search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வருகிற 9 மற்றும் 15-ந்தேதிகளில் நெல்லை, தென்காசி-திருச்செந்தூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்
    X

    வருகிற 9 மற்றும் 15-ந்தேதிகளில் நெல்லை, தென்காசி-திருச்செந்தூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்

    • சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்கள் எப்போதும் அதிக அளவு வருவாயை கொடுக்கும் வழித்தடங்கள் கொண்டதாகவே உள்ளது.
    • சிக்னல்களுக்காக பெரும்பாலான ரெயில் நிலையங்களில் ரெயில்கள் மணிக்கணக்கில் காத்து நின்று செல்வதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை-தென்காசி இடையே வருகிற 9-ந்தேதி சுமார் 121 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. இதேபோல் நெல்லை-திருச்செந்தூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது.

    சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்கள் எப்போதும் அதிக அளவு வருவாயை கொடுக்கும் வழித்தடங்கள் கொண்டதாகவே உள்ளது. ஆனால் சிக்னல்களுக்காக பெரும்பாலான ரெயில் நிலையங்களில் ரெயில்கள் மணிக்கணக்கில் காத்து நின்று செல்வதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

    இதன் காரணமாக நெல்லை-தென்காசி, திருச்செந்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகளுடன், பாதைகள் பலப்படுத்தப்பட்டு வேகம் அதிகரிக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக 64 கிலோமீட்டர் நீளம் கொண்ட நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடம் 2012-ல் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது.

    ஆனால் தற்போது வரை 70 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே அந்த பாதையில் ரெயில்கள் இயங்கி வருகிறது. அதன் வேகத்தை அதிகரிக்கும் வகையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தென்காசி வரை 121 கிலோமீட்டர் அதிவேகத்தில் ரெயில் இயக்கி சோதனை செய்யப்பட இருக்கிறது.

    வருகிற 9-ந்தேதி நெல்லையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் அதிவேக ரெயிலானது 10.15 மணிக்கு தென்காசி சென்றடையும். மறுமார்க்கத்தில் தென்காசியில் இருந்து 10.45 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 12 மணிக்கு நெல்லை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சோதனை முடிந்த பின் நெல்லையில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 8.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

    இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ரெயில் தண்டவாளங்கள் பலப்படுத்தப்பட்டு மின்மயமாக்கல் பணிகள் முடிந்தவுடன் அட்டவணை மாற்றம் செய்யப்பட்டு ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்.

    குறிப்பாக நெல்லை-சென்னை இடையே இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து விட்டதால் 8 மணி நேரத்தில் சென்னை செல்லும் வகையில் பகல் நேர தேஜாஸ், வந்தே பாரத் போன்ற ரெயில்கள் இயக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×