என் மலர்
புதுச்சேரி

மாகியில் சிறுமியை பலாத்காரம் செய்து தப்பியோடிய தொழிலாளி- பங்களாதேஷ் எல்லையில் கைது செய்த போலீசார்
- ஜூலை 26-ந் தேதி குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு புகாரின்படி, பள்ளூர் போலீசார் தொழிலாளி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளியை சுமார் 2 ஆயிரம் கி.மீ. தூரம் தேடி சென்று 25 நாட்களில் கைது செய்த மாகி போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தின் மாகி பிராந்தியம் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே அமைந்துள்ளது.
மாகியில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மாகியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர்.
இவர்களது மைனர் பெண்ணை அதே பகுதியில் வேலை செய்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த சுதேசி சஞ்ய்த் ஷீல் (வயது 23) என்ற தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து ஜூலை 26-ந் தேதி குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு புகாரின்படி, பள்ளூர் போலீசார் தொழிலாளி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளி மேற்கு வங்காளத்தில் பங்களாதேஷ் எல்லையில் பெடாய் என்ற கிராமத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மேற்கு வங்காளம் சென்ற மாகி தனிப்படை போலீசார் அங்கேயே 3 வாரங்ககளாக முகாமிட்டு தேடினர்.
பின்னர் பங்களாதேஷ் எல்லையில் பெடாய் கிராமத்தில் பதுங்கி இருந்த சுதேசி சஞ்ய்த் ஷீலை கைது செய்தனர்.
அவனை மேற்கு வங்க கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து மாகிக்கு அழைத்து வந்து புதுவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளியை சுமார் 2 ஆயிரம் கி.மீ. தூரம் தேடி சென்று 25 நாட்களில் கைது செய்த மாகி போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.






