search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    10 நாட்களுக்கு பிறகு சந்திர பிரியங்கா அரசு விழாவில் பங்கேற்றதால் பரபரப்பு
    X

    10 நாட்களுக்கு பிறகு சந்திர பிரியங்கா அரசு விழாவில் பங்கேற்றதால் பரபரப்பு

    • சந்திர பிரியங்கா தங்கியுள்ள அரசு இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு இன்று வரை தொடர்கிறது.
    • வழக்கமாக அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசாணையில் உடனுக்குடன் வெளியிடப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அமைச்சரவையில் இடம் பெற்ற என்ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த 10-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அவர் தனது ராஜினாமா கடிதத்தில் சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதாக பரபரப்பு குற்றச்சாட்டும் கூறியிருந்தார். ஆனால் அவர் ராஜினாமா செய்யும் முன்பே பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கவர்னர் தமிழிசையும், சபாநாயகர் ஏம்பலம் செல்வமும் தெரிவித்தனர்.

    மேலும் அவரது பணி திருப்தி அளிக்காததால் முதலமைச்சர் ரங்கசாமி பதவி நீக்கத்துக்கு பரிந்துரை செய்தார் என்றும் கவர்னர் தெரிவித்திருந்தார்.

    வழக்கமாக அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசாணையில் உடனுக்குடன் வெளியிடப்படும்

    ஆனால் சந்திர பிரியங்கா விவகாரத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பும் அவர் வகித்து வந்த துறைகள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.

    அதோடு புதுவை கடற்கரை சாலையையொட்டி சந்திர பிரியங்கா தங்கியுள்ள அரசு இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு இன்று வரை தொடர்கிறது.

    இதனால் சந்திர பிரியங்கா பதவி நீக்கத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம் தனது தொகுதியில் நடந்த அரசு விழாவில் சந்திர பிரியங்கா பங்கேற்றார். காரைக்கால் பஞ்சாட்சபுரம் கிராமத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் குரும்பகரம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில் நடந்த மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி பொருட்காட்சி நடந்தது.

    இதன் தொடக்க விழாவில் சந்திர பிரியங்கா கலந்து கொண்டார். அவரை அரசு அதிகாரிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் சந்திர பிரியங்கா வழங்கினார். விழாவுக்கு அவர் தேசிய கொடி கட்டிய காரில் வந்தார்.

    மேலும் அந்த அரசு விழா குறித்த சந்திர பிரியங்காவின் செய்தி தொடர்பு வாட்ஸ்-அப் குழுவில் புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கவர்னர், சபாநாயகர் நீக்கப்பட்டதாக அறிவித்த பின்னும் அரசு விழாவில் சந்திர பிரியங்கா பங்கேற்றது புதுவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

    Next Story
    ×