என் மலர்
உலகம்

ரஷிய அதிபர் புதினுடன் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்
லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
- உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 5வது மாதமாக நீடிக்கிறது.
- உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் மற்றும் அரசு பொது வழக்கறிஞரை அதிபர் ஜெலன்ஸ்கி நீக்கினார்.
Live Updates
- 13 July 2022 3:44 PM IST
கிழக்கு உக்ரைனில் மூன்று போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் இவ்று தெரிவித்துள்ளது.
- 13 July 2022 3:42 PM IST
தடைசெய்யப்பட்ட உக்ரேனிய தானியங்களை கருங்கடல் வழியாக உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஐக்கிய நாடுகளின் திட்டம் தொடர்பாக இஸ்தான்புல்லில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது, ரஷ்யா மற்றும் உக்ரைனின் ராணுவ அதிகாரிகள், நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- 12 July 2022 10:41 PM IST
ரஷியா உடனான போரினால் உக்ரைனில் பல மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. மற்ற மருத்துவமனைகள் குண்டுவீசி தாக்கப்பட்டுள்ளன. அங்குள்ள சுகாதார பணியாளர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் வேலையைச் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து கூடுதலாக 1.7 பில்லியன் டாலர் நிதி உதவியை உக்ரைன் பெற்றுள்ளது. இந்த நிதியின் மூலம் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது.
- 12 July 2022 6:48 PM IST
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் பல நகரங்களைக் கைப்பற்றியபோது உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.
இதற்கிடையே, உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட டிரோன்கள் உள்பட நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி வாகனங்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்கி வருகிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த வாரம் ஈரான் செல்கிறார். சிரியா விவகாரம் குறித்து ஈரான், துருக்கியுடன் நடைபெற உள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அதிபர் புதின் பங்கேற்க உள்ளார் என கிரெம்ளின் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 12 July 2022 2:03 PM IST
உக்ரைனில் நடக்கும் போரையும், ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா, மொசாம்பிக் மற்றும் மத்திய சஹேல் பிராந்தியத்தில் நடக்கும் மோதல்களையும், குழந்தைகளுக்கு எதிரான கொலைகள், தாக்குதல்கள், ஆட்சேர்ப்பு, கற்பழிப்பு மற்றும் பிற வகையான பாலியல் வன்முறைகள் உட்பட மீறல்களை கண்காணிக்கத் தொடங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
- 12 July 2022 6:39 AM IST
அனைத்து உக்ரைன் மக்களுக்கும் ரஷிய குடியுரிமை வழங்குவதை எளிமைப்படுத்தும் ஆணையில் அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா உக்ரைனின் கிழக்கில் உள்ள பிரிந்து சென்ற குடியரசுகளில் வசிப்பவர்களுக்கு விரைவான குடியுரிமை வழங்கும் நடைமுறையை செயல்படுத்த வருகிறது. தென்கிழக்கு கெர்சன் மற்றும் ஜாபோரிஸ்கா பகுதிகளில் வசிக்கும் உக்ரேனியர்களுக்கு குடியுரிமை வழங்குவதை ரஷ்யா நீடித்தது குறிப்பிடத்தக்கது.
- 12 July 2022 6:38 AM IST
கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் போர் விமானங்கள், பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் ரஷிய படைகளின் தாக்குதல்களில் குறைந்தது 8 பேர் உயிரிதுள்ளனர். ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்திய அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
- 11 July 2022 9:43 PM IST
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவத்திற்கு உதவுவதற்காக அந்நாட்டைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் போர்க்களத்தில் குதித்தனர். அவ்வாறு புதிதாக உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தவர்களுக்கு இங்கிலாந்தில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுமார் 10 ஆயிரம் உக்ரைன் வீரர்களுக்கு இங்கிலாந்து ராணுவத்தின் உதவியுடன் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, உக்ரைனில் இருந்து வீரர்களின் குழு ஒன்று இங்கிலாந்திற்கு சென்றது. அங்கு அவர்களுக்கு ஆயுதங்களை கையாள்வது, அவசரகால போர் நுணுக்கங்கள், போர்க்களத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி செய்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது என இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
- 11 July 2022 4:41 PM IST
கார்கிவ் நகரில் இன்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டு வெடித்து சிதறின. ரஷிய படைகள் நடத்திய இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 31 பேர் காயமடைந்ததாகவும் கவர்னர் தெரிவித்துள்ளார்.
- 11 July 2022 6:47 AM IST
கிழக்கு உக்ரைன் நகரமான சாசிவ் யாரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ரஷிய படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 15 பேர் கொல்லப்பட்ட நிலையில் மேலும் 20 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், எதிர் தாக்குதல் நடத்தும் நடவடிக்கையாக தெற்கே ரஷிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேறுமாறு மக்களிடம் உக்ரைன் ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது






