

மேற்காசியாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக சர்வதேச சந்தையில் பொருளாதாரம் தொடங்கி, எரிபொருள் என பலவகையான பிரச்சினைகள் உருவெடுத்து வருகின்றன. உலகளவில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும், சில நாடுகளில் கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு சூழலும் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், பாகிஸ்தானில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க, பாகிஸ்தான் அரசு பல சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் அலுவலகங்களில் பணிபுரிய வேண்டும் என்றும், 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் என்றும் அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்தார்.
முன்னதாக தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், "மேற்காசியாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானின் பொருளாதாரம் சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகிறது.
அடுத்த 2 மாதங்களுக்கு அரசு வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு 50 சதவீதம் குறைக்கப்படும். அதேபோல் 60 சதவீத அரசு வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்படும். அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் 2 மாதங்களுக்கு சம்பளம் பெறமாட்டார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 25 சதவீதம் குறைக்கப்படும். அரசு துறைகளுக்கு புதிய கார்கள், ஏ.சி.உள்ளிட்ட ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது," என்றார்.