என் மலர்
புதுச்சேரி

பறிமுதல் செய்யப்பட்ட மணல் மூட்டைகள்
தென்பெண்ணையாற்றில் காரில் மணல் மூட்டைகள் கடத்தல்
- போலீசார் பறிமுதல் செய்தனர்
- அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
புதுச்சேரி:
பாகூர் அருகே சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ள அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி பலர் நூதன முறையில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க போலீசார் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மினி வேன் மற்றும் கார் மூலம் மணல் கடத்தப்பட்டு சித்தேரி-குருவிநத்தம் வழியாக கொண்டு செல்லப்படுவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாகூர் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தலைமையில் உதவி சப் - இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனால் காரை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டிச் சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை பின் தொடர்ந்த சென்றனர்.
இதனை பார்த்ததும் டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதைதொடர்ந்து போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்தனர்.அப்போது அதில் மணல் மூட்டைகள் இருந்தன.
35-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்து பாகூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த கார் குருவிநத்தம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும் தென்பெண்ணையாற்றில் மணல் கடத்த காரை பயன்படுத்தியது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






