search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    10-ந்தேதி வரை கெடு: கனடா தூதரக அதிகாரிகள் இந்தியாவில் இருந்து வெளியேறினர்
    X

    10-ந்தேதி வரை கெடு: கனடா தூதரக அதிகாரிகள் இந்தியாவில் இருந்து வெளியேறினர்

    • நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜென்சிகளுக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.
    • இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப அழைத்து கொள்ளுமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியது.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்தார். நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜென்சிகளுக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.

    இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. இவ்விவகாரத்தால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. கனடாவில் இருந்து இந்திய தூதரை வெளியேற கனடா அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் கனடா நாட்டு தூதரை வெளியேற உத்தரவிட்டது. இதற்கிடையே இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப அழைத்து கொள்ளுமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியது. இதற்கு வருகிற 10-ந் வரை காலக்கெடு விதித்தது.

    இந்நிலையில் இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் மலேசியா அல்லது சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    வருகிற 10-ந் தேதி கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுமாறு இந்தியா கேட்டுக் கொண்டதையடுத்து அவர்கள் இந்தியாவுக்கு வெளியே பணியாற்ற கனடா அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவில் உள்ள பெரும்பாலான தூதர்களை மலேசியாவின் கோலாலம்பூர் அல்லது சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்துள்ளதாக கனடா நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    அதே வேளையில் இது தொடர்பாக இந்திய அதிகாரிகளோ அல்லது கனடா அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

    Next Story
    ×