என் மலர்
உலகம்

லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
- உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 5வது மாதமாக நீடிக்கிறது.
- ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மெலிடோபோல் நகரில் உக்ரைன் படைகள் இன்று உக்கிரமான தாக்குதலை நடத்தி உள்ளன.
Live Updates
- 28 Jun 2022 3:47 PM IST
உக்ரைனில் நடந்து வரும் போருக்குப் பிறகு ஐரோப்பிய பாதுகாப்புக்கு ரஷ்யா முன்பை விட பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று பிரிட்டிஷ் ராணுவத்தின் தலைமைப் பொதுப்பணியாளர் பேட்ரிக் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், அவர், "ரஷ்யாவின் வழக்கமான திறன் குறைந்தபட்சம் ஒரு காலத்திற்கு குறைக்கப்படும் என்றும் ரஷ்யாவின் நிலங்களை மீட்டெடுப்பதற்கான சமீபத்தில் புடினின் அறிவிக்கப்பட்ட நோக்கம் இன்னும் கடுமையானதாக மாறும" என்றும் அவர் கூறினார்.
- 28 Jun 2022 3:32 PM IST
ஜி7, ஐந்து வளர்ந்து வரும் சக்திகள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத போரை கண்டிப்பதாக வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 28 Jun 2022 3:00 PM IST
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய படையினர், அந்நாட்டின் முக்கிய நகரமான கிரெமென்சுக் பகுதியில் உள்ள வணிக வளாகம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
- 28 Jun 2022 6:54 AM IST
ரஷியாவிற்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு மேலும் கனரக ஆயுதங்களை வழங்க வேண்டும் என்றும், ரஷியா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும், நட்பு நாடுகளுக்கு உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷியா நடத்தி வரும் தாக்குதல் மனிதகுலத்திற்கு ஒரு அவமானம் என்றும், அதன் விளைவுகளை அந்நாடு சந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 28 Jun 2022 6:54 AM IST
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய உக்ரைன் நகரமான கிரெமென்சுக் பகுதியில் உள்ள வணிக வளாகம் மீது ரஷிய படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக பொல்டாவா பிராந்திய ஆளுநர் டிமிட்ரோ லுனின் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 28 Jun 2022 6:53 AM IST
உக்ரைன் கிழக்கு நகரமான லிசிசான்ஸ்கில் தண்ணீர் சேகரிக்கச் சென்ற பொதுமக்கள் 8 பேர் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக லுகான்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஜி கெய்டே தெரிவித்தார். 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷியா வேண்டுமென்றே உக்ரைன் பொதுமக்களை குறிவைப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
- 27 Jun 2022 6:07 PM IST
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு ஜெர்மனியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். இன்று காணொலி வாயிலாக ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
- 27 Jun 2022 10:56 AM IST
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று ஜி7 மாநாட்டில் உரையாற்ற உள்ளார். அப்போது, உலக நாடுகள் தங்களுக்கு வழங்கி வரும் ஆதரவை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வார்.
- 27 Jun 2022 7:01 AM IST
ரஷியாவிற்கு எதிராக மேலும் பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து விவாதிக்க ஜெர்மனியில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூடியுள்ள நிலையில், உக்ரைன் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது காட்டுமிராண்டிதனம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். கீவ்வில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷியா நடத்திய தாக்குதல், உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் சர்வதேச சமூகத்தின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை காட்டுவதாக ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.
- 27 Jun 2022 6:59 AM IST
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மழலையர் பள்ளி மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. குறைந்தது 2 குடியிருப்பு கட்டிடங்கள் தாக்கப்பட்டதாகவும், தீப்பிடித்து எரிந்த அந்த கட்டிடங்களில் இருந்தவர்களை மீட்கும் பணியில் உக்ரைன் மீட்புக்குழு ஈடுபட்டதாக அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.






