என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை
- தவளக்குப்பத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை
- மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
புதுச்சேரி:
புதுவை தவளக்குப்பம் வைசினவி குளம் நிவாஸ் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வருபவர் இளஞ்செழியன்(வயது33). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார்.
இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கும்பகோணத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
இந்த நிலையில் எதிர்வீட்டை சேர்ந்த சுந்தர் என்பவரின் மனவைி சுகந்தி இளஞ்செழியனுக்கு போன் செய்து உங்களது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இளஞ்செழியன் வீட்டுக்கு விரைந்து வந்தார்.
அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு இளஞ்செழியன் திடுக்கிட்டார்.
யாரோ மர்ம நபர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து இளஞ்செழியன் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.






