என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
புதுவைக்கு இடஒதுக்கீடு கேட்டு நாளை ஆர்ப்பாட்டம்-அ.தி.மு.க. அறிவிப்பு
- ஜிப்மர் மருத்துவமனை எதிரில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- புதுவையில் போராட்டம் நடத்துவேன் எனக் கூறும் தி.மு.க. அமைப்பாளர் புதுவையை ஒட்டிய தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் போராட்டம் நடத்துவாரா?
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜிப்மரில் மருத்துவப் படிப்பில் 26.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது போல் வேலை வாய்ப்பிலும் 26 சதவீத இட ஒதுக்கீட்டை புதுவை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி 9-30 மணியளவில் ஜிப்மர் மருத்துவமனை எதிரில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாநிலத்தின் உரிமையை மீட்டெடுக்கும் இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் நிதியுதவி புதுவைக்கு படிப்படியாக குறைந்த நிலையில் மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் வரி போடப்படும் என கவர்னர் அறிவித்ததற்கு தி.மு.க. போராட்டம் நடத்துவோம் என மிரட்டல் விடுக்கிறது. வரி உயர்வைப் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
தமிழகத்தில் வரி உயர்த்தாமல் 5 ஆண்டு நல்லாட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. பொய்யான வாக்குறுதியை கொடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைத்த தி.மு.க. மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை, பஸ் கட்டணம் உள்ளிட்ட அனைத்திற்கும் வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை இழைத்து வருகிறது.
புதுவையில் போராட்டம் நடத்துவேன் எனக் கூறும் தி.மு.க. அமைப்பாளர் புதுவையை ஒட்டிய தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் போராட்டம் நடத்துவாரா?
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது புதுவை கிழக்கு மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அண்ணா தொழிற்சங்கப்பேரவை செயலாளர் பாப்புசாமி, தொகுதி செயலாளர் கமல்தாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.






