search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பல் பிடுங்கிய விவகாரம்: வி.கே.புரம் சப்-இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு காவலர் பெயர்களும் வழக்கில் சேர்ப்பு
    X

    பல் பிடுங்கிய விவகாரம்: வி.கே.புரம் சப்-இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு காவலர் பெயர்களும் வழக்கில் சேர்ப்பு

    • நேற்று பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த 7 பேருக்கு சம்மன் அனுப்பினார்.
    • வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார்களை துன்புறுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அம்பை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட சுபாஷ் என்பவர் அளித்த புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி விசாரணை நடத்தி, உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மற்றும் சிலர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார்.

    இந்நிலையில் அம்பை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அருண்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு நேற்று பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த 7 பேருக்கு சம்மன் அனுப்பினார்.

    தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். அதில் ஏ.எஸ்.பி. பெயரை குறிப்பிட்டு மற்றும் சிலர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுவரை நடந்த அனைத்து வித அதிகாரிகளின் விசாரணைகளிலும் பல்வீர்சிங் மற்றும் சிலர் என்று மட்டுமே முதல் தகவல் அறிக்கையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    ஆனால் தற்போது புதிய திருப்பமாக மேலும் 2 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங், வி.கே.புரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய தனிப்பிரிவு காவலர் போகன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார்களை துன்புறுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அம்பை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக அருண்குமார் தரப்பை சேர்ந்த 7 பேர் நாளை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில் அவரது எதிர்ப்பு தரப்பான செல்லப்பா உள்பட 8 பேருக்கும் நாளை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    Next Story
    ×