என் மலர்
புதுச்சேரி

தீ விபத்தில் சேதம் அடைந்த வீடுகளை படத்தில் காணலாம்
குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்
- பாகூர் அருகே 2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல் ஆனது. இதில் ரூ.3லட்சம் பொருட்கள் சேதம் அடைந்தன.
- இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் இவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
புதுச்சேரி:
பாகூர் அருகே உள்ள ஆதிங்கப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமு (வயது 60), கூலி தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் இவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோமு தனது குடும்பத்தினருடன் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீ பிடித்து எரிந்த குடிசை மீது தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
அப்போது பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பரவி அருகில் உள்ள பாரதிராஜா வீட்டின் மடியில் மேல் கூரை வீட்டில் வசித்து வந்த கோவிந்தன் என்பவரின் வீட்டிலும், தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பாகூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 2 வீடுகளும், முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இதில் சோமு, கோவிந்தன் ஆகியோரது வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, துணிமணிகள், மின்சாதன பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்றவை தீயில் எரிந்து சேதமானது.
இதன் சேத மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார். இன்று காலை நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






