என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே அலங்கார நுழைவு வாயில் விவகாரம் - கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
    X

    திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே அலங்கார நுழைவு வாயில் விவகாரம் - கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

    • மலைக்கோட்டைக்கு உள்ளேயும், அதனைச் சுற்றியும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் அமைந்துள்ளன.
    • மலைக்கோட்டையில் உள்ள அய்யன் குளத்தை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை

    மதுரை:

    திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த செந்தில்வேலு என்பவர் மதுரை ஐகோர்ட்டு மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதி தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் பிரபலமான சுற்றுலா தளம். மலைக்கோட்டை பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவாயில்கள் உள்ள நிலையில், அனைத்து நுழைவாயில்களிலும் காவலர்கள் நியமிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மலைக்கோட்டைக்கு உள்ளேயும், அதனைச் சுற்றியும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் அமைந்துள்ளன. இவை மலைக்கோட்டையின் தனித்தன்மையும், பழமையும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளன. மலைக்கோட்டையில் உள்ள அய்யன் குளத்தை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அக்குளம் குப்பை கூழங்கள் நிறைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.

    அதோடு திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே கிறித்தவ அலங்கார வளைவும் அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இவை தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் மனு அளித்து எவ்வித பயனும் இல்லை. ஆகவே திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அய்யன் குளத்தை சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்கவும், அப்பகுதியில் வழிபட அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும். அதோடு மலைக்கோட்டை அருகிலேயே கிறிஸ்தவ அலங்கார நுழைவு வாயில் அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் அமர்வு, திண்டுக்கல், மலைக்கோட்டை அருகே கிறிஸ்தவ அலங்கார நுழைவு வாயில் அமைக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையை தொடரவும், வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஜூன் 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    Next Story
    ×