என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cholera Fever"

    • காலரா தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அமைச்சர் லட்சுமிநாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து சராசரியாக 15 பேர் மட்டுமே வெளிப்புற சிகிச்சை பெற்று செல்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் காலரா பரவியுள்ளது.

    அங்கு பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கூடவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    காரைக்கால் நிலை குறித்து அறிய புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் அங்கு சென்றார். கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் சந்திர பிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், பி.ஆர்.சிவா, கலெக்டர் முகமது மன்சூர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    காரைக்காலில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. காரைக்காலில் 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு நடைபெறும் பாலிடெக்னிக் மட்டும் வழக்கம்போல செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

    காலரா குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காரைக்காலில் குடி தண்ணீர் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு தண்ணீரில் கழிவு நீர் கலந்ததாலும் சுகாதாரமற்ற குடிநீரை பருகியதாலும் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வருகின்றது.

    இதை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல நடவடிக்கைகளையும் விழிப்புணர்வையும் காரைக்கால் நலவழித்துறை எடுத்து வருகிறது.

    காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை யாரும் வயிற்றுப்போக்கால் இறக்கவில்லை. இணை நோய் உள்ள 2 பேர் இறந்துள்ளனர். அவர்கள் வயிற்றுப்போக்கால் இறந்துள்ளதாக தகவல்கள் பரப்புவதாக அறிகிறோம்.

    பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். இதுவரை வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் பூரண சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர்.

    வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

    முகநூல்களில் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். கண்டிப்பாக அனைவரும் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். சுத்தமான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    விரைவில் இந்த வயிற்றுப்போக்கு காரைக்கால் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்படும். பொதுமக்கள் ஒத்துழைத்து விழிப்புணர்வை கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காலரா தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அமைச்சர் லட்சுமிநாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து சராசரியாக 15 பேர் மட்டுமே வெளிப்புற சிகிச்சை பெற்று செல்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ×