என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
நகை-பணம் பறித்த ரவுடி கைது
- அழகு நிலையத்தில் கத்திமுனையில் நகை-பணம் பறித்த ரவுடி கும்பலில் மேலும் 3 பேர் சிக்கினர்.
- புதுவை ரோடியர் பேட் அங்குநாயக்கர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜீவகன். இவரது மனைவி விஜயலட்சுமி
புதுச்சேரி:
அழகு நிலையத்தில் கத்திமுனையில் நகை-பணம் பறித்த ரவுடி கும்பலில் மேலும் 3 பேர் சிக்கினர்.
புதுவை ரோடியர் பேட் அங்குநாயக்கர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜீவகன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் சங்கரதாஸ் வீதியில் அழகு நிலையத்துடன் மசாஜ் சென்டர் (ஸ்பா) நடத்திவருகிறார். சம்பவத்தன்று மாலை விஜயலட்சுமி அழகு நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வந்து விட்டார். பெண் ஊழியர்கள் மட்டும் அழகு நிலையத்தில் இருந்தனர். இரவு 8 மணியளவில் 7 பேர் கொண்ட ரவுடி கும்பல் புகுந்து அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் மாமுல் கேட்டு மிரட்டியது. இது பற்றி தகவல் அறிந்த விஜயலட்சுமி அழகு நிலையத்துக்கு விரைந்து சென்றார்.
அப்போது விஜய லட்சுமியையும் கடை ஊழியர்களையும் கத்தியை காட்டி மிரட்டி ரூ.82 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கடை ஊழியரின் அரை பவுன் செயின் ஆகியவற்றை பறித்து கொண்டு அந்த ரவுடிக்கும்பல் தப்பிச் சென்று விட்டது.
இது குறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்தனர்.
அவர்கள் ரெயின்போ நகரை சேர்ந்த சத்யா என்ற சிவபெருமாள், லாஸ்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் விஸ்வா, விக்கி என்ற விக்னேஷ், எலி என்ற எலி விஜய், நாவற்குளத்தை சேர்ந்த வெற்றி மற்றும் கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பாலா என்பது தெரியவந்தது. இவர்களில் கிருஷ்ண குமாரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் விஷ்வா, பாலா உட்பட 3 பேர் போலீசாரிடம் சிக்கினர். தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய ரவுடியான லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ், எலி விஜய், நாவற்குளத்தை சேர்ந்த வெற்றி ஆகிய 3 பேரை தேடி வந்தனர். இதில் விக்கி என்ற விக்னேஷ் போலீசாரின் பிடியில் சிக்கினார். மற்ற 2 பேரையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட விக்கி மீது ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.






