என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது: 5-வது நாளாக பரிசல் இயக்க, அருவியில் குளிக்க தடை
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது: 5-வது நாளாக பரிசல் இயக்க, அருவியில் குளிக்க தடை

    • மெயின் அருவி, சினிபால்ஸ் உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    ஒகேனக்கல்:

    கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று இரவு வினாடிக்கு 35 ஆயிரத்து 999 கனஅடி நீர் வந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரத்து 49 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

    கபினி அணைக்கு நேற்று இரவு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் 66 ஆயிரத்து 49 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது.

    இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ் உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பாறைகளே தெரியாத அளவுக்கு ஐந்தருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 5-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×