் நகை வரை அவர் பெண் பக்தர்களிடம் பெற்றுள்ளார்.

    தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் பெண் பக்தர்கள் பணம், நகையை அர்ச்சகரிடம் வழங்கியுள்ளனர். இந்த பணத்தை பெற்று தாய், மகனிடம் அளித்துள்ளார்.

    பெண்கள் தங்கள் பணம், நகையை கேட்டு வற்புறுத்தியதால்தான் அர்ச்சகர் போலீசில் புகார்செய்துள்ளார். அர்ச்சகரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த பெண் பக்தர்கள், தனியாக போலீசாரிடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    ×