என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மாதா குளத்தில் புனித நீர் ஊற்றும் திருவிழா
- பிரான்ஸ் நாட்டின் லூர்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் ஊற்றப்படுகிறது.
- மாதா குளத்தின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக வில்லியனூர் விடி வெள்ளியே என்ற பாடல் வெளியிடப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்தன்னை ஆலயம் 147 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
ஆசியாவிலேயே தமிழர் பண்பாட்டின்படி கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்பாக குளம் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும். இயற்கையாக அமைந்துள்ள இந்த மாதா குளத்தின் கரைகள் 1924-ம் ஆண்டு அருட்தந்தை லெஸ்போன் என்பவரால் கட்டப்பட்டது.
பிரான்ஸ் லூர்து நகரில் பெர்னதெத் என்ற சிறுமிக்கு மாதா காட்சி கொடுத்த இடமான மசபியேல் குகையில் உள்ள அற்புத சுனையில் இருந்து கொண்டு வரப்படும் புனித நீரானது வில்லியனூர் மாதா திருத்தல குளத்தில் ஆண்டு தோறும் கலக்கப்பட்டு வருகிறது.
இந்த புனித நீரை பயன்படுத்தும் பக்தர்கள் பலவிதமான கண் நோய்கள். தோல் வியாதிகள் மற்றும் உடல் நோய்களில் இருந்து குணமாகி வருகின்றனர். வில்லியனூர் மாதா குளத்தை தொடர்ச்சியாக 7 சனிக்கிழமைகளில் பக்தியோடு சுற்றி வந்து ஜெபிக்கும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறி வருகின்றன.
இத்தகைய புதுமை மிகுந்த வில்லியனூர் மாதா குளத்தில் இந்த ஆண்டும் பிரான்ஸ் நாட்டின் லூர்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் ஊற்றப்படுகிறது.
வில்லியனூர் மாதா திருத்தலத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. காலை 6 மணிக்கு திருப்பலி, அதனை தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடைபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக மாலை 6 மணிக்கு புதுவை - கடலூர் உயர்மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் நடைபெறும் சிறப்புக் கூட்டு திருப்பலிக்கு பின்னர், பிரான்ஸ் லூர்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் வில்லியனூர் மாதா குளத்தில் ஊற்றும் சிறப்பு நிகழ்வு நடைபெற உள்ளது.
முன்னதாக அருள்நிறை ஆலயத்தில் நடைபெறும் திருப்பலிக்கு பின்னர் புனித நீர் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு ஊற்றப்படுகிறது. மாதா குளத்தின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக வில்லியனூர் விடி வெள்ளியே என்ற பாடல் வெளியிடப்பட உள்ளது.
இதன்பின்னர் இரவு 8 மணிக்கு லூர்து அன்னையின் ஆடம்பர தேர்பவனி மற்றும் நற்கருணை ஆசீருக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தல பங்குத் தந்தை ஆல்பர்ட் தலைமையில் லூர்தன்னை பள்ளி தலைமையாசிரியர் ஆல்வின் அன்பரசு , பங்கு பேரவையினர், இளைஞர் இயக்கத்தினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.






