search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரி-தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு
    X

    புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரி-தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

    • நகரில் திரும்பும் திசையெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக செல்வதை காண முடிகிறது.
    • புதுவையில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டு தோறும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதையொட்டி புதுவையில் உள்ள நட்சத்திர விடுதிகள், ஓட்டல்களில் மதுபான விருந்துகளுடன் பல்வேறு விதமான கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    புதுவை கடற்கரையிலும் ஆட்டம்-பாட்டத்துடன் புத்தாண்டு கொண்டாடப்படும். இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர்.

    இதனால் புதுவையில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகிறது. நகரில் திரும்பும் திசையெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக செல்வதை காண முடிகிறது.

    புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடற்கரை சாலையில் நடந்தது.

    கூட்டத்திற்கு புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா தலைமை தாங்கினார்.

    இதில் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் வரும் பாதைகளில் வாகனங்கள் நிறுத்த கூடாது.

    வாகனங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வாகன நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்த அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கடற்கரையில் கட்டப்பட்டுள்ள தடுப்பு கட்டைகளை தாண்டி கடலில் யாரும் செல்லக்கூடாது. இதனை கண்காணிக்க வேண்டும்.

    அதேபோல் கடற் கரையில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம் முடியும் வரை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் எங்கெங்கு பணியில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

    இதற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி புதுவையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மதுபாட்டில்களை கடத்துவதை தடுக்கும் வகையில் நேற்று இரவு முதல் புதுவை-தமிழக எல்லைகளான கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் ரோடு, விழுப்புரம் சாலை, கடலூர் ரோட்டில் உள்ள எல்லை பகுதிகளான கன்னியக்கோவில், கோரிமேடு, கனக செட்டிக்குளம், மதகடி பட்டு ஆகிய பகுதிகளில் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதுபோல் புதுவையில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

    Next Story
    ×