என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy Industry"

    • பிரபல தனியார் கம்பெனியை 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீரென முற்றுகை
    • பணிக்கு வருபவர்களை தடுத்து திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    சேதராபட்டில் உள்ள பிரபல தனியார் கம்பெனியை 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீரென முற்றுகையிட்டு பணிக்கு வருபவர்களை தடுத்து திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேதராப்பட்டு-மயிலம் சாலையில் பிரபல கனரக தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் மின்சார கோபுரங்கள், செல்போன் டவர்கள் உள்ளிட்ட கனரக பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 259 பேர் தங்களுக்கு பணி நியமனம், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் நிர்வாகத்துடன் கோரிக்கை வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களில் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள உத்தரவிட்டது. ஆனால் 259 தொழிலாளர் தவிர்த்து புதிய தொழிலாளர்கள் மூலம் தொழிற்சாலை இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

    இந்நிலையில் 259 பேர் சேதராப்பட்டு தொழிலாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் தொழிற்சாலையின் வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த கம்பெனியில் பணியாற்றி வரும் தினகரன், லட்சுமணன், விஜயகுமார், கிருஷ்ணமூர்த்தி, அய்யனார் உள்ளிட்ட பலர் முன்னிலையில் போராட்டம் நடந்தது.

    கம்பெனிக்குள் வந்த தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை இவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் சேதராப்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போலீசாரின் பேச்சு வார்த்தையை ஏற்காத போராட்டக்காரர்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கனரக தொழிற்சாலை இயங்காமல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சேதராப்பட்டு பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    ×