search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கிரீஸ் நாட்டில் புதிய ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.. 2வது முறையாக பிரதமர் ஆனார் மிட்சோடாகிஸ்
    X

    கிரீஸ் நாட்டில் புதிய ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.. 2வது முறையாக பிரதமர் ஆனார் மிட்சோடாகிஸ்

    • தேர்தலுக்கு முன்பு நடந்த கருத்துக் கணிப்புகளில் ஆட்சி மீது பொதுமக்கள் அதிருப்தியுடன் இருந்தது தெரியவந்தது.
    • பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான சிரிசா கூட்டணி 48 இடங்களை பிடித்தது.

    ஏதென்ஸ்:

    கிரீஸ் நாட்டில் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு விவகாரம், பிப்ரவரி மாதம் நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்து போன்றவற்றால் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான ஆட்சி விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் இவரது அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிய வந்தது. இதனையடுத்து பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் (வயது 55) பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

    அதன்படி, கடந்த மே 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 300 தொகுதிகளை கொண்ட கிரீஸ் நாட்டில் ஆட்சியமைக்க 151 இடங்களை பெற வேண்டும். ஆனால் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை.

    இதனால் அங்கு நேற்று மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், பிரதமர் மிட்சோடாகிஸ் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி 158 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. மிட்சோடாகிஸ் 2வது முறையாக பிரதமராக பதவியேற்றார். பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான சிரிசா கூட்டணி 48 இடங்களை பிடித்தது.

    99.70% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மிட்சோடாகிசின் புதிய ஜனநாயக கட்சி 40.55% வாக்குகளை பெற்றது. சிரிசா கூட்டணி 17.84% சதவீத வாக்குகள் பெற்றது. கடந்த அரை நூற்றாண்டில் கிரீஸ் தேர்தல்களில் இதுவரை காணப்படாத மிகப்பெரிய வெற்றியாகும்.

    புதிய ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெற்றதையடுத்து, கிரீஸ் நாட்டின் ஜனாதிபதி கேதரீனா ஸகேல்லாரோபவுலவ், ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பிரதமராக பதவியேற்றார்.

    தேர்தலுக்கு முன்பு நடந்த கருத்துக் கணிப்புகளில் ஆட்சி மீது பொதுமக்கள் அதிருப்தியுடன் இருந்தது தெரியவந்தது. இதனால் புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கருத்துக்கணிப்புகளை மீறி கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் மாபெரும் வெற்றி பெற்று மறுபடியும் பிரதமராக பதவியேற்றுள்ளார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×