search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்டியலின வாலிபர்கள் மீது தாக்குதல்: தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குனர் நேரில் விசாரணை
    X

    தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குனர் விசாரணை நடத்திய காட்சி


    பட்டியலின வாலிபர்கள் மீது தாக்குதல்: தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குனர் நேரில் விசாரணை

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களையும் சந்தித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், ஆர்.டி.ஓ. ஷேக் அயூப் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மணி மூர்த்திஸ்வரம் தாமிர பரணி ஆற்றங்கரையில் அப்பகுதியை சேர்ந்த பட்டியல் இன வாலிபர்கள் மாரியப்பன், மனோஜ்குமார் ஆகியோரை கடந்த 30-ந்தேதி அங்கு நின்ற கும்பல் தாக்கி அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் துரித விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட இருவரும் நெல்லை பன்னோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குனர் ரவிவர்மன் இன்று நெல்லைக்கு, வந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். முதலாவதாக சம்பவம் நடந்த மணி மூர்திஸ்வரம் ஆற்றுப்பகுதியை பார்வையிட்டார். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களை சந்தித்து நடந்த சம்பவங்களை கேட்டறிந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மணி மூர்த்தீஸ்வரம் சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் நேரில் சென்று விசாரணை செய்ய உத்தரவிட்டத்தின் பேரில் இன்று நெல்லையில் ஆய்வு செய்துள்ளேன். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டோம். அவர்களின் குடும்பச்சூழல் குறித்தும் விசாரிக்கப்பட்டது.

    தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களையும் சந்தித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா? தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இருந்த போதும் நாங்களும் சம்பவம் குறித்து விசாரணை செய்துள்ளோம். இந்த விசாரணை குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவரிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், ஆர்.டி.ஓ. ஷேக் அயூப் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×