என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எண்ணூர் அனல் மின்நிலைய விபத்தில் 9 தொழிலாளர்கள் பலி.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
- எண்ணூர் அனல் மின்நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
- உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
சென்னை அருகே எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எண்ணூர் அனல் மின்நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென சாரம் சரிந்து விழுந்ததில் 9 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதவில், " எண்ணூரில் BHEL நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மின்துறை அமைச்சர் சிவகுமார் அவர்களையும், TANGEDCO தலைவர் ராக்ரி அவர்களையும் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 இலட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.






