என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகும் டிட்வா புயல்- சென்னை வானிலை ஆய்வு மையம்
    X

    அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகும் டிட்வா புயல்- சென்னை வானிலை ஆய்வு மையம்

    • தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது.
    • சென்னைக்கு 730 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்தது. ஏரி, குளங்கள், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

    இந்நிலையில் மலாக்கா ஜலசக்தி பகுதியில் புயல் உருவானது. இது இந்தோனேசியாவில் கரையை கடந்தது. அதன் பின்னர் இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து மலாக்கா ஜலசக்தி பகுதியில் நிலவுகிறது.

    இது கிழக்கு தென்கிழக்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். அது படிப்படியாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

    இந்த நிலையில் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி நேற்று நள்ளிரவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.

    தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னைக்கு 730 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த புயலுக்கு 'டிட்வா' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புயல் அதற்கடுத்த 48 மணிநேரத்தில் (29-ந்தேதி) வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை அதிகாரி செந்தாமரை கண்ணன் தெரிவித்தார்.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் வடகடலோர தமிழக மாவட்டங்களாகும்.

    புயல் உருவாவதால் இன்று (வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    29-ந்தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகனமழை பெய்யும்.

    சென்னை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    30-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 1-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும்.

    Next Story
    ×