search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adhisankarar"

    ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ சாரதா புஜங்கப்ரயாதாஷ்டகம்


    1. அமுதம் நிறைக் கலசங்கள்

    கரங்களில் உடையவளாம்;

    குடமெனக் குவிந்தபடி

    அருள் பொழியும் நெஞ்சினளாம்;

    பாலனம் புரிந்து நமைக்

    காத்திடும் அம்பிகையாம்;

    புனிதர்க்கெல்லாம்

    பொற்பாதம் தருபவளாம்;

    திங்கள் முகப்பொலிவு

    எழிலார்ந்த இதழ்க்கனிவு,

    பீடுடைய வடிவினளாம்;

    என் தாயாகும் சாரதாம்பாளை

    சந்ததமும், மனம் மொழி மெய் சேர

    துதிக்கின்றேன்.

    2. விழிக் கடையில் அளப்பரிய

    கருணை மிகுந்து பொங்கும்

    நோக்குடையவளாம்;

    பொற்கரந்தனில் ஞான

    முத்திரை உடையவளாம்;

    கலைகளின் நித்ய வாசினியாம்;

    புனிதம் நிறையப் பொன் அணி

    மங்கலம் உடையவளாம்;

    தெய்வமாய் என்றென்றும்

    விழியாலே அருள்தருபவளாம்;

    துங்காநதி வாழ்த் தூயவளாம்;

    என் தாயாகும் சாரதாம்பாளை

    சந்ததமும், மனம் மொழிமெய் சேர

    துதிக்கின்றேன்.

    3. பிறை நுதலில் வகிடென

    பொன்நகை தரித்தவளாம்;

    இன்னிசைப் பண்ணின்

    உன்னதம் நயப்பவளாம்;

    தொழுதவரைக் காத்தருளும்

    தனிப்பெரும் தேவியாய்த்

    திகழ்ந்து ஒளிர்பவளாம்:

    கீர்த்தி இசைத்திடு கன்னங்கள்

    திருக்கரத்தில் மணிமாலை உடையவளாம்;

    கண்கவரும் தொல் அணிமணியில்

    அகலாத விருப்பு உடையவளாம்;

    என் தாயாகும் சாரதாம்பாளை

    சந்ததமும், மனம் மொழி மெய் சேர

    துதிக்கின்றேன்.

    4. முடிவகிர்ந்து பின்னலிட்டுக்

    குஞ்சலங்கள் கொண்டவளாம்;

    மான்விழிப் பார்வையினும்

    வென்றிடும் திருப்பார்வை உடையவளாம்;

    கிள்ளையோடிருக்கும் வாணியாம்;

    வானவன் இந்திர தேவன்

    வணங்கிடும் தேவதேவியாம்;

    அமுதபானம் விளைத்திடும்

    மந்தஹாச வதனமுடையவளாம்;

    கருங்கூந்தல் கவினழகொடு

    நெஞ்சத்தை ஈர்ப்பவளாம்;

    என் தாயாகும் சாரதாம்பாளை

    சந்ததமும், மனம் மொழி மெய் சேர

    துதிக்கின்றேன்.

    5. சாந்த சொரூபி, எழிற் திருமேனி;

    சுந்தரத் திரு வடிவினளாம்;

    விழியோவோடிப் பரந்தடர்ந்த

    கருங்கேசம் உடையவளாம்;

    ஒளிவிடும் கொடிபோலும்

    மென் உடம்பினளாம்:

    என்றுமுள நித்ய நாயகியாம்;

    உள்ளத்து எழும் எண்ணங்கடந்து

    நின்று நிலைத்திருப்பவளாம்;

    தவமுனிவர் தொழுதேற்றும்

    உலகுக்கு முன்னம் உயிர்த்தவளாம்;

    என் தாயாகும் சாரதாம்பாளை

    சந்ததமும், மனம் மொழி மெய் சேர

    துதிக்கின்றேன்.

    6. மான்மீதும், மடஅன்னத்திலும்

    மாட்சியுற சிம்ம மதன் மீதும்

    கரி, பரி, இரண்டின் மீதும்

    ஆரோகணித்து இருப்பவளாம்;

    கழுகின் மீதும் காளையின் மீதும்

    வீற்றிருப்பவளாம்;

    நவராத்திரி நற்பொழுதில்

    நல்வாகனங்களாகிவிடும்

    இவைமீது அமர்ந்திருப்பவளாம்;

    இனிமையின் தனி உருவாகி

    என்றும் காட்சி தருபவளாம்.

    என் தாயாகும் சாரதாம்பாளை

    சந்ததமும், மனம் மொழி மெய் சேர

    துதிக்கின்றேன்.

    7. கனல் போலும் செம்பிழம்பாகி

    ஒளிவீசும் செல்வழகுச்

    செந்திருவென ஜொலிப்பவளாம்;

    சகல சிருஷ்டிகளின் காந்தமிகு

    உருக்கொண்டவளாம்;

    பணிகின்ற நல்லடியாரின்

    நெஞ்சக் கமலந்தன்னில்

    தேனீயென ரீங்கரிப்பவளாம்;

    நாதத்தின், நர்த்தனத்தின்.

    உள்ளளி நிகர்த்த மேனியளாம்;

    என் தாயாகும் சாரதாம்பாளை

    சந்ததமும், மனம் மொழி மெய் சேர

    துதிக்கின்றேன்.

    8. படைக்கின்ற நான்முகனும்

    பள்ளி கொண்ட மாலவனும்

    மலை வாழும் மகேஸ்வரனும்

    பூசனை புரிந்து துதிக்கின்ற

    பெரும்சீர் படைத்தவளாம்

    தேசுமிகு புன்னகையின்

    திருவதனம் உடையவளாம்;

    காதணிக் குண்டலங்கள்

    ஊஞ்சலென அசைந்தாடி

    அழகுக்குத் தனியழகூட்டும்

    திருச்செவிகள் உடையவளாம்;

    என் தாயாகும் சாரதாம்பாளை

    சந்ததமும், மனம் மொழி மெய் சேர

    துதிக்கின்றேன்.

    ×