search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி மாநிலத்தில் ரூ.700 கோடியில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு: விரைவில் அமல்படுத்தப்படுகிறது
    X

    புதுச்சேரி மாநிலத்தில் ரூ.700 கோடியில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு: விரைவில் அமல்படுத்தப்படுகிறது

    • வீடுகள், வணிக பயன்பாடு, தொழில்கள் மற்றும் போக்குவரத்துக்கும் கியாஸ் பயன்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
    • சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் வெளிநாடுகள் மட்டுமின்றி மும்பை , டெல்லி மற்றும் தமிழகத்தில் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் செயல்பாட்டில் உள்ளது.

    அதன்படி புதுச்சேரி மாநிலத்திலும் வீடுகளுக்கு குழாய் மூலமாக கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் புதுவை அரசு தொழில் மற்றும் வணிகத்துறை புதுவை நகர எரிவாயு வினியோக கொள்கை -2023 திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் இணைப்புக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    இதில், புதுச்சேரி மாநிலத்தில் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் ரூ.700 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

    மேலும் வீடுகள், வணிக பயன்பாடு, தொழில்கள் மற்றும் போக்குவரத்துக்கும் கியாஸ் பயன்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதுவை அரசின் தலைமை செயலர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் தொழில் மற்றும் வணிகத்துறை, உள்ளாட்சி, பொதுப்பணி, மின்துறை, தொழில்நுட்பம், அறிவியல் தொழில்நுட்பம், வருவாய், தீயணைப்பு ஆகிய துறை செயலர்களும், பிப்டிக் இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அதேபோல் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.

    Next Story
    ×