search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விற்பனைக்குழு ஊழியர்கள்  வேலை நிறுத்தம்
    X

    லாஸ்பேட்டை உழவர் சந்தை முன்பு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட காட்சி. 

    விற்பனைக்குழு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

    • சம்பள நிலுவை தொகை வழங்கக்கோரி விற்பனைக்குழு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்தனர்.
    • தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

    புதுச்சேரி:

    புதுவை ஏ.ஐ.டி.யூ.சி. விற்பனைக்குழு ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது.

    பழைய பஸ் நிலையம், லாஸ்பேட்டை உழவர் சந்தைகள், தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

    போராட்டத்துக்கு சங்க தலைவர் பாஸ்கர பாண்டியன் செயலாளர் சண்முகம், பொருளாளர் பழனிராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். செயல் தலைவர் செல்வநாதன், துணைத்தலைவர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயல் தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ்பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஊழியர்களின் 8 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். 81 தினக்கூலி ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். 7-வது சம்பளக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். தட்டாஞ்சாவடியிலேயே ஒழங்குமுறை விற்பனைக்கூடம் தொடர்ந்து இயங்க செய்ய வேண்டும்.

    ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் தொடங்கியுள்ளது.

    ஊழியர்களின் போராட்டத்தால் உழவர்சந்தைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் வியாபாரிகளுக்கு டோக்கன் வழங்கி, தராசு, படிக்கல், விலைப்பட்டியலை ஊழியர்கள்தான் வழங்க வேண்டும். ஊழியர்களின் போராட்டத்தால் புதுவை உழவர்சந்தையில் விலைப்பட்டியல் வைக்கப்படவில்லை. தராசு, படிக்கல் வழங்கப்படவில்லை.

    இருப்பினும் விவசாயிகள் வழக்கம்போல கடைகளை அமைத்து வியாபாரம் செய்தனர். பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.

    லாஸ்பேட்டை உழவர்சந்தை திறக்கப்படவில்லை. நுழைவு வாயில் முன்பு ஊழியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் விவசாயிகள் உள்ளே செல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் விவசாயிகளுக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஊழியர்கள் தாங்கள் ஏற்கனவே முன்னறிவிப்பு செய்தே போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டுவந்துவிட்டோம். எங்களை விற்க அனுமதியுங்கள் என்றனர்.

    பின்னர் காய்கறி மூட்டைகளுடன் மறியல் செய்தனர். லாஸ்பேட்டை சாலையில் கடைகள் அமைக்க முயற்சித்தபோது போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. விற்பனை குழு ஊழியர்கள் போராட்டத்தால் சுமார் ஒரு டன் காய்கறிகள் நஷ்டம் ஏற்படும் என அங்கு கடை வைத்திருந்த 40 வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×