search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் 300 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.38 லட்சத்தை இழந்த என்ஜினீயர்
    X

    புதுச்சேரியில் 300 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.38 லட்சத்தை இழந்த என்ஜினீயர்

    • கடந்த மாதம் 17-ந் தேதி முதலில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
    • அனைத்து டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் மூடக்கப்பட்டுவிட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பிருந்தாவனம் பகுதியை சேர்ந்தவர் சையது சலாம் (வயது 36). இவர், வெளிநாட்டில் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 3 மாதங்களாக புதுச்சேரியில் தங்கியிருந்தார். அப்போது இணைய வழி மோசடிக்காரர்கள் அவரை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு, நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்தால் அன்றைய தினமே உங்களுக்கு 30 சதவீத லாபம் கொடுப்போம் என்று கூறியுள்ளனர்.

    இதனை நம்பிய அவர், கடந்த மாதம் 17-ந் தேதி முதலில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்தவுடன் அவர்கள் சில யூடியூப் லிங்க்குகளை அனுப்பி அதில் அவரை சப்ஸ்கிரைப் செய்ய கூறியுள்ளனர்.

    அவர் செய்து முடித்தவுடன் ரூ.300 சேர்த்து ரூ.1,300 அவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர்.

    அன்றைய தினமே மீண்டும் ரூ.6 ஆயிரம் முதலீடு செய்தார். அவர்கள் சொன்ன டாஸ்கை முடித்தவுடன் ரூ.1,800 சேர்த்து ரூ.7.800 அவரது வங்கிக்கு வந்தது. அதன் கும்பல் அவரிடம், நீங்கள் எங்களுடைய பிரிமியம் கஸ்டமர் ஆகி விட்டதால் உங்களுடைய வங்கி கணக்கு இனி உங்கள் கம்ப்யூட்டரிலேயே தெரியும் எனவும், பணம் நேரடியாக உங்களுக்கு வராது என்றும் கூறியுள்ளனர்.

    இதனை நம்பி கடந்த 15 நாட்களில் மட்டும் ரூ.38 லட்சத்தை இணைய வழி மோசடிக்காரர்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

    அதன்பின், அவரது வங்கிக்கணக்கில் ரூ.52 லட்சம் பணம் இருப்பதாககாட்டியுள்ளது. மேலும், ஒரு இணையதளத்திலும் அவரை முதலீடு செய்யக்கூறினர். இறுதியாக, மேற்படி பணத்தை சையது சலாம் எடுக்க முயன்றார்.

    அப்போது, அவருடைய வங்கி கணக்கில் பணம் இல்லை என காட்டியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    மேலும், மோசடிக்காரர்களையும் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை தொடர்பு கொண்ட அனைத்து டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் மூடக்கப்பட்டுவிட்டது.

    இதனையடுத்து சலாம், புதுவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×