search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாழ நினைத்தால் வாழலாம்...
    X

    வாழ நினைத்தால் வாழலாம்...

    • கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மோகன் வேலை பார்த்து வருகிறார்.
    • ஒரு கால் இல்லாவிட்டாலும் எறும்பு போல் மோகன் ஓடோடி உழைப்பதை பெட்ரோல் பங்குக்கு வருபவர்கள் பார்த்து வியப்புடன் செல்கின்றனர்.

    நல்ல உடல் தகுதியுடன் கை, கால்கள் திடகார்த்தமாக உள்ள சிலர் உழைக்காமல் சோம்பேறிதனமாக ஊதாரியாக திரிகிறார்கள். சிலர் உடல் ஊனமுற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் வேலைகளை அதாவது உட்கார்ந்து பார்க்கும் வேலைகளை சொந்தமாகவோ அல்லது மற்றவர்களை சார்ந்திருந்தோ செய்வார்கள்.

    ஆனால் புதுவையில் ஒரு காலை இழந்த ஊனமுற்ற நபர் ஒருவர் வாழ நினைத்தால் எப்படியும் வாழலாம் என்பது போல ஒற்றைக்காலில் 12 மணி நேரத்திற்கும் மேல் நின்று கொண்டு வேலை செய்கிறார்.

    புதுவையை சேர்ந்த மோகன் (வயது44) என்பவர் பைக்கில் பஸ் மோதிய விபத்தில் ஒரு காலை இழந்த நிலையில் உள்ளார். அவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். 6-ம் வகுப்பு வரை அவர் படித்துள்ளார்.

    கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மோகன் வேலை பார்த்து வருகிறார். அவர் பங்குக்கு வரும் பைக்குகள் மற்றும் கார்களுக்கு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தனது ஒரு காலை ஊன்றியபடி ஓடோடி சென்று பெட்ரோல் போடுகிறார். அவர் 20 ஆண்டாக இந்த வேலையில் உள்ளார்.

    ஒரு கால் இல்லாவிட்டாலும் எறும்பு போல் அவர் ஓடோடி உழைப்பதை பெட்ரோல் பங்குக்கு வருபவர்கள் பார்த்து வியப்புடன் செல்கின்றனர். ஒரு காலில் அவர் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதை பார்த்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளார். அது வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.

    என்னால எதுவுமே செய்ய முடியலன்னு சோம்பேறிதனமாக இருக்கும் வாலிபர்களுக்கும் அப்பா-அம்மா உழைப்பில் வாழ்கின்ற இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக இந்த வீடியோ உள்ளது.

    Next Story
    ×