search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு
    X

    இலங்கையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு

    இலங்கையின் தலைநகரான கொழும்புவில் இன்று காலை மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி ருவான் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார். #BombFoundinSrilanka #RuwanWijewardene
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில்  தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் நேற்று மாலை நிலவரப்படி, 321 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்பின்னர், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் பலர் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 359 ஆக உயர்ந்துள்ளது. இதில் 45 பேர் குழந்தைகள் ஆவர்.



    ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார். எனவே, வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி ருவான் விஜயவர்த்தனே கூறுகையில், ‘தலைநகர் கொழும்புவில் உள்ள சவாய் திரையரங்கு அருகே மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு கண்டறியப்பட்டது.  இதனை நிபுணர்கள் அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர்.  

    இரண்டு குழுக்களாக பிரிந்து பயங்கரவாத கும்பல் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. இதில் ஒரு குழுவின் தலைவர் மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.  இன்னும் 2 நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் குறித்து உறுதி செய்யப்படும்’ என கூறினார்.  #BombFoundinSrilanka #RuwanGunasekara 
    Next Story
    ×