மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் இன்று மாலை ரெயில் மறியல் போராட்டம்

ராமேசுவரத்தில் கடந்த 2 வாரங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தங்கச்சிமடம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் இன்று மாலை ரெயில் மறியல் போராட்டம்
Published on

ராமநாதபுரம்:

வங்களாவிரிகுடாவில் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க சென்றபோது எல்லை தாண்டி வந்ததாக கூறி கடந்த மாதம் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்து சென்றது. அடுத்தடுத்து மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேசுவரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரத்தில் கடந்த 2 வாரங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 11-ந்தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு மாவட்ட நிர்வாகம், மீனவ சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்படாததால் இன்று 9-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடிக்கிறது. இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

தற்போது வரை ரூ.10 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருமானமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் இன்று (19-ந்தேதி)ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாலை 4 மணிக்கு தங்கச்சிமடம் ரெயில் நிலையம் திரளும் ராமேசுவரம் மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அதனை தொடர்ந்து தாம்பரம் விரைவு ரெயிலை மறித்து போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக தங்கச்சிமடம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com