என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் யாராவது குளிக்கிறார்களா என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இதனால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக இரு அணைகள் இந்த ஆண்டில் 4-வது முறையாக நிரம்பின.
3-வது நாளாக நேற்றும் கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவான 124.80 அடியுடன் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 79 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 29 ஆயிரத்து 822 கனஅடி திறக்கப்பட்டது.
இதேபோல், கபினி அணையின் நீர்மட்டம் 2,283.96 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 709 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 583 கனஅடி திறக்கப்பட்டது.
இந்த இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 32 ஆயிரத்து 405 கனஅடி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்றுகாலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையானது தொடர்ந்து 6-வது நாளாக நீடிக்கிறது.
நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 5-வது நாளாக நீடிக்கிறது.
இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்து காவிரி ஆற்றின் கரையில் நின்றவாறு ஆற்றில் பாய்ந்து ஓடும் தண்ணீரை ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மீன் சாப்பாடு, பொறித்த மீன்கள் வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் யாராவது குளிக்கிறார்களா என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






