என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விடிய, விடிய பெய்த மழையால் வெள்ளக்காடாக மாறிய ஓசூர் பஸ் நிலையம்
- தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது.
- கனமழை காரணமாக ஓசூரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
ஓசூர்:
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. ஓசூரில் இரவு லேசாக மழை பெய்ய தொடங்கியது.
நேரம் செல்ல, செல்ல மழையின் வேகம் அதிகரித்து இரவு முழுவதும் மழை பெய்தவாறு இருந்தது. தொடர்ந்து காலை 8 மணி வரையிலும் பலத்த மழை பெய்தது.
கனமழை காரணமாக ஓசூரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. ஓசூர் பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நின்று குளம் போல் காட்சியளித்தது.
இவ்வாறு நகரின் பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
மேலும், காலையில் தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கு செல்வோரும் பாதிப்படைந்தனர். பலத்த மழையாலும், தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதாலும் ஓசூர் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை அருகே பட்டாளம்மன் கோவில் தெருவில் உள்ள அரசு ஊராட்சி பள்ளியின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.






