என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் முற்றுகை
- தனியார் நிறுவனம் ஒன்று டெண்டர் எடுத்திருப்பதாக கூறி எங்களுக்கு வரும் காலிபாட்டில்களை தடுத்து எடுத்து செல்கின்றனர்.
- நீதிமன்ற உத்தரவின்படி காலிபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரவேற்கிறோம்.
திருப்பூர்:
காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ.10 பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டம், திருப்பூர் உள்பட ஒரு சில மாவட்டங்களில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை பார் உரிமையாளர்கள் வரவேற்றாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், பல்வேறு குளறுபடி நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பார் உரிமையாளர்கள், இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் டாஸ்மாக் மதுக்கூட உரிமம் பெற்று தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலிபாட்டில்களை சேகரித்து கொள்ளும் உரிமம் பெற்று வருகிறோம். தற்போது எங்கள் கடையில் சேகரமாகும் பாட்டில்களை தனியார் நிறுவனம் ஒன்று டெண்டர் எடுத்திருப்பதாக கூறி எங்களுக்கு வரும் காலிபாட்டில்களை தடுத்து எடுத்து செல்கின்றனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
எங்களுக்கு உரிமம் இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், எங்களது வியாபார நஷ்டத்தை சரி செய்து, சுமூகமான வியாபாரம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீதிமன்ற உத்தரவின்படி காலிபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரவேற்கிறோம். அதே நேரம் காலிபாட்டில்களால் ஏற்படும் நஷ்டத்தை மட்டும் ஈடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.






