என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
- ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்பட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி, கரையோரங்களில் குளிக்க 3-வது நாளாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி:
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழக காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் நேற்று வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 22 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்தது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்பட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி, கரையோரங்களில் குளிக்க 3-வது நாளாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பரிசல் சவாரிக்கு தடை ஏதும் இல்லை. விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் அவர்கள் அருவியில் குளிக்க தடைவிதிப்பால் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.
நீர்வரத்து அதிகரிப்பால் தாசில்தார் பிரசன்ன மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், மணிவண்ணன் மற்றும் வருவாய் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






