என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊர்மெச்ச நடந்த காதணி விழா: 20 இரட்டை மாட்டு வண்டிகளில் 200க்கும் மேற்பட்ட சீர்வரிசை
    X

    ஊர்மெச்ச நடந்த காதணி விழா: 20 இரட்டை மாட்டு வண்டிகளில் 200க்கும் மேற்பட்ட சீர்வரிசை

    • இரட்டை மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சீர்வரிசை பொருட்களுடன் ஊர்மெச்ச காதணி விழா நடத்தியுள்ளார்.
    • இருசக்கர வாகனத்தை இரட்டை மாட்டு வண்டியில் ஏற்றி தனது அக்காள் கணவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொங்கபட்டி கிராமத்தில் பூ விவசாய குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்குமார்-மாலியபுரம் தம்பதியினருக்கு அஸ்வினி மற்றும் தாமோதரன் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். தாய் மாலியபுரம் உடன் பிறந்த சகோதரர் வேல்முருகன், தனது சகோதரி குழந்தைகளுக்கு காதணி விழா செய்வதற்காக 200-க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்களுடன் எ.காமாட்சிபுரத்திலிருந்து எ.கொங்கப்பட்டி கிராமத்திற்கு சுமார் 4 கி.மீ. தூரம் 20-க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சீர்வரிசை பொருட்களுடன் ஊர்மெச்ச காதணி விழா நடத்தியுள்ளார்.

    இருசக்கர வாகனத்தை இரட்டை மாட்டு வண்டியில் ஏற்றி தனது அக்காள் கணவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். மேலும் இரட்டை சீர் என்று சொல்லக்கூடிய பித்தளை பானை, அண்டா, பித்தளை குடங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் இரட்டை எண்ணிக்கையில் சீராகவும், உப்பு, மிளகாய், மஞ்சள் பொடி, இரட்டை மாலை, இனிப்பு, கார வகைகள் என அனைத்தும் பாரம்பரியம் மாறாமல் சீர்வரிசையாக கொண்டு வந்தார்.

    தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு தமிழர் கலைகளுடன் தாரை தப்பட்டை, வான வேடிக்கை சகிதம் ஆட்டுக்கிடாய், வெள்ளி பாத்திரங்களுடன் காதணி விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பெண் குழந்தையான அஸ்வினிக்கு 5 பவுனில் தோடு அணிவித்துள்ளார். நிறைவாக சம்பிரதாயப்படி அசைவ விருந்து வழங்கப்பட்டு மொய் வாங்கப்பட்டு காதணிவிழா நடைபெற்றது. சொந்த பந்தங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×